ஞாயிறு, 8 ஜூன், 2014

4 கோடியுடன் போலீசுக்கு தண்ணி காட்டும் கரகாட்டகாரி மோகனம்பாள் !

வேலூர் வசந்தபுரம் இந்திரா நகரை சேர்ந்த கரகாட்டக்காரி மோகனாம்பாளின் காட்பாடி வீட்டில் ரூ. 4 கோடி பணம் மற்றும் 73 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மோகனாம்பாள், அவரது அக்கா நிர்மலா, அவரது மகன் சரவணன் மற்றும் உறவினர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
இதில் சரவணனின் மனைவி தேவிபாலா, மோகனாம்பாளின் அக்கா நிர்மலாவின் மூத்த மகன் பழனி(40) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் மோகனாம்பாளுக்கு உதவியதாக அணைக்கட்டு பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் பாபுவையும் போலீசார் கைது செய்தனர்.

இருப்பினும் மோகனாம்பாள் உட்பட முக்கிய குற்றவாளிகள் யாரும் இதுவரை போலீசில் சிக்கவில்லை. ஒவ்வொரு நாளும் இவர்கள் தங்களுடைய இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருக்கின்றனர். பணம் பறிமுதல் செய்யப்பட்ட மறுநாள் மட்டும் தங்களுக்கு வேண்டியவர்களிடம் செல்போனில் பேசியுள்ளனர்.
அப்போது அவர்கள் ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து பேசியது தெரியவந்தது. அதன் பிறகு அவர்கள் எந்த செல்போன் நம்பரில் உள்ளனர் என்பது மர்மமாகி விட்டது.
இருந்தாலும் அவர்கள் பதுங்கியிருந்து கோர்ட்டில் முன்ஜாமீன் பெற முயற்சித்து வருவது போலீசுக்கு தெரிய வந்துள்ளது. இதனால் அவர்கள் எந்த கோர்ட்டில் சரணடைந்து விடாமலும், முன்ஜாமீன் பெறாமலும் தடுக்க வேண்டிய முயற்சிகளில் தனிப்படை போலீசார் இறங்கியுள்ளனர்.
இதற்காக சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஆந்திர மாநில சித்தூர் கோர்ட்டுகளில் இந்த கும்பல் சரணடையாமல் தடுக்க வசதியாக அம்மாநில போலீசாருக்கும் தகவல் அளித்தனர். அவர்கள் அங்கு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் பின்னணி என்ன? வசந்தபுரத்தில் இருந்து காட்பாடி ரெயில்வே நிலையத்துக்கு மிக அருகில் வீடு பார்த்து குடிபெயர்ந்த காரணம் என்ன? பணம் வேறு இடத்தில் இருந்து இங்கு வந்ததா? அல்லது இங்கிருந்து வேறு யாருக்காவது பட்டுவாடா செய்ய வைக்கப்பட்டிருந்ததா? என்ற தொடர் கேள்விகள் எழுந்துள்ளது.
இதற்கிடையே மோகனாம்பாள் வழக்கில் முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு தொடர்பு இருந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்:–
மோகனாம்பாள், நிர்மலா மற்றும் சரவணன் எங்கே மறைந்துள்ளனர் என்று உறுதியாக தெரியவில்லை. நாளுக்கு நாள் இடத்தை மாற்றி கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் அவர்களது நடமாட்டத்தை தெரிந்து கொள்ள அவர்களுக்கு கடந்த காலங்களில் உதவியாக இருந்தவர்களுடைய செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.
மேலும் அவர்களுடன் நெருக்கமாக இருந்தவர்கள் பட்டியலும் தயாரிக்கப்பட்டு வருகிறது. கரகாட்டக்காரி மோகனாம்பாள் கும்பலை நெருங்கி விட்டோம். அவர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என்று கூறினார்.maalaimalar.com

கருத்துகள் இல்லை: