ஞாயிறு, 8 ஜூலை, 2018

சின்னக்குத்தூசிக்கு “மூன்றாம் கலைஞர்” காட்டிய மரியாதையின் லெட்சணம்

LR Jagadheesan : திருமாவேலன் கலைஞர் தொலைக்காட்சியில் சேர்ந்திருப்பதற்கு எதிராக பொங்கும் திமுகவினரைப்பார்த்து அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.
திமுக தலைவர் மு கருணாநிதியையும் குஷ்புவையும் தொடர்புபடுத்தி ஆபாசத்தின் உச்சிக்கே சென்று குமுதம் குழும இதழ் ஒன்று coverstory வெளியிட்டது. அப்போது அதே குமுதம் குழுமத்தின் இன்னொரு இதழில் திமுக தலைவரின் மருமகளும் இன்றைய செயல்தலைவரின் மனைவியும் திமுகவினரின் “பாசத்தோடு பயந்து நடுங்கும் அண்ணி”யாருமான திருமதி துர்கா ஸ்டாலின் தொடர் ஒன்று எழுதிக்கொண்டிருந்தார். குமுதம் குழும இதழின் அறம் வழுவிய ஆபாச cover story க்கு எதிராக திமுக ஆதரவாளரல்லாதவர்கள் கூட கண்டித்து அணிதிரண்டனர். ஆனால் இன்றைய திமுகவினரின் “அண்ணியார்” அவர் பாட்டுக்கு தன் தொடரை அதே இதழில் தொடர்ந்து எழுதி முடித்தார்.
பின்னாளில் எத்தனையோ கட்சிகள் அவரை தம் கட்சியில் சேர்க்க தூதுக்கு மேல் தூதனுப்பியபோது அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு திமுகவைத்தேடி வந்து இணைந்த நடிகை குஷ்பு வீட்டில் “அண்ணியாரின் வானர சேனை” அன்போடு கல்லெறிந்து அடுத்த கட்சிக்கு வழியனுப்பி வைத்தது. இப்பேர்க்கொத்த “பெருமைமிகு பத்திரிகையுலகுடான தொடர்பாடல் பாரம்பரியத்தை” உங்கள் வசம் வைத்துக்கொண்டு திருமாவேலனை எந்த முகத்தோடு எதிர்க்கிறீர்கள் அல்லது விமர்சிக்கிறீர்கள்?
சின்னக்குத்தூசி மறைவால் வாடிய அவரது சீடர்கள் கூடி அவர் நினைவைப்போற்றும் அறக்கட்டளையை நிறுவி அதன்பேரால் ஆண்டுதோறும் விருது வழங்கும் ஏற்பாட்டை செய்தார்கள். அதன்படி அந்த விருது வழங்கும் அறிவிப்பை இலவச விளம்பரமாக வெளியிட அந்த அறக்கட்டளை சார்பில் முரசொலியிடம் கோரினார்கள். ஆனால் முரசொலிக்கு புதிதாக பொறுப்பேற்றிருந்த “மூன்றாம் கலைஞர் உதயநிதி ஸ்டாலின்” காசுகட்டினால் தான் விளம்பரம் போடமுடியும் என்று “கறாராக” நிபந்தனை விதித்தார்.
கடைசியில் “முதல் கலைஞரே” நேரடியாக தலையிட்டு தான் அந்த விளம்பரம் வெளியானது.
எப்படி இருக்கிறது கதை? எந்த கருணாநிதிக்காகவும் திமுகவுக்காகவும் முரசொலிக்காகவும் தன் உடல் பொருள் ஆவியை கொடுத்து உழைத்தாரோ அந்த சின்னக்குத்தூசிக்கு உங்கள் “மூன்றாம் கலைஞர்” காட்டிய மரியாதையின் லெட்சணம் இது. செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாத மக்குப்பிள்ளை தான் திமுகவின் கட்சிப்பத்திரிக்கையான முரசொலிக்கு முழுபொறுப்பு.
இப்படிப்பட்ட “அண்ணியாரும்” அவரது அருமந்த புத்திரனும் போதாக்குறைக்கு தேடிவந்து சேர்ந்திருக்கும் மருமகனும் ஊடகங்கள், ஊடகவியலாளர்களை நடத்திய, நடத்திக்கொண்டிருக்கும் லெட்செணத்தையெல்லாம் பேசப்புகுந்தால் திமுகவினரால் தாங்க முடியாது. உங்கள் அற்ப உளறல்களால் பேச வைக்காதீர்கள்.
இந்திய ஊடகத்துறையில் அழிக்கமுடியாத பெருமைகளை செய்த வரலாற்றுச்சிறப்பு மிக்க முரசொலிக்கு உதயநிதி பொறுப்பேற்றதைவிட இன்றைய நிலையில் சீந்துவாரின்றி கிடக்கும் கலைஞர் தொலைக்காட்சியில் திருமாவேலன் பொறுப்பேற்றிருப்பது உண்மையில் திமுகவுக்கே கூடுதல் நன்மையும் சிறப்பும். அதற்காக நீங்கள் தான் திருமாவேலனுக்கு நன்றி சொல்லவேண்டும்.
தாத்தன், அப்பனின் மிகப்பெரிய செல்வாக்கோடும் பணபலத்தோடும் சினிமாவுக்குள் நுழைந்தும் தொடர்ந்து தோற்றுக்கொண்டிருக்கும் உதயநிதியையெல்லாம் “மூன்றாம் கலைஞர்” என்று போற்றிப்பாடிக்கொண்டிருக்கும் திமுகவின் துதிபாடிகளுக்கும் சந்தர்ப்பவாதிகளுக்கும் எந்த பின்புலமும் இல்லாமல் சொந்த உழைப்பால் சொந்தத்திறனால் ஊடகத்துறைக்குள் நுழைந்து சாதித்த பத்திரிக்கையாளன் திருமாவேலனை விமர்சிக்க எந்த தகுதியும் கிடையாது. கொஞ்சம் அடங்குங்கள்.
பிகு: திருமாவேலனோடு முரண்பட ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அவற்றில் நியாயங்களும் இருக்கலாம். ஆனால் தம் தரப்போடு கைகோர்க்க வரும் ஒருவரை கடந்தகால கசப்பைச்சொல்லி குத்திக்காட்டுவது ஆணவம் மட்டுமல்ல. அரசியல் தற்குறித்தனமும் கூட. சன் தொலைக்காட்சியில் இருந்து ஜெயாடிவிக்கு போன ரபி பெர்னார்டுக்கு எதிராக அதிமுக காரர்கள் யாரும் இந்த அளவு பொங்கியதாக தரவுகள் இல்லை. ஒருவேளை அதிமுக தேர்தலில் வெல்ல அதுவும் காரணமோ என்னவோ. கருணாநிதியின் பலப்பல தனிச்சிறப்புகளில் ஒன்று எதிர்தரப்பை தன்பால்ஈர்த்து தன் தரப்பை வலுப்படுத்திக்கொள்வது. ஆனால் அவரது மகன் குடும்பமும் அதன் அதிதீவிர ஆதரவாளர்களும் தம்மோடு கரம்கோர்க்க தானாகதேடி வருபவர்களைக்கூட விரட்டியடித்து வீணாய் போவதை ஒரு கலையாகவே வளர்த்தெடுத்திருக்கிறார்கள். குஷ்பு முதல் திருமாவேலன் வரை அவர்கள் அதையே செய்துகொண்டிருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: