ஞாயிறு, 8 ஜூலை, 2018

தாய்லாந்து குகைக்குள் சிக்கிய சிறுவர்களை மீட்க மலையில் 100 இடங்களில் துளை

cave
தினமணி : குகைக்குள் அமைந்துள்ள மீட்பு முகாம்..
தாய்லாந்தில் மழை வெள்ளம் காரணமாக குகைக்குள் சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சியாளரை மீட்கும் முயற்சியாக, மலைகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் துளைகள் இடப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மீட்புக் குழுவின் தலைவர் நரோங்சக் ஓசோடானங்கார்ன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குகைக்குள் சிக்கியுள்ள சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சியாளரை வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் குகைப்பாதை வழியாக அழைத்து வருவது மிகவும் ஆபத்தானதாக இருக்கும்.
எனவே, அவர்கள் இருக்கும் இடத்தை அடைவதற்கான மாற்றுப் பாதைகளை உருவாக்கும் வகையில், மலைகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் துளைகள் இடப்பட்டு வருகின்றன.

சில துளைகள் 400 மீட்டருக்கும் மேற்பட்ட ஆழத்தில் இடப்பட்டு வருகின்றன. இருந்தாலும், சிறுவர்கள் சிக்கியுள்ள பகுதியை மலை மேலிருந்து கண்டறிவதில் இதுவரை சிக்கல் நீடித்து வருகிறது.
சிறுவர்கள் எங்கு தங்கியிருக்கிறார்கள் என்பதைக் கண்டறிவதற்கான நவீன தொழில்நுட்ப வசதிகள் எங்களிடம் இல்லாததே அதற்குக் காரணம்.
அவர்கள் 600 மீட்டர் கீழே இருப்பார்கள் என்று நாங்கள் ஊகிக்கிறோம். இருந்தாலும், அவர்களிருக்கும் இடத்தை மிகத் துல்லியமாகக் கணக்கிட முடியவில்லை.
குகைக்குள் பிராண வாயு (ஆக்ஸிஜன்) அளவு வெகுவாகக் குறைந்து வந்ததால், சிறுவர்களை உடனடியாக வெளியே அழைத்து வர வேண்டி நெருக்கடி அதிகரித்தது.
இருந்தாலும், அவர்களுக்கு தங்குதடையின்றி ஆக்ஸிஜன் செல்லும் வகையில் குழாய் இணைப்பை மீட்புக் குழுவினர் ஏற்படுத்தியுள்ளனர்.
மேலும், காற்றுப் புழக்கத்தை அதிகரிப்பதற்காக, குகைக்குள் மீட்பு முகாமிலிருந்து தேவையற்ற நபர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
தாய்லாந்தில், 11 முதல் 16 வயது வரை கொண்ட 12 சிறுவர்களை, அவரது 25 வயது கால்பந்து பயிற்சியாளர் சியாங் ராய் என்னும் பகுதிக்கு கடந்த மாதம் 23-ஆம் தேதி சுற்றுலா அழைத்துச் சென்றார்.
அப்போது அந்தப் பகுதியிலுள்ள, பல கி.மீ. நீளம் கொண்ட குகையைப் பார்வையிட, அந்த 13 பேரும் அதற்குள் சென்றுள்ளனர். எனினும், திடீரென பெய்த பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக அந்த குகைக்குள் வெள்ளமும், சகதியும் புகுந்தது.
அதனால் வெளிச்சமும், வெளியேறும் வழியும் இல்லாமல் அவர்கள் குகைக்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களைத் தேடி அந்தப் பகுதிக்கு வந்த மீட்புக் குழுவினர், குகை வாயிலில் அவர்களது மிதிவண்டி உள்ளிட்ட பொருள்கள் இருப்பதை வைத்து அந்தக் குகைக்குள் அவர்கள் சென்றிருப்பதை உறுதி செய்தனர்.
எனினும், தொடர்ந்து பெய்து வந்த கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக குகைக்குள் சென்று அவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.
இந்தத் தகவல், தாய்லாந்து முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. குகைக்குள் மாயமான சிறுவர்களும், அவர்களது பயிற்சியாளரும் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்று நாடு முழுவதும் பிரார்த்தனை செய்யப்பட்டன.
இந்தச் சூழலில், மழை வெள்ளம் கொஞ்சம் வடிந்ததால் சிறுவர்கள் சிக்கிய 7 நாள்களுக்குப் பிறகு தேடுதல் பணிகளில் முன்னேற்றம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து, அந்த 13 பேரும் மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை எழுந்தது. எனினும், கடுமையான வெள்ளம் மற்றும் சகதியில் அவர்கள் இத்தனை நாள்கள் உயிர் பிழைத்திருப்பது கடினம் என்றும் அஞ்சப்பட்டது.
இந்தச் சூழலில், தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த பிரிட்டன் நீச்சல் வீரர் ஒருவர் குகையின் பாறை மேடு ஒன்றில் அந்த 13 பேரையும் திங்கள்கிழமை இரவு கண்டறிந்தார்.
பசி மற்றும் களைப்பால் மிகவும் சோர்வுற்றும், மெலிந்தும் காணப்பட்ட அவர்கள் அந்த வீரரிடம் பேசிய விடியோவை தாய்லாந்து கடல் அதிரடிப்படை வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக, அவர்களுக்கு உணவு, மருந்துகள் மற்றும் அத்தியவசியப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
குகைக்குள் சிறுவர்கள் இருக்குமிடம் கண்டறியப்பட்டாலும், குகைக்குள் ஓடும் வெள்ள நீர் மற்றும் சகதியில் நீந்தி வர அவர்களுக்கு சிறப்பு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்; அல்லது குகையில் வெள்ள நீர் வடியும் வரை காத்திருந்து அவர்களை வெளியே அழைத்து வரலாம் என்று மீட்புக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.
எனினும், அதற்கு பல மாதங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.
அந்த 13 பேரும் குறுகலான குகைப் பாதையில் தேங்கியிருக்கும் நீர் மற்றும் சகதியில் நீந்தி வருவதற்கு உடலளவிலும், மனதளவிலும் 100 சதவீதம் தயாரான பிறகே, ஒவ்வொருவராக குகையிலிருந்து மீட்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை: