சனி, 14 ஜூன், 2014

கங்கையை சுத்தமாக்க பார்பனீயத்தை சுத்தமாக்க வேண்டும் ! இரண்டிலும் அழுக்கு ?

ங்கை நதியில் எச்சில் துப்பினாலோ, பாலித்தீன் பைகள் போன்ற குப்பைகள் போட்டாலோ, மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 10,000 ரூபாய் அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டம் ஒன்றை விரைவில் நிறைவேற்ற மோடி அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. தனது தேர்தல் அறிக்கையிலேயே கங்கை நதியைத் தூய்மைப்படுத்துவதை வாக்குறுதியாக அறிவித்திருந்த பாரதிய ஜனதா, ஆட்சிக்கு வந்ததும் அதற்க்கென உமா பாரதியின் தலைமையில் ஒரு தனி அமைச்சகத்தையே அறிவித்தது.
சரி, இவ்வளவு மெனக்கெடும் அளவிற்கு கங்கையை அசுத்தமாக்கியது யார்? இதுவும் ஐஎஸ்ஐ ‘சதி’யாக இருக்குமோ?
பாகிஸ்தானா, பார்ப்பனியமா?
விடை தேடினால் அது பார்ப்பனியத்தின் மூடநம்பிக்கைகளையே காரணமாக காட்டுவதால், தண்டனையும், அபராதமும் இந்துக்களிடம்தான் நிறைவேற்ற வேண்டும். எனில் சுத்த கங்கை அபராதத்தின் தொகை சில தினங்களிலேயே திருப்பதி மெகா வசூலை முறியடிப்பது உறுதி.

கங்கை நதியைச் சுற்றி ஏராளமான மூட நம்பிக்கைகள் இந்துக்களிடையே நிலவுகின்றன. இறந்தவர்களை கங்கைக் கரையில் எரியூட்டினால் பிறப்புச் சங்கிலி அறுந்து மறுபிறப்பிலிருந்து தப்பலாம், கங்கையில் குளித்தால் பாவங்கள் அகலும், அந்த நதியானது சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் ஏற்படும் மாசுபாட்டைக் களைந்து கொண்டு தன்னைத் தானே சுத்தப்படுத்தும் ஆற்றல் கொண்டது என்று கங்கையின் ‘புனிதத்தை’ நிலைநாட்ட பின்னப்பட்டுள்ள மூடத்தனங்களின் பட்டியல் மிக நீண்டது. ஆனால், உண்மை இதற்கு நேர்மாறானது.
’இந்துக்கள்’ நம்பும் புனிதமான சுத்தமான கங்கைதான், இன்றைய தேதியில் உலகிலேயே மிக அதிகமாக மாசடைந்த ஐந்து நதிகளில் ஒன்றாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் சுமார் நூறு கோடி லிட்டர் கழிவுகள் கங்கை நதியில் கலக்கின்றன. இதில் கங்கையின் கரையோர நகரங்களில் இருந்து ஆற்றில் கலக்கும் வீட்டுக் கழிவுகள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளும் அடங்கும். அன்றாடம் சேரும் இந்த கழிவுகளை விட புனித நீராடல்களாலும் புனித சடங்குகளாலும் உருவாக்கப்படும் கழிவுகள் கணக்கு பிரம்மாண்டமானது.
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பிணங்கள் கங்கை நதிதீரத்தில் எரிக்கப்படுகின்றன. பல்லாயிரக்கணக்கான பிணங்கள் அப்படியே ஆற்றில் வீசப்படுகின்றன. வாரணாசியில் சுமார் நூறு சுடுகாடுகள் உள்ளன. இவற்றில் பெரிய சுடுகாடான மணிகர்னிகாவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40,000 பிணங்கள் எரிக்கப்படுகின்றன. பிணத்தை முழுவதும் எரிக்காமல் பாதி வெந்த நிலையில் ஆற்றில் இறக்கி விட்டால் மறுபிறவி இருக்காது என்பது பார்ப்பனியத்தை பின்பற்றும் இந்துக்களின் நம்பிக்கை.
பிணத்தை எரிக்க விறகு வாங்கும் வசதியில்லாத ஏழைகள் தங்கள் உறவினர்களின் சடலங்களை அப்படியே நதியில் எரிந்து விடுகிறார்கள். இவர்களது கணக்கில் மூடநம்பிக்கையை விட வாழ்நிலை பிரச்சினைகளே இருக்கிறது. எனவே கங்கை நதிப் பரப்பெங்கும் வெந்தும் வேகாததுமான நூற்றுக்கணக்கான பிணங்கள் நாள்தோறும் மிதந்து சென்றவாறே உள்ளன.
சாவின் நகரம் வாரணாசி!
கங்கை மாசு காரணம் யார் 3இங்கே சாவதற்கென்றே தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் வந்து குவிந்து கொண்டே இருக்கிறார்கள். அன்றாடம் நூற்றுக்கும் மேற்பட்டவர்களது பிணங்கள் வாரணாசியில் கங்கை நதிக்கரையில் உள்ள மணிகர்னிகாவில் எரியூட்டப்படுகின்றன – சில நாட்களில் இங்கே எரியூட்டப்படும் பிணங்களின் எண்ணிக்கை 200-ஐ கடந்து விடுகின்றது.  குழந்தைகளை வளர்க்க முடியாத ஏழைப் பெற்றோர்கள் குழந்தைகளை உயிரோடு கங்கையில் வீசும் சம்பவங்கள் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கில் நடக்கின்றது.
மேலும் ஒவ்வொரு கும்பமேளா நிகழ்வின் போதும் சுமார் எண்பது லட்சத்திலிருந்து ஒரு கோடி பக்தர்கள் வரை கங்கையில் முங்கியெழுகிறார்கள். சாதாரண நாட்களில் வாராணாசியில் மட்டும் நாளொன்றுக்கு சுமார் 60,000 பேர் கங்கையில் குளிக்கிறார்கள். கும்பமேளா நாட்களில் மட்டும் ஒரு லிட்டர் நீரில் உயிரியல் கழிவுகளின் அளவு 7.4 மில்லி கிராம் அளவுக்கும் பிற நாட்களில் 4.8 மில்லி கிராம் அளவுக்கும் உள்ளது. இது அனுமதிக்கப்பட்ட உயிரியல் கழிவுகளின் அளவான லிட்டருக்கு 2 மில்லி கிராம் என்பதை விட இரண்டு பங்கு அதிகமாகும்.
வாழ்வின் கறைகளான பாவங்களை தீர்த்து விட்டு மறு ஜென்மத்தில் வசதியாக பிறப்பதற்கான கையூட்டாக மாறிவிட்ட கங்கை குளியல் மற்றும் கங்கா மரணம்தான் இன்றைக்கு அந்த நதிக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இத்தகைய இழி நிலை ஏற்படுமளவுக்கு போன ஜென்மத்தில் கங்கை என்ன பாவம் பண்ணியதோ, தெரியவில்லை.
மணிகர்னிகா பகுதி மட்டுமின்றி, வாரணாசி நகரைத் தழுவிச் செல்லும் கங்கையின் நதிக்கரையோரங்களெல்லாம், சவுண்டிப் பார்ப்பனர்களுக்கு பக்தர்களால் தானமாக வழங்கப்பட்ட பசுமாடுகளாலும் அவை இட்ட சாணக் குவியலாலும் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கின்றன. சொந்த இடங்களில் முறையாக பராமரிக்கப்படாத கோமாதாக்களும் தங்களது பங்குக்கு கழிவுகளை நதியில் கலக்கிறார்கள்.
இப்படி இந்து பக்தர்களாலும் அந்த பக்தர்களால் “கடவுளின் புரோக்கராக” கருதப்படும் அகோரி சாமியார் கும்பல்களாலும் சீரழிவுக்கு உள்ளாக்கப்பட்ட கங்கா மாதா, பீகாருக்குள்ளும் அதைத் தொடர்ந்து வங்கத்தினுள்ளும் நுழைகிறாள். இங்கோ அவளுக்கு வேறு விதமான பிரச்சினைகள். இங்கே இந்துக்கள் தங்கள் வீடுகளில் உள்ள பூஜையறைக் கழிவுகளை கங்கையில் எரிந்தால் புண்ணியம் என்று நம்புகிறார்கள். மேலும் துர்கா பூஜை விமரிசையாக நடக்கும் பிரதேசங்கள் இவை என்பதால், ப்ளாஸ்டர் ஆப் பாரீஸ் வேதிக்குழம்பினால் வார்க்கப்பட்ட துர்கா மாதா சிலைகள் கங்கையில் தான் கரைக்கப்படுகின்றன. அந்தப் படிக்கு உ.பியை விட்டு அகன்றாலும் கங்கா மாதாவுக்கு நிம்மதி இல்லை.
கங்கை மாசு காரணம் யார்இந்தச் சீரழிவுகளால் கங்கையை நம்பி வாழும் சுமார் 140 வகையான நீர் வாழ் உயிரினங்களும் ஏராளமான ஊர்வன விலங்குகளும் மட்டுமல்ல, கங்கை நதிக்கரையோரங்களில் வாழும் சுமார் 40 கோடி மக்களும் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர். கங்கை அதன் மூலத்திலிருந்து வாரணாசியை அடைந்து சீரழிவதற்கு முன்பே பல பெரிய அணைக்கட்டுகளைக் கடந்து வரவேண்டியுள்ளது. அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள தெஹ்ரி அணையிலிருந்து தான் தில்லி நகருக்கான குடிநீரை உறிஞ்சியெடுத்து கொள்ளையடிக்கும் உரிமை பன்னாட்டுத் தொழிற்கழகமான சூயஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.  கங்கா மாதாவின் கையை அந்நிய நாட்டு கம்பேனி பிடித்து இழுந்த இந்த சம்பவம் நிகழ்ந்த போது மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது ‘உத்தமர்’ வாஜ்பாயி தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி.
பார்ப்பனிய மூடத்தனங்கள் ஒரு பக்கத்திலிருந்து கங்கையை அரித்துத் தின்கின்றன என்றால், மறுகாலனியாதிக்க பொருளாதாரக் கொள்கை இன்னொரு புறத்திலிருந்து குதறித் தீர்க்கிறது. வாணாசியில் இருந்து சுமார் இருபது கிலோமீட்டர்கள் தொலைவில் மெஹ்திகன்ச் என்கிற சிறுநகரம் ஒன்றில் அமைந்துள்ள கோகோ கோலா நிறுவனத்தின் தொழிற்சாலை அங்கே உள்ள நிலத்தடி நீரை கடந்த பதினைந்து ஆண்டுகளில் முற்றாகக் குடித்துத் தீர்த்து, காட்மியம் நிறைந்த தனது ஆலைக் கழிவை கங்கையில் கலந்து விசமாக்கியுள்ளது. கோகோ கோலாவுக்கு உரிமம் வழங்கியதும் அதே ’உத்தமர்’ வாஜ்பாயி தலைமையிலான அரசு தான்.
உலகிலேயே மிக வேகமாக அழிந்து வரும் நதிகளின் பட்டியலில் பத்தாவது இடத்தைப் பிடித்திருக்கும் கங்கை நதியின் மரணத்தை நோக்கிய அந்தப் பயணம் இந்துக்களின் நம்பிக்கைகளை மாத்திரமின்றி கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை சூனியத்தில் தள்ளியிருக்கிறது.
கங்கை நீரில் மிக அதிகப்படியாக காணப்படும் காட்மியம், ஆர்சனிக், புளோரைடு, நைட்ரேட், குளோரைட் போன்ற வேதியல் கலவைகளும், கோலிபார்ம் பாக்டீரியாக்களும் அந்த நதி நீரை நுகரும் கோடிக்கணக்கான மக்களுக்கு ஏராளமான நோய்களை உண்டாக்குகின்றன.  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும் தேசிய புற்றுநோய் பதிவு இயக்கத்தினால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ‘பித்தப்பை புற்றுநோயில் கங்கை வடிகால் பகுதிகள், உலகிலேயே இரண்டாவது இடத்திலும், விந்துப்பை புற்றுநோயில் நாட்டிலேயே முதல் இடத்திலும் உள்ளன’ என்று தெரிய வந்துள்ளது.
கங்கை மாசு - காரணம் யார்
கங்கை நதியை சாவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பது மோடியின் புத்தம் புதிய கண்டு பிடிப்பல்ல. கடந்த மூன்று பத்தாண்டுகளாகவே கங்கை நதியை ஒட்டி வாழும் மக்களிடையே நதியின் மரணம் குறித்த ஆதங்கமும் அதை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையும் இருந்தே வருகிறது. இந்தக் கோரிக்கையின் பின்னே மதம் புனிதம் போன்றவைகள் இருந்தாலும், தங்கள் பொருளாதார வாழ்க்கையோடும் பிழைப்போடும் நேரடியாக தொடர்பு கொண்டுள்ள அந்நதியின் மறுபிறப்பை அம்மக்கள் நீண்ட காலமாகவே எதிர்நோக்கி இருக்கிறார்கள்.
எண்பதுகளில் இருந்தே கங்கையைக் காக்க ஏராளமான இயக்கங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. சூழலியல் தன்னார்வ குழுக்களில் இருந்து இந்து மத மடங்கள் வரை அவரவர் சொந்த நோக்கங்களுக்காக கங்கையைக் காக்கும் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். எனவே தான், உத்திரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களின் ஓட்டுக் கட்சித் தேர்தல் வாக்குறுதிகளில் கங்கையைக் காப்பது என்கிற அம்சம் தவறாமல் இடம் பிடித்து வருகிறது. கங்கையை மீட்பதற்கான பல்வேறு திட்டங்களும் கடந்த காலங்களில் பல்வேறு அரசாங்கங்களால் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.
கங்கையைக் காப்பாற்ற வேண்டும் என்பது மோடியின் சிந்தனையில் உதித்த புதிய கண்டுபிடிப்பல்ல. 1986-ல் மத்திய அரசால் கங்கை செயல் திட்டம் துவங்கப்பட்டு பின்னர் பிரதமரை தலைவராகவும், கங்கை பாயும் மாநிலங்களின் முதலமைச்சர்களை உறுப்பினர்களாகவும் கொண்டு தேசிய கங்கை பாசன மேலாண்மைத் துறை அமைக்கப்பட்டது. கங்கையைத் தூய்மைப்படுத்துவதற்காக இதுவரை பல்லாயிரம் கோடி ரூபாய்கள் கொட்டப்பட்டுள்ளன. கடைசியாக மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் 2,600 கோடி ரூபாய் கங்கையைத் தூய்மைப்படுத்தும் பணிக்காக ஒதுக்கப்பட்டது.
இரண்டு பத்தாண்டுகளுக்கும் மேலாக எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளாலும், பல்லாயிரம் கோடி ரூபாய்களைக் கொட்டியும் செய்ய முடியாத பணியைத் தான், எச்சி துப்புவதைத் தடுப்பதன் மூலம் செய்து முடித்து விடுவேன் என்கிறார் மோடி. சோழியன் குடுமி சும்மா ஆடும் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை.
மோடி வாரணாசியில் போட்டியிட்டதில் இருந்து அமித் ஷாவை உத்திரபிரதேச பாரதிய ஜனதாவின் தேர்தல் பொறுப்பாளராக நியமித்தது, முசாபர்பூர் கலவரம், கங்கா மாதா மோடிக்கு அனுப்பிய ‘அழைப்பு’, கங்கையின் புனிதத்தை மீட்பேன் என்று மோடி பிரச்சாரத்தின் போது அடித்த சவடால் உள்ளிட்டு சகலமும் பாரதிய ஜனதாவின் தேர்தல் திட்டத்திற்கு உட்பட்டே நடந்தேறியது.
கங்கை மாசு காரணம் யார் 4பல கட்டங்களாக நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் துவக்கத்தில் தொழில் வளர்ச்சி குறித்த அளப்புகளும் இறுதியில் இந்துத்துவ பல்லிளிப்புகளுமாக பாரதிய ஜனதாவின் தேர்தல் அணுகுமுறை படு நேர்த்தியாக திட்டமிடப்பட்டிருந்தது. தேர்தலின் பிந்தைய கட்டத்தில் உத்திரபிரதேசம் மற்றும் இந்தி பேசும் மாநிலங்களுக்கான வாக்குப்பதிவுகள் நெருங்க நெருங்க பாரதிய ஜனதா தனது ’வளர்ச்சி’ முகமூடியை கழற்றி எறிந்து விட்டு உண்மையான இந்துத்துவ முகத்தோடு நின்றது.
கீழ்மட்டத்தில் கலவரங்களைத் தூண்டும் கிரிராஜ் கிஷோர், ப்ரவீன் தொகாடியா, அமித்ஷா வகையறாக்களின் வெறியூட்டும் பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்த அதே நேரம் மேல் மட்டத்தில் மோடி கங்கையின் புனிதம், வாரணாசியின் புராணப் பெருமை போன்ற ’சட்டை கசங்காத’ இந்துத்துத்துவ பாணி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். மேலதிகமாக கங்கை நதியை நம்பி வாழும் 40 கோடி மக்களின் வாக்குகளை அள்ளுவதற்கும் கங்கையின் புனித மீட்பர் அவதாரம் அவருக்கு தேவைப்பட்டது.
ஆனால், கங்கையின் புனிதம் உண்மையில் எச்சில் துப்பியதால் தான் கெட்டதா? இல்லை. அந்த நதியில் கலக்கும் பிணங்களும், இதர மதச் சடங்குகளும், தொழிற்சாலைக் கழிவுகளும் தான் கங்கையின் சீர்கேட்டுக்கு பிரதானமான காரணம். இதில் எதையுமே மோடி தொட முடியாது என்பது தான் எதார்த்தமான உண்மை.
தொழிற்சாலைகளைக் கட்டுப்படுத்த இறங்கினால் கார்ப்பரேட்டுகளின் டார்லிங்காக அவரால் தொடர முடியாது. மதச் சடங்குகளைக் கட்டுப்படுத்த முனைந்தால் ஆர்.எஸ்.எஸ் உடனடியாக மோடிக்கான கோட்சேவை அனுப்பி வைக்கும். கங்கையில் மிதந்து செல்லும் பிணங்களைத் தடுக்க நினைத்தால் அதைத் தின்று பிழைக்கும் அம்மணக் குண்டி அகோரிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே தான் எச்சில் துப்பாதீர்கள் என்று நம் குரல்வளையைப் பிடிக்கிறார்.
கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதும் பார்ப்பனிய மூட்த்தனங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பதும், அதன் சுமையை மக்களின் மேல் ஏற்றுவதும் தான் பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் ‘இந்துத்துவ’ அரசியல் பாணி. வெற்று சவடால்களுக்குப் பின்னுள்ள இந்த உண்மையான நோக்கங்களை நாம் புரிந்து கொள்வதும் அதை பரந்துபட்ட மக்களிடம் எடுத்துச் செல்வதும் தான் இவர்களை முறியடிப்பதற்கான முன்தேவை.
-    தமிழரசன் vinavu.com

கருத்துகள் இல்லை: