புதன், 18 மே, 2016

சுப.வீரபாண்டியன் : தேர்தல் தெருக்களில் ஒரு பயணம்....

கைநீட்டிக் காசு வாங்கிட்டோம், மாத்திப் ஓடுவது தருமமில்லை என்ற எண்ணம் போய்விட்டது. ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள வலிமை என்ன என்பதை அனைவரும் அறிந்து கொள்ள இந்தத் தேர்தல் கண்டிப்பாய் உதவும்.
 தேர்தல் தெருக்களில் ஒரு பயணம் "வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்" என்பார் கண்ணதாசன். தேர்தல் என்றால் இன்னும் பல்லாயிரம் இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது - எங்கள் பயணம் தந்த அனுபவம். கடந்த இரண்டாம் தேதி தொடங்கி 14ஆம் தேதி மாலை வரை, தி.மு.கழகக் கூட்டணியை ஆதரித்து நடைபெற்ற எங்கள் தேர்தல் பயணத்தில் மக்களுக்குச் சொன்னதை விட, மக்களிடமிருந்து நாங்கள் பெற்றவைகள் மிகுதி!
வேட்பாளர்கள் அறிவிப்புக்குப் பின் வடக்கிலும், கிழக்கிலும், மேற்கில் சில மாவட்டங்களிலும் எங்கள் பயணம் அமைந்தது. தெற்குப் பகுதிக்கு நாங்கள் செல்லவில்லை. தோழர் பொள்ளாச்சி உமாபதி அவர்களின் பேருதவியோடும், பேரவைத் தோழர்களின் முழு ஈடுபாட்டோடும் நாங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். எங்கள் பயணத்தின் அடிப்படையில், தெற்கையும் உட்படுத்தி, தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும் என்று எங்களுக்கு ஒரு கணிப்பு உள்ளது. அதனை இங்கு பதிவு செய்து விடுகிறேன். இன்னும் 36 மணி நேரத்திற்குள் எங்கள் கணிப்பு உண்மைக்கு அருகில் உள்ளதா, அல்லது விருப்பத்தின் அடிப்படையில் வெகு தூரம் விலகி நிற்கிறதா என்று தெரிந்துவிடும்!

ஐந்து அல்லது ஆறு தொகுதிகளைத் தவிர மற்ற அனைத்துத் தொகுதிகளையும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகள் மட்டுமே பகிர்ந்து கொள்ள இருக்கின்றன என்று நாங்கள் கருதுகின்றோம். காட்டுமன்னார்கோயில், உளுந்தூர்ப்பேட்டை, பெண்ணாகரம், ஜெயங்கொண்டம், சிவகாசி, குமரி மாவட்டத்தில் ஒரு தொகுதி ஆகியன மட்டுமே அந்த ஆறு தொகுதிகள். இவற்றில் மட்டுமே மும்முனைப் போட்டி நிலவுகின்றது. மற்ற அனைத்து இடங்களிலும் இருமுனைப் போட்டியே! கடலூரில் சீமான் நான்கு அல்லது ஐந்தாவது இடத்தில்தான் நிற்கிறார்.

தி.மு.க. அணி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கக் கூடிய வாய்ப்புகள் தெரிகின்றன. தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள 28 லட்சம் ரூபாய்க்குள்தான் செலவுகள் அடங்குகின்றன என்பதை யாராலும் நம்ப முடியாது - தேர்தல் ஆணையம் உட்பட! தமிழகத் தேர்தல்களில் பணம் ஒரு பெரிய பங்கை வகிக்கின்றது என்னும் உண்மையை வெட்கத்துடன் ஒப்புக் கொள்ள வேண்டியுள்ளது.

மக்களில் ஒரு பகுதியினரும் பணத்தை எதிர்பார்க்கின்றனர் என்பதும் அவமானகரமான உண்மையே! எனினும் ஒரு "தருமம்" மாறியுள்ளது. கைநீட்டிக் காசு வாங்கிட்டோம், மாத்திப் ஓடுவது தருமமில்லை என்ற எண்ணம் போய்விட்டது. கொடுப்பவர்களிடம் வாங்கிக் கொண்டு, பிடித்தவர்களுக்கு வாக்களிப்போம் என்ற மனநிலை பலரிடம் உள்ளது. எனவே பணம்தான் வெற்றி தோல்வியை முழுமையாகத் தீர்மானிக்கிறது என்று சொல்ல முடியவில்லை.

அதற்கும் ஒரு பங்கு உள்ளது என்பதையும் மறுக்க இயலவில்லை. சாதியின் பெயரால் சத்தியம் வாங்கிக் கொண்டு வாக்குக் கேட்டுள்ள நிகழ்வைத் தருமபுரி போன்ற மாவட்டங்களில் கேள்விப்பட்டோம். ஊத்தங்கரைத் தொகுதியில் ஒரு சிற்றூருக்கு நாங்களும், மாவட்டச் செயலாளரும், வேட்பாளரும் சென்றிருந்தோம். மக்கள் கூடி நின்று கேட்டனர். ஆனால் ஒரு அம்மா, மாம்பழம் தவிர வேறு யாரும் இங்கே ஒட்டுக் கேட்க வரக் கூடாது என்று சத்தமாக எதிர்ப்புத் தெரிவித்தார். அதனைப் பொருட்படுத்தாமல் நான் பேசிக் கொண்டிருந்தேன். சற்று நேரத்தில், அந்த ஊர் மக்களே, " சும்மா இருக்க மாட்டியா நீ, அவுங்க என்ன பேசுறாங்கன்னு கேளு" என்று அதட்டினர்.

அந்த ஊரின் அடுத்த பகுதிக்குச் சென்றோம். அந்த மக்கள் எங்களை வரவேற்று, "அந்தப் பக்கத்துல இருக்கவுங்க எல்லாம் ஒங்களுக்குப் போட மாட்டாங்க. அதுக்காகவாவது நாங்க உங்களுக்குத்தான் போடுவோம். உதய சூரியனுக்குத்தான் எங்க ஒட்டு" என்றனர். சாதிப் பகைமை கிராமங்களில் வேரூன்றி நிற்கிறது, வெளியிலும் தெரிகிறது. இந்தத் தேர்தலில் பல கட்சிகளும் போட்டியிடுகின்றன என்பது உண்மைதான். ஆனால் ஒரு சில கட்சிகளைத் தவிர, மிகப் பலரால் வாக்குச்சாவடிக் குழுக்களையே (பூத் கமிட்டி) அமைக்க முடியவில்லை.

ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக 250 முதல் 300 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஒரு சாவடிக்குப் பத்துப் பேர் என்றால், 2500 முதல் 3000 பேர் வரை ஒரு தொகுதிக்குத் தேவைப்படும். பல கட்சிகளுக்கு அந்தத் தொகுதியில் மொத்த வாக்குகளே அவ்வளவு இல்லை. எனவே தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் பணபலத்தால் மட்டுமே வலிமையாக உள்ளன என்ற கூற்று உண்மையில்லை. அது ஒரு காரணமாக இருக்கலாம்.
ஆனால் இவ்விரு கட்சிகளுக்கும் மிகப் பெரிய அமைப்பு வலிமை உள்ளது என்பதை நேரில் சென்றால் அறிந்து கொள்ளலாம்.

பா.ம.க.வின் பலமும், பலவீனமும் சாதிதான் என்றால், மக்கள் நலக் கூட்டணியின் பலமும் பலவீனமும் விஜயகாந்த்தான்.

கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த போதே, தே.மு.தி.க.வுடன் கூட்டணி வேண்டாம் என்றும், உதயசூரியன் சின்னம் 200 இடங்களிலாவது போட்டியிட வேண்டும் என்றும் நான் விரும்பினேன். பதிவும் செய்திருந்தேன். இப்போது அது மிகவும் சரியானது என்ற கருத்து உறுதிப் பட்டுள்ளது.
 ஒரு வேளை அவர்களுடன் கூட்டணி ஏற்பட்டிருந்தால், தி.மு.க.வின் வெற்றியை அவர்கள் முழுமையாகச் சொந்தம் கொண்டாடியிருப்பார்கள். ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள வலிமை என்ன என்பதை அனைவரும் அறிந்து கொள்ள இந்தத் தேர்தல் கண்டிப்பாய் உதவும். Posted by சுப.வீரபாண்டியன்

கருத்துகள் இல்லை: