புதன், 28 மே, 2014

மோடி அமைச்சரவையில் உள்ள 13 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவை

டெல்லி: மத்திய அரசில் புதிதாக பதவி ஏற்றுள்ள அமைச்சர்களில் 13 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தேசிய தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஆகிய அமைப்புகள் தெரிவித்துள்ளன.மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 45 மந்திரிகள் உள்ளனர். இவர்களில் 23 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 10 பேர் தனிபொறுப்பு உள்ள இணை அமைச்சர்களாகவும் மற்றவர்கள் இணை அமைச்சர்களாகவும் பொறுப்பு ஏற்றுள்ளனர். மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்துள்ள பிரகாஷ் ஜாவேத்கர் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோர் எந்த அவையிலும் உறுப்பினர்களாக இல்லை. விரைவில் இவர்கள் ஏதேனும் ஒரு மாநிலத்திலிருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். இவர்கள் தவிர மற்ற 44 அமைச்சர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுக்களை தேசிய தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஆகிய அமைப்புகள் ஆய்வு செய்து சில தகவல்களை வெளியிட்டுள்ளன. அதன்படி மோடி அமைச்சரவையில் உமாபாரதி, பஸ்வான் உள்பட 13 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 7 பேர் மீது மிகவும் சீரியசான வழக்குகள் உள்ளது.


மத்திய அமைச்சர்களில் நான்கு பேரை தவிர மற்றவர்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள். மத்திய அமைச்சர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.13.47 கோடி. 5 அமைச்சர்களுக்கு ரூ.30 கோடிக்கும் அதிகமாக சொத்து உள்ளது. நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு ரூ.113 கோடி சொத்தும், அகாலி தளத்தை சேர்ந்த அமைச்சர் ஹர்சிம்ரத் கவுருக்கு ரூ.108 கோடி சொத்தும் உள்ளது. கோபிநாத் முண்டே, மேனகா காந்தி, பியூஷ் கோயல் ஆகியோரும் தங்களுக்கு ரூ.30 கோடிக்கும் அதிகமாக சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். dinakaran.com

கருத்துகள் இல்லை: