திங்கள், 3 ஜூலை, 2017

காங்கேயம் மாடுகள் ரூ.48 லட்சத்துக்கு விற்பனை!


காங்கேயம் மாடுகள் ரூ.48 லட்சத்துக்கு விற்பனை!

மின்னம்பலம் :காங்கேயம் தாலுகாவில் நடைபெற்ற சந்தையில் காங்கேயம் மாடுகள் ரூ. 48 லட்சத்திற்கு விற்பனையாகின.
தமிழகத்தின் காங்கேயம் மாடுகள் விவசாயம் மற்றும் பாரம் இழுக்கப் பயன்படுத்தப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் தாலுகாவுக்கு உட்பட்ட ஈரோடு, கரூர், நாமக்கல் போன்ற பகுதிகள் இந்த மாட்டினம் வளர்க்கப்படுகிறது.
இந்நிலையில், காங்கேயம் தாலுகா, நத்தக்காடையூர் பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான சந்தை நடைபெற்று வருகிறது. இந்தச் சந்தையில் காங்கேயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது. சந்தையில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல், போன்ற மாவட்டங்களிலிருந்து விற்பனைக்காக விவசாயிகள் மாடுகளைக் கொண்டு வந்தனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து மாடுகளை வாங்க விவசாயிகள் வந்தனர். மாடுகளை விற்கும் விவசாயிகளும் வாங்கும் விவசாயிகளும் நேரடியாக விலை நிர்ணயித்துக் கொள்வது இந்தச் சந்தையின் தனிச் சிறப்பு. நேற்று நடந்த சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள், என 135 மாடுகள் வந்திருந்தன.
இதில் காங்கேயம் இன மாடுகள் ரூ.26 ஆயிரம் முதல் ரூ.85 ஆயிரம் வரைக்கு விற்பனையாகின. பசுங்கன்றுகள் ரூ.24 ஆயிரம் முதல் ரூ.37 ஆயிரம் வரை விற்பனையானது, காளைக் கன்றுகள் ரூ.23 ஆயிரம் முதல் ரூ.33 ஆயிரம் வரை விற்கப்பட்டது. நேற்று நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், கன்றுகள் என மொத்தம் 65 மாடுகள் ரூ.48 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றதாகச் சந்தை மேற்பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: