புதன், 11 ஜூலை, 2018

மேட்டூர் அணையின் நீர் மட்டம் உயர்வு!

மேட்டூர் அணையின் நீர் மட்டம் உயர்வு!minnambalam.com : தென்மேற்கு பருவமழையால் கர்நாடகாவில் தொடர்ந்து கனமழை கொட்டி வருவதால், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
அதன்படி, கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் நீரை திறந்துவிடுமாறு அதிகாரிகளுக்கு நேற்று(ஜூலை 10) முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டிருந்தார். இதனால், தற்போது அதிகபட்சமாக விநாடிக்கு 50 ஆயிரம் கன அடி நீர் தமிழகத்துக்கு திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. அணைகளின் பாதுகாப்பை கருதி, நீரை திறந்துவிடுமாறு பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும்,காவிரி நீர்ப்பாசன கழக அதிகாரிகளுக்கு, ஜூலையில் தமிழகத்துக்கு திறக்க வேண்டிய 31.24 டிஎம்சி நீரை கபினி, ஹாரங்கி,ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளில் இருந்து திறந்துவிடுமாறு உத்தரவிட்டுள்ளார். இதனால்,தமிழகத்துக்கு விநாடிக்கு 50 ஆயிரம் கன அடி நீர் வீதம் காவிரியில் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காவிரி நீர்ப்பாசன கழக அதிகாரிகள் அறிக்கையில், மாண்ட்யா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர் மட்டம் 112.70 அடியாக (மொத்த கொள்ளளவு 124.80 அடி) உயர்ந்திருக்கிறது. அணைக்கு விநாடிக்கு 31,490கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் 3571 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 2859 அடி உயரத்தில் உள்ள‌ ஹாரங்கி அணையின் நீர்மட்டம் 2856.79 அடியாக உயர்ந்திருக்கிறது. விநாடிக்கு 12168 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் 13406 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கடல் மட்டத்தில் இருந்து 2922 அடி உயரத்தில் உள்ள ஹேமாவதி அணையின் நீர்மட்டம் 2910.58 அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 10447 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 2350 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மைசூரு மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 2284 அடி உயரத்தில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 2282.14 அடியாக அதிகரித்துள்ளது. கபினி அணைக்கு விநாடிக்கு 35685 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால், 36875 கன அடி நீர் மதகுகள் மூலம் திறக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி அணைகளில் இருந்து மைசூரு, மாண்ட்யா மாவட்ட விவசாயிகளுக்கு போக, விநாடிக்கு 50 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த வருடம் அதிகபட்சமாக 50 ஆயிரம் கன அடி நீர் தமிழகத்துக்கு திறக்கப்பட்டுள்ளதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து, 68 புள்ளி நான்கு இரண்டு அடியாக உள்ளது. நீர் இருப்பு 31 புள்ளி மூன்று ஆறு டி.எம்.சி.யாக உள்ள நிலையில், குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கர்நாடகா - தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்துக்கொண்டிருக்கிறது. இதனால், கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதனால், விவசாயிகள் இந்த வருடம் குருவை, சம்பா சாகுபடி செய்வதற்கான தண்ணீர் வரும் என்பதால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: