புதன், 11 ஜூன், 2014

பயங்கரவாதிகள் படங்களுடன் மோடி படம்: கேரள கல்லூரி இதழில் வெளியீடு

கல்லூரி ஆண்டுவிழா சிறப்பு மலரில் தீவிரவாதிகளின் படங்களுடன் பிரதமர் மோடியின் படம் சேர்க்கப்பட்டதால் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னம் குளத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் ஆண்டு விழாவுக்கான சிறப்பு மலர் வெளியிடப்பட்டுள்ளது. அந்த மலரின் ஒருபக்கத்தில் நல்ல முகங்கள் என்ற தலைப்பில் மகாத்மா காந்தி, ‘அன்னை’ தெரசா, தாகூர், விவேகானந்தர், லெனின், நெல்சன்மண்டேலா உள்பட பலரது படங்கள் வெளியிடப்பட்டு இருந்தன. மற்றொரு உள்பக்கத்தில், எதிர்மறை முகங்கள் என்ற தலைப்பின் கீழ் பிரபல சந்தன கடத்தல் மன்னன் வீரப்பன், அஜ்மல் கசாப், பின்லேடன், சர்வாதிகாரிகள் ஹிட்லர், முசோலினி, விடுதலைபுலிகள் இயக்க தலைவர் பிரபாகரன், முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ்புஷ் ஆகியோரது படங்களுடன் பிரதமர் நரேந்திர மோடியின் படமும் பிரசுரிக்கப்பட்டு உள்ளது.
இதனை எதிர்த்து பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அமைப்பான யுவ மோர்ச்சா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கல்லூரி ஆண்டு விழா சிறப்பு மலரை தீவைத்து எரித்தனர். பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை தவறாக பிரசுரித்த கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
இது தொடர்பாக கல்லூரி முதல்வர், மாணவர் மலர் ஆசிரியர் உள்பட 7 பேர் மீது குன்னம் குளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  /tamil.webdunia.com

கருத்துகள் இல்லை: