ஞாயிறு, 8 ஜூன், 2014

கூடங்குளம் : 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி ! இந்தியாவில் முதல் முறை சாதனை...

கூடங்குளம் அணுமின் நிலைய முதல் உலையில் நேற்று 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இநதிய அணுமின் நிலையங்களில் முதல் முறையாக உற்பத்தியில் சாதனை படைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் ரூ.13 ஆயிரத்து 500 கோடி முதலீட்டில் இந்தியா  ரஷ்யா கூட்டு முயற்சியுடன் தலா 1,000 மெகாவாட் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான கட்டுமானப் பணிகள் கடந்த 2001 செப்டம்பரில் தொடங்கியது. இறுதியாக 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அணு உலையில் மின் உற்பத்தியை தொடங்க திட்டமிடப்பட்டது. இந்நிலையில் 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால், 6 மாதங்களுக்கும் மேலாக அணுமின் நிலைய பணிகள் நிறுத்தப்பட்டன.


பின்னர் மத்திய, மாநில அரசின் நிபுணர் குழுக்கள் கூடங்குளத்தில் ஆய்வு நடத்தியதன் அடிப்படையில் 2012 மார்ச் 19ம் தேதி முதல் கூடங்குளம் அணுமின் நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கியது. எனினும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதால் பணிகள் தாமதமாகின. கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்க அணுசக்தி ஒழுங்கு முறை வாரியம் அனுமதி அளித்தது. இதை தொடர்ந்து ஜூலை 13ம் தேதி முதல் அணு உலை அணு பிளவுக்கு உட¢படுத்தப்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு அக்.22ம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு கூடங்குளத்தில் 160 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு அபிஷேகப்பட்டியில் உள்ள மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டது. தொடர்ந்து மின் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கான பணிகள் கூடங்குளத்தில் நடந்து வந்தன. இந்நிலையில் நேற்று பிற்பகல் 1.20 மணிக்கு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

இதுகுறித்து அணு மின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் கூறியதாவது: ரஷ்ய விஞ்ஞானிகள் குழு, அணு சக்தி ஒழுங்கு முறை வாரியத்தின் பார்வையாளர்கள் நடத்திய பாதுகாப்பு ஆய்வின் அடிப்படையில் கூடங்குளத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதன் மூலம் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து முழு மின் உற்பத்தியை எட்டப்பட்டுள்ளது. கூடங்குளத்தில் தற்கால சர்வதேச தரத்தின் அடிப்படையில் அனைத்து உயர் ரக பாதுகாப்பு அம்சங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மின்உற்பத்தி 900 மெகாவாட்டாக குறைக்கப்பட்டு பின்னர் தேவையான அனுமதியை பெற்று தொடர்ந்து 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.இவ்வாறு சுந்தர் கூறினார்.

இந்தியாவில் முதல் முறை: இந்தியாவிலேயே ஒரு அணு உலையில் அதிகபட்சமாக 1000 மெகாவாட் மின்சாரம் கூடங்குளத்த¤ல் தான் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது அணுமின் வரலாற்றில் முதல் முறையாகும். இதுவரை தாராப¢பூர் அணு மின் நிலையத்தில் அதிகபட்சமாக ஒரு அணு உலையில் 550 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியே சாதனையாக இருந்து வந்தது.

2வது அணு உலையில் டிசம்பரில் மின் உற்பத்தி:

டிசம்பரில் 2வது அணு உலையின் மின் உற்பத்தி.  முதல் அணு உலையில் தொடர்ந்து 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி என்பது குறித்து இந்திய அணு சக்தி ஒழுங்கு முறை வாரியம் ஆய்வு நடத்தி அனுமதி அளிக்கும். அதன் பின்னர் 2வது அணு உலையில் பணிகள் விரைவுபடுத்தப்படும். 2வது அணு உலையின் மூலம் வருகிற டிசம்பர் மாதம் மின் உற்பத்தியை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் தெரிவித்தார்.

தமிழகத்தின் பங்கு 465 மெகாவாட்:

கூடங்குளம் முதல் அணு உலையில் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டாலும் அதில் தமிழகத்தின் பங்கு 465 மெகாவாட்தான். மீதமுள்ள மின்சாரம் தென்னக மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். dinakaran.com

கருத்துகள் இல்லை: