ஞாயிறு, 2 ஜூலை, 2017

உபி.. அத்திமரங்கள் சகுனத்தடையாம் உடனே வெட்ட முதல்வர் ஆணை!

உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் அத்தி மரங்களை சகுனத்தடையாகக் கருதி
அவற்றை அகற்றும்படி உத்தரவிட்டுள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு மாநிலம் முழுவதும் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
உத்தரப்பிரதேசத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சிவ பக்தர்களால் கன்வார் யாத்திரை என்ற புனித யாத்திரை நடத்தப்படும். அதையடுத்து, நடப்பாண்டு யாத்திரைக்கான ஏற்பாடுகளை யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. அரசு செய்து வருகிறது. இந்நிலையில், இந்த யாத்திரையின்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து முதல்வர் ஆதித்யநாத் கடந்த ஜூன் 30ஆம் தேதி பொதுமக்களுக்கு அறிவிப்பு விடுத்திருந்தார்.
அந்த அறிக்கையில், ‘கன்வார் யாத்திரைக்குச் செல்லும் வழியெங்கும் அத்தி மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. விரதம் இருந்து புனித யாத்திரை செல்லும் பக்தர்கள் வழியில் அத்தி மரங்கள் இருப்பது அபசகுனமாகும்.
எனவே பக்தர்கள் யாத்திரை செல்லும் வழியில் இருக்கும் அனைத்து அத்தி மரங்களையும் உடனடியாக வெட்ட வேண்டும்’ என்று முதல்வர் ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்திருந்தார். மேலும், யாத்திரையின்போது மோசமான வார்த்தைகள் நிறைந்த பாடல்களை கேட்கக் கூடாது என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
அதையடுத்து, முதல்வரின் உத்தரவுக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், ஒரு மரத்தை அபசகுனமாக அரசு அறிவித்திருப்பது மூடநம்பிக்கையின் உச்சகட்டமாகும் என்று மாநிலம் முழுவதிலும் இருந்து சமூக வலைதளங்களில் வன ஆர்வலர்கள் பலர் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். மரங்களை வளர்க்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துவரும் நிலையில், பாஜக-வைச் சார்ந்த முதல்வர் ஆதித்யநாத் பொதுவாக இருக்காமல், இவ்வாறு மூடநம்பிக்கைகள் சார்ந்து இருப்பது வேதனையளிக்கிறது என்றும், மரங்கள் இருப்பது எப்படி சகுனத்தடையாகும் என்று பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: