புதன், 11 ஜூலை, 2018

நெல்லையில் 24 பஸ்கள் உடைப்பு... தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு நிர்வாகி கைது

tamilmurasu.org  நெல்லை: ஜான்பாண்டியன் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக
தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு மாநில நிர்வாகி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து நெல்லையில் நேற்றிரவு 24 பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன. இதுதொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பாளையங்கோட்டை மனகாவலம் பிள்ளை நகரில் தமமுக நிறுவனர் ஜான்பாண்டியன் வீடு மீது நேற்று முன்தினம் இரவு பைக்கில் வந்த 3 பேர், பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதுதொடர்பாக பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், தச்சநல்லூர் சத்திரம்புதுக்குளத்தை சேர்ந்த தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் இளைஞர் அணி மாநில செயலாளர் கண்ணபிரான் (39), பள்ளமடையைச் சேர்ந்த  பாலமுருகன் என்ற பான்ஸ் பாலன் ஆகியோரை நேற்றிரவு கைது செய்தனர்.
பாளை போலீஸ் நிலையத்தில் அவர்களிடம் விசாரணை நடந்தது. பின்னர் இருவரும் ஜேஎம் 1 வது மாஜிஸ்திரேட் ராம்தாஸ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு பாளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவ்வழக்கு தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்ட கண்ணபிரான் மீது கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதற்கிடையில் கண்ணபிரான் கைது செய்யப்பட்டதை கண்டித்து நேற்றிரவு மாநகர் மற்றும் மாவட்டத்தில் 24 பஸ்கள் மீது கல்வீசி தாக்கப்பட்டது.

இதுதொடர்பாக தங்கதுரை (24), சுந்தராஜ் (26), முருகேசன் (25) ஆகியோரை முன்னீர்பள்ளம் போலீசார் கைது செய்தனர். பாளையங்கோட்டை போலீசார் 6 பேரை கைது செய்தனர். பஸ் மீது கல்வீச்சு சம்பவத்தை தொடர்ந்து மானூர், பள்ளமடை, தருவை உள்ளிட்ட பகுதிகளுக்கு நேற்றிரவு பஸ்கள் இயக்கப்படவில்லை. ஸ்டே பஸ்களும் நிறுத்தப்பட்டன. இதையொட்டி வண்ணார்பேட்டை அரசு போக்குவரத்து கழகம் பணிமனை, கேடிசிநகர் பணிமனைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: