வியாழன், 19 மே, 2016

திருமாவளவனை வீழ்த்திய தேர்தல் தந்திரங்கள்... வெறும் 87 வாக்குகள்..

மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்ற திருமாவளவன் வெற்றியை இன்னொரு திருமாவளவன் தடுத்து இருக்கிறார்.  ஆம்,  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் தோற்றிருப்பது 87 வாக்குகள் வித்தியாசத்தில்.
ஆனால், அதே காட்டுமன்னார் கோவிலில் திருமாவளவன் என்கிற பெயரில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் ஒருவர் பெற்றிருப்பது 289 வாக்குகள்.  ஒரு வேளை இந்த வாக்குகள் விசிக வுக்கு கிடைத்து இருந்தால், மக்கள் நலக் கூட்டணிக்கு ஒரு ஆறுதல் இடமாவது கிடைத்திருக்கும். ஆனால், அதுவும் தேர்தல் தந்திரங்களால் வீழ்த்தப்பட்டு இருக்கிறது.



விஜயகாந்த் டெபாஸிட் இழந்தார்:
பதிவான வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்கை பெற்றால்தான் ஒரு வேட்பாளர் தன் டெபாஸிட் தொகையை திரும்ப பெற முடியும். ஆனால், இந்த தேர்தலில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட  விஜயகாந்த் பெற்றது வெறும் 687 வாக்குகள்தான். பதறாதீர்கள்... இது தேமுதிக தலைவர் விஜயகாந்த் பெற்ற வாக்குகள் அல்ல. அவர் பெயரில் போட்டியிட்ட இன்னொரு சுயேட்சை வேட்பாளர் அ. விஜயகாந்த் பெற்ற வாக்குகள். அது போல் இன்னொரு வேட்பாளாரான ச. விஜயகாந்த் பெற்றது வெறும் 148 வாக்குகள்.
அது போல் கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலினை எதிர்த்து நின்ற சுயேட்சை ஸ்டாலின் குமார்  83 வாக்குகள்  பெற்று உள்ளார்.  

தேர்தலில் மக்களை குழப்ப, பிரதான வேட்பாளர் பெயரில் இன்னொரு வேட்பாளரை நிறுத்துவதென்பது கட்சிகள் கையாளும் ஒரு யுக்தி. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட, அன்புமணி பெயரில் அன்புமணியை எதிர்த்து இன்னொரு வேட்பாளர் நின்றார். ஆனால், இதுவரை இதுபோன்ற யுக்தி வாக்கு சதவீதத்தில் எந்த பெரிய மாற்றத்தையும் கொண்டு வந்ததில்லை. ஆனால், இம்முறை ஒரு வேட்பாளரின் வெற்றியையே அது பறித்துவிட்டது.

- மு. நியாஸ் அகமது விகடன்.com

கருத்துகள் இல்லை: