வெள்ளி, 4 டிசம்பர், 2015

அமைச்சர்கள் காரை விட்டு இறங்கி தப்பி ஓட்டம்: வெற்றிவேலுக்கு அடி உதை..ஜெ. தொகுதியில் மக்கள் ஆவேசம்

ஜெயலலிதா தொகுதியான ஆர்.கே.நகரில் வெள்ளச் சேதங்களை பார்வையிட அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜு, கோகுல இந்திரா ஆகியோர் இன்று (வெள்ளி) சென்றனர்.
வெள்ளச் சேதங்களை பார்வையிட 3 நாள் கழித்து தாமதமாக வந்ததால் கோபம் அடைந்த அப்பகுதி மக்கள், வந்தவர்களிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு கொதிப்படைந்தனர். அப்போது காரை விட்டு அமைச்சர்கள் யாரும் கீழே இறங்கவில்லை. இதையடுத்து வயதானவர்களே தண்ணீரில் தத்தளிக்கும்போது உங்களுக்கு கார் தேவையா என்று அப்பகுதி மக்கள் அவர்கள் வந்த காரை முற்றுகையிட்டனர். காரை விட்டு இறங்க மறுத்த நத்தம் விஸ்வநாதனை மக்கள் காரின் கதவை திறந்து இறங்க வைத்தனர்.

அப்போது அவர்களை சூழ்ந்த மக்கள், நேதாஜி நகரில் உள்ள வீடுகளில் இன்னும் வெள்ளம் வடிய நடவடிக்கை எடுக்காதது ஏன். வெள்ள நீரில் கழிவு நீரும் கலந்து வருவதால் வீடுகளுக்குள் இருக்க முடியவில்லை. வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உரிய நிவாரணமும் கிடைக்கவில்லை. வெள்ளச் சேதத்தை 3 நாள் கழித்துதான் பார்வையிட வருவதா என்று கேள்வி எழுப்பினர்.
மக்களின் மனநிலையை புரிந்து கொண்ட அமைச்சர்கள், அவர்களிடம் சமாதானம் செய்வதுபோலவே நடந்து சென்று, திடீரென அந்த இடத்தில் இருந்து வேறொரு காரில் ஏறி தப்பிச் சென்றனர். இந்த நிலையில் சென்னை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் வெற்றிவேல் அந்த இடத்தில் இருந்தார். மற்றவர்கள் காரி ஏறி தப்பிச் சென்றதும் கோபமடைந்த மக்கள், வெற்றிவேலை சூழ்ந்தனர். குறைகளை சொல்லிக்கொண்டிருக்கும்போதே காரில் ஏறி ஓடுவதா. அதுக்கு எதுக்கு இங்க வந்தீங்க... என்று அவரை தாக்கியுள்ளனர். நிலைமையை உணர்ந்து பதில் பேசாமல் வேகமாக நடந்தும், ஓடியும் அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.nakkheeran.in

கருத்துகள் இல்லை: