செவ்வாய், 27 மே, 2014

மோடி பதவியேற்பு விழாவில் லதா ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கலந்து கொண்டு மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற நரேந்திர மோடி தலைமையிலான
மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் தமிழக ஆளுநர் ரோசய்யா, தமிழகத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர்கள் இல.கணேசன், எச். ராஜா உள்ளிட்டோரும் பாஜக கூட்டணியில் இடம்பெற்ற மதிமுக, தேமுதிக நீங்கலாக உள்ள பிற கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச கலந்து கொண்டதையடுத்து, இந்நிகழ்வை புறக்கணித்து மதிமுக பொதுச் செயலர் வைகோ தில்லியில் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினார். அதே சமயம், மற்றொரு கூட்டணி கட்சியான தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, இளைஞர் அணித் தலைவர் சுதீஷ் ஆகியோர் திங்கள்கிழமை காலை 8.20 மணி விமானத்தில் சென்னையில் இருந்து தில்லிக்கு புறப்பட்டனர். ஆனால், அவர்கள் பதவியேற்பு விழாவுக்கு கடைசிவரை வரவில்லை.

பாஜக சார்பில் மூத்த தலைவர்கள் எச். ராஜா, வானதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாமக சார்பில் அதன் மாநிலத் தலைவர் ஜி.கே. மணி, இளைஞர் அணித் தலைவரும் எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ், முன்னாள் எம்.பி. தன்ராஜ், முன்னாள் எம்எல்ஏக்கள் கே.ஆர். அனந்தராமன், கார்த்தி, சுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் சார்பில் அதன் தலைவரும் புதுச்சேரி முதல்வருமான ரங்கசாமி, புதுச்சேரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆர். ராதாகிருஷ்ணன், கட்சியின் பொதுச் செயலர் பாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் பச்சமுத்து, புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலர் ஈ.ஆர். ஈஸ்வரன் ஆகியோரும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
நடிகர் ரஜினிகாந்த் சார்பில் அவரது மனைவி லதா ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டு பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். மோடிக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக ஆளுநர் ரோசய்யா திங்கள்கிழமை இரவே சென்னை திரும்பினார். dinamani.com

கருத்துகள் இல்லை: