வியாழன், 12 ஜூலை, 2018

8 வழிச்சாலை ...என் நிலம்- என் உரிமை’: சேலம் நோக்கி மார்க்சிஸ்ட் நடைபயணம்!

மார்க்சிஸ்ட் நடைபயணம்-
tamil.thehindu.com :  சென்னை - சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்தில் பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ‘என் நிலம் என் உரிமை’ என்ற நடை பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுக் கூட்டம் ஜூலை 10-11 தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இரண்டாம் நாள் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:
“நரேந்திர மோடி தலைமையிலான கடந்த நான்காண்டு கால ஆட்சியில் இந்திய மக்களின் வாழ்வாதாரம் திட்டமிட்டு சூறையாடப்படுகிறது. நவீன தாராளமயமாக்கல் கொள்கையின் அடிப்படையில் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காகவே அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுகின்றன. மறுபுறத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிகழ்ச்சி நிரலை திணிக்கும் வகையில் இந்துத்துவா மதவெறி நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசன உரிமைகள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்படுகிறது. மக்களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகின்றன. பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி நடைமுறைப்படுத்தப்பட்டதால் அனைத்துப் பகுதி மக்களின் வாழ்நிலையும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கடந்த நான்காண்டுகளில் 11 முறை பெட்ரோலியப் பொருட்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு பெரும் விலை உயர்வை சந்திக்க வேண்டியுள்ளது.

பொதுத்துறை வங்கிகளுக்கு பெருமுதலாளிகள் செலுத்த வேண்டிய 2.5 லட்சம் கோடி கடன் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, மேலும் பெருமளவு முதலாளிகளின் வாராக் கடன்களை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. விவசாயிகளின் துயரம் தொடர்கதையாகிறது. விவசாய விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. வேலைவாய்ப்பு பெருமளவு சுருங்கியுள்ளது.
மறுபுறத்தில் இந்துத்துவா கொள்கைகளைத் திணிக்கும் வகையில் தலித் மற்றும் சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. பசு பாதுகாப்பு மற்றும் சமூக ஒழுக்கப் பாதுகாப்பு என்ற பெயரில் தனியார் குண்டர் படைகள் உருவாக்கப்பட்டு படுகொலைகள் அதிகரித்துள்ளன. உயர் கல்வி நிறுவனங்கள் மதவெறிமயமாக்கப்படுகின்றன. பெண்கள் - குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன.
தமிழகத்தில் அலை அலையாகப் பிரச்சினைகள் எழுந்து மக்களின் வாழ்வை அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றன. காவிரி பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட நீண்ட, நெடிய போராட்டத்தை நடத்தினோம். அதை தொடர வேண்டிய அவசியமும் உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென கோரிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு 13 பேர் கொல்லப்பட்டனர். தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாரின் அத்துமீறல், அடக்குமுறை இன்னமும் தொடர்கிறது.
சேலம் - சென்னை பசுமை வழிச்சாலைக்கு நிலம் தர மறுக்கும் விவசாயிகள் கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர். கிராம மக்கள் வீட்டுச் சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ளது போன்ற நிலை உள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், ஜனநாயக இயக்கங்கள், நிலப்பறிப்பை எதிர்த்துப் போராடும் போது சிறை, தாக்குதல்கள் என கடும் அடக்குமுறை ஏவி விடப்படுகிறது. விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கச் சென்றால் வெளியிலிருந்து யாரும் வரக்கூடாது என மிரட்டுகிறது காவல்துறை.
உயர் மின்கோபுரங்கள், விமான நிலைய விரிவாக்கம் என விவசாயிகளின் ஒப்புதலின்றி நிலப்பறிப்பு தொடர்கிறது. தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை போல காவல்துறையின் தர்பார் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
பொதுக்கூட்டம், தெருமுனைக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி பெறுவதற்கு கூட பெரும் சிரமத்தை சந்திக்க வேண்டியிருக்கிறது. ஜனநாயக உரிமைகளுக்காக கூட்டம் நடத்த இடம் தரக் கூடாது என மண்டப உரிமையாளர்கள் மிரட்டப்படுகின்றனர். அரங்க கூட்டங்களுக்கும் கூட அனுமதி மறுக்கப்படுகிறது. அரசுக்கு எதிராக குரல் கொடுக்க முயலும் ஊடகங்களின் குரல்வளையும் நெறிக்கப்படுகிறது.
கோவையில் குடிநீர் விநியோகம் சூயஸ் என்கிற பிரான்ஸ் பன்னாட்டு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து பிரச்சாரம் செய்யக் கூட அனுமதி மறுக்கப்படுகிறது. மாநில உரிமையை மறுக்கும் வகையில் ஆளுநரின் அத்துமீறலும், அடாவடியும் தொடர்கிறது. ஆளுநர் மீதான பாலியல் புகாரும் மூடி மறைக்கப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்ந்து தள்ளி வைக்கப்படுகிறது. இதனால் உள்ளாட்சி ஜனநாயகம் பாதிக்கப்படுவதோடு, சுகாதாரம், குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அடிப்படை பணிகள் முடங்கியுள்ளதோடு, தமிழகத்திற்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய சுமார் ரூ.5000 கோடி நிதியும் முடங்கியுள்ளது.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளதோடு, தமிழகம் மிகப்பெரும் கடன் வலையில் சிக்கி மீளமுடியாத அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் விவாதிக்க வேண்டிய சட்டப்பேரவைக் கூட்டம் சம்பிரதாயமாக முடிக்கப்படுகிறது.
இந்தப் பின்னணியில் தமிழக மக்களின் வாழ்வுரிமை, கருத்துரிமையைப் பாதுகாக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து போராட வேண்டியது அவசியமாகிறது. கருத்துரிமை மற்றும் ஜனநாயக உரிமைகளை வலியுறுத்தியும், அரசு மற்றும் காவல்துறையின் அடக்குமுறைகளைக் கண்டித்தும் தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது என்றும், சென்னையில் கருத்துரிமை பாதுகாப்பு மாநாடு நடத்துவது என்றும் கட்சியின் மாநிலக்குழு முடிவு செய்துள்ளது.
கோவையின் குடிநீர் விநியோகத்தை பன்னாட்டு நிறுவனத்திற்கு ஒப்படைப்பதை எதிர்த்து கோவை மாநகரம் முழுவதும் வார்டு வாரியாக விரிவான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்வது எனவும் மாநிலக்குழு முடிவு செய்துள்ளது.
சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் என்கிற பெயரில் விவசாயத்தையும், சுற்றுச்சூழலையும், ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தையும் சூறையாடுவதை எதிர்த்து - திருவண்ணாமலையிலிருந்து சேலம் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடை பயண இயக்கம் மேற்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 1-ம் தேதி அன்று திருவண்ணாமலையிலிருந்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் பாதிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுடன் “என் நிலம், என் உரிமை” என்ற முழக்கத்தோடு நடைபயணம் புறப்படுகிறது.
மத்திய மோடி அரசின் நவீன தாராளமயமாக்கல் கொள்கை மற்றும் மதவெறி நடவடிக்கைகளை எதிர்த்து 2018 ஆகஸ்ட் 9-ம் தேதி நாடு தழுவிய அளவில் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் நடத்தவுள்ள சிறை நிரப்பும் போராட்டத்தையும், 2018 செப்டம்பர் 5-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி நடைபெறவுள்ள பேரணியையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுக் கூட்டம் முழுமையாக ஆதரிக்கிறது. இந்த இயக்கங்களை தமிழகத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டுமென அனைத்து தரப்பினரையும் மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.”
இவ்வாறு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: