ஞாயிறு, 15 மே, 2016

ஆதிச்சநல்லூர்! தொல்லியல் பிரகடனம் .. உலகின் மிக பழமையான திராவிட நாகரீகம்!...கல்குவாரிகளால் அழிக்கப்படுகிறது


சென்னை மாவட்ட மியூசியத்தின் துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட அலெக்சாண்டர் ரியா, மற்ற தனது பணிகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு ஆதிச்சநல்லூரில் ஆய்வு நடத்துவதில் மட்டுமே அதிக கவனம் செலுத்தினார். அதோடு, அந்தக்கால மனிதர்கள் வாழ்ந்த வேறு இடங்கள் எவை என்பதையும் அவர் ஆர்வமுடன் தேடினார். ஆதிச்சநல்லூரில் இரும்பின் பயன்பாடு அதிகம் இருந்ததால், அதே போல வேறு எந்த இடங்களில் இரும்பு உலோகத்தை சேகரித்து ஆலைகள் நடத்தினார்கள் என்று ஆய்வு மேற்கொண்டார். அப்போதுதான், திருநெல்வேலிக்கு அருகே உள்ள கிருஷ்ணாபுரம் என்ற இடத்திலும் இதே போல முதுமக்கள் தாழிகள் புதைக்கப்பட்டு இருப்பதையும், அங்கேயும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு ஆலைகள் செயல்பட்டன என்பதையும் அவர் கண்டறிந்தார்.


ஆதிச்சநல்லூர் மற்றும் தாமிரபரணி ஆற்றுக்கரையோரம் உள்ள பல ஊர்களில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நாகரிகம் மிக்க மனிதர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள் என்ற தகவல் அவரை வெகுவாகக் கவர்ந்து இருக்க வேண்டும்.

இதனால், 1899 முதல் 1904 வரை 5 ஆண்டுகளாக ஆதிச்சநல்லூரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் அவர் ஆய்வுகளை நடத்தினார்.

இந்த ஆய்வுகள் மூலம், ஆதிச்சநல்லூரில் வாழ்ந்தவர்கள் திராவிட நாகரிகத்தின் வழிவந்தவர்கள் என்பதையும், அவர்கள் பாண்டியர் களின் காலத்திற்கும் முற்பட்டவர்கள் என்பதையும், அங்கு வாழ்ந்த மக்கள், கிறிஸ்து பிறப்பிற்குப் பின்னரும் அங்கே வாழ்ந்தார்கள் என்ற தகவலையும் அலெக்சாண்டர் ரியா தெரியப்படுத்தினார்.

இந்தியாவில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளிலேயே ஆதிச்சநல்லூர் தான் முதலாவதும் மிகப்பெரியதும் என்பதையும் அவர் புள்ளி விவரத்துடன் கூறினார்.

அவர் ஆர்வத்துடன் நடத்திய அந்த ஆய்வுகள்தான், ஆதிச்சநல்லூர் நாகரிகம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது என்ற வியப்பான வரலாற்றை வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டும் முக்கியமான ஆய்வாக அமைந்து விட்டது.

ஆதிச்சநல்லூரில் அவர் நடத்திய ஆய்வு பற்றிய தகவல்கள் அப்போதே உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இதனை அறிந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர் லூயிஸ் லாப்பிக் என்பவர் 1903–ம் ஆண்டு ஆதிச்சநல்லூருக்கு வந்து ஆய்வு நடத்தினார்.

அவரும் அங்கு உள்ள சில இடங்களை தோண்டிப் பார்த்து, முதுமக்கள் தாழிகள் மற்றும் அவற்றில் இருந்த அரிய பொருட்கள், பழங்கால இரும்புக் கருவிகள் ஆகியவற்றை சேகரித்தார்.

அவற்றை அவர் பிரான்ஸ் நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் வைப்பதற்காக எடுத்துச் சென்று விட்டார்.



அவரைத் தொடர்ந்து, 1915–ம் ஆண்டு, இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் அதிகாரியாக இருந்த ஜே.ஆர். ஹென்டர்சன் என்பவரும் ஆதிச்சநல்லூரில் ஆய்வு நடத்தினார்.

இவ்வாறு பலரும் ஆதிச்சநல்லூரில் ஆய்வுகள் நடத்தியபோதிலும், அவற்றில் எல்லாம் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது அலெக்சாண்டர் ரியா நடத்திய ஆய்வுகள் தான்.

இதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன.

ஆதிச்சநல்லூரில் ஆய்வுக்கு உரிய இடம் மொத்தம் 114 ஏக்கர் பரப்பளவு ஆகும். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பகுதியில் வசித்த மக்களால் அந்த 114 ஏக்கர் முழுவதும் இடுகாடாகப் பயன்படுத்தப்பட்டு இருந்தது.

ஒரு ஏக்கர் பரப்பளவில் சுமார் 1000 என்ற அளவுக்கு அங்கே முதுமக்கள் தாழிகள் புதைக்கப்பட்டுள்ளன.

பல்வேறு கட்டங்களாக அங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோதிலும், மிகச்சிறிய இடத்தில் மட்டுமே தோண்டிப் பார்த்து இருக்கிறார்கள். 100 ஏக்கர் பரப்பளவுக்கும் அதிகமான இடம் இன்னும் தோண்டிப் பார்க்கப்படாமலேயே உள்ளன.

அலெக்சாண்டர் ரியா, குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டும் மண்ணைத் தோண்டி ஆய்வு நடத்தினார். ஒவ்வொரு முறையும் அங்கே அவர் எடுத்த பொருட்களை பத்திரப்படுத்தினார். எல்லாவற்றுக்கும் மேலாக அனைத்தையும் அவர் ஆவணப்படுத்தினார்.

ஏறத்தாழ 4000 பொருட்களை ரியா சேகரித்தார். அவற்றை தனித்தனியாக பட்டியல் போட்டு நேர்த்தியாக எழுதி வைத்தார்.

அங்கு சேகரித்த பொருட்களை பத்திரமாக சென்னைக்கு அனுப்பி அங்குள்ள அருங்காட்சியகத்தில் இடம் பெற ஏற்பாடு செய்தார்.

அலெக்சாண்டர் ரியா 1913–ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் அதற்கு முன்னதாக அவர் ஆதிச்சநல்லூர் ஆய்வு குறித்த அனைத் தையும் செய்து முடித்தார்.

இன்று சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்திற்கு சென்றால், ஆதிச்சநல்லூரில் கிடைத்த மிகப்பெரிய மண் தாழிகள், இரும்புக்கருவிகள், வெண்கல சிலைகள் ஆகியவற்றை நேரில் கண்டு அதிசயிக்கலாம். நாம் காணும் ஆதிச்சநல்லூர் பழங்கால பொருட்கள் எல்லாம் அலெக்சாண்டர் ரியா சேகரித்தவை ஆகும்.

அலெக்சாண்டர் ரியா, ஆதிச்சநல்லூரில் எடுத்த 4000 பொருட்களின் விவரத்தையும் ஒன்றுவிடாமல் ஆவணமாக எழுதி வைத்து இருக்கிறார்.

ஒவ்வொரு பொருளும் என்ன? அது எதைக்கொண்டு செய்யப்பட்டு இருந்தது? அதன் அளவு என்ன? அதன் தோற்றம் எப்படி இருந்தது? என்ற முழு விவரத்தையும் அவர் எழுதி வைத்தார்.

அந்த விவரங்கள் அனைத்தும், ‘திருநெல்வேலி மாவட்ட வரலாற்று காலத்திற்கு முற்பட்ட பழம் பொருட்களின் பட்டியல்’ என்ற தலைப்பில் தனிப்புத்தகமாக வெளியிடப்பட்டது.

இந்தப் பட்டியல்கள் மூலம் தான் ஆதிச்சநல்லூர் நாகரிகம் எவ்வளவு பழமையானது என்பது வெளி உலகுக்குத் தெரிய வந்தது.

அந்த புத்தகத்தில் அலெக்சாண்டர் ரியா குறிப்பிட்டு இருப்பதாவது:–

‘‘ஆதிச்சநல்லூர் கிராமத்திலும் அதன் அருகிலுமாக 100 ஏக்கர் பரப்புக்கும் மேலாக இந்த இடுகாடு காணப்படுகிறது. விவசாயத்திற்கு பயன்படாத இடமாகப் பார்த்து இந்த இடத்தை பழங்கால மக்கள் தேர்ந்து எடுத்து இருப்பது தான் இதன் சிறப்பு அம்சம் ஆகும். மரணக் கடவுளான எமனின் திசை தெற்கு என்பதால், இந்த இடம் நகரில் இருந்து தெற்குப் பக்கமாக தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு முதுமக்கள் தாழியும் சுமார் 6 அடி இடைவெளியிலும், 3 அடி முதல் 12 அடி அல்லது அதற்கும் ஆழமாகவும் புதைக்கப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு ஏக்கர் பரப்பளவிலும் தலா 1,000 தாழிகள் இருக்கலாம். தென் இந்தியாவிலேயே மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான இடுகாடாக ஆதிச்சநல்லூர் விளங்குகிறது. சென்னை மாகாணத்தில் வரலாற்றுக்கு முந்திய கால இடங்களாக சுமார் நூறு இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அங்கெல்லாம் ஒன்று அல்லது இரண்டு என்ற அளவில்தான் முதுமக்கள் தாழிகள் உள்ளன. ஆதிச்சநல்லூருக்கு ஈடான அளவுக்கு எங்குமே முதுமக்கள் தாழிகள் இல்லை’’.

‘‘அங்கு கிடைத்த மண்பாண்டங்கள் மிக நேர்த்தியானவை. மற்ற எந்தப் பகுதியிலும் இல்லாத காலத்திலேயே அங்கு இரும்பு கருவிகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. பல உலைகள் செயல்பட்டதற்கான ஆதாரமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது’’.

இவ்வாறு அலெக்சாண்டர் ரியா தனது கருத்தைப் பதிவு செய்து இருக்கிறார்  dailythanthi.com

கருத்துகள் இல்லை: