வியாழன், 12 ஜூலை, 2018

10 தீர்மானங்கள் .. திராவிடர் கழக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அதிரடி ....

Devi Somasundaram: : சாரட்டு வண்டிக்கு கதறினதுல பத்தில ஒரு பங்கு
மாநாட்டு தீர்மானத்தை பற்றி பேசுவதில் பார்ப்பனியர்கள் அக்கரை காட்ட வாய்ப்பில்லை. ..நீங்களுமா??? ... நம்மை வளர்த்து கொள்ள நாமே அக்கரை காட்லன்னா பார்ப்பான் வந்து தடவி வளர்த்து விடுவானா.. ...
1.. ஜாதிமறுப்புத் திருமணம், விதவை மறுமணம், மணவிலக்குப் பெற்றோரை மறுவாழ்வுத் திருமணம் செய்துகொள்வேன். வர(ன்)தட்சணை வாங்குவது சுயமரியாதை இழக்கும் கொத்தடிமை முயற்சி, என்னை நான் ஒருபோதும் விற்க மாட்டேன் என்று சூளுரைக்கிறேன்.
2. கடவுள், மதம், ஜாதி, சினிமா, மது, மருந்து என்ற பலவகைப் போதைகளும், மூடநம்பிக்கைகளும் என் வாழ்வை அண்டாத பெரு நெருப்பாகவே வாழ்வேன்.
3. சுற்றுச் சூழலைத் தூய்மையாக்குவதிலும், பொதுச்சொத்துகளுக்கு சேதம் ஏற்படாது காக்கும் பொழுது ஒழுக்கத்தை நிலைநாட்டவும் என்னையே நான் ஒரு சமூகக் காவலனாக ஆக்கிக் கொண்டு வாழ்வேன்.
4. நல்ல உடல் நலமே, நல்ல உள்ளத்திற்கான ஊற்றுக்கண். உளநலத்திற்கான ஊற்றுக்கண் என்பதை உணர்ந்து வாழ்வதுடன் ஊர் நலம், உலக நலம் ஓம்பும் மானுடத்தின் உண்மைத் தொண்டனாக என்னையே நான் அர்ப்பணித்துக் கொள்வேன்.

5. கடவுளை மற, மனிதனை நினை, என்று அறிவு ஆசான் தந்தைபெரியார் கூறிய வழிப்படியே மனிதநேய மாண்பாளனாகவே எனது வாழ்வை அமைத்து, சொல்வதைச் செய்வதும், செய்வதை மட்டுமே சொல்வதுமே சுயமரியாதை சுகவாழ்வு என்று நான் வாழ்ந்து காட்டுவேன்.
6. வேலை கேட்டு விண்ணப்பம் போட்டு அலுக்காமல், மற்றவருக்கு வேலை தரும் நிலைக்கு உயரும் வகையில் மிகுந்த தன்னம்பிக்கையுடன் கடும் உழைப்பையே எனது கடமையாகக் கருதி வாழ்வேன்.
7. எளிமை, சிக்கனம், பிற பாலரிடம் பண்புடன் பழகும் பான்மை இவைகளை என்றும் வளர்த்துக் கொள்வேன்.
இணையதளம், தொலைக்காட்சி, நுகர்வுக் கலாச்சாரம் இவைகளை உணவுக்கு உப்பு போல, தேவைக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்வோம். இவற்றுக்கு ஒருபோதும் அடிமையாகோம். எங்கள் உரிய நேரத்தை இதற்கு, இந்த போதைக்கு பலியாகி நாங்கள் வீணடிக்க மாட்டோம். 8. பண்பாட்டுப் படையெடுப்புகளினால் பாழான எமது இனத்தின் மீட்புக்கான களப் பணியாளனாக என்றும் இருப்பேன்.
9. இளமை என்பது வளமைக்காக என்று நினைக்காமல் தொண்டுக்கான, அதுவும் சமுதாயத் தொண்டுக்கான வாய்ப்பே என்று கருதி என்றும் உழைப்பேன்.
10. மற்றவர் உன்னை எப்படி நடத்த வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ அப்படி நீ பிறரிடம் நடந்துகொள். அதுவே ஒழுக்கம் என்ற தந்தை பெரியார்தம் உயர் ஒழுக்கநெறியான மனிதநேயப் பண்புடன் என்றும் அதை சிந்தையில் ஏற்றுச் செயலாற்றி புதிய உலகினை உருவாக்கும் தூதுவனாக என்னை நான் என்றும் மாற்றிக்கொண்டு எமது பகுத்தறிவு, சுயமரியாதை வாழ்வுப் பயணத்தை தொடர்வோம். எமது பணி சுயலாபத்திற்கு அல்ல. பொதுநலத்திற்காக, இன நலத்திற்காக, சமூக நலத்திற்காக, நாட்டு நலத்திற்காக.
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு

கருத்துகள் இல்லை: