திங்கள், 26 மே, 2014

பா.ஜ., கூட்டணியில் ம.தி.மு.க., நீடிக்குமா?

சென்னை : பா.ஜ., கூட்டணியில், ம.தி.மு.க., நீடிக்குமா என்பதை முடிவு செய்ய, அக்கட்சியின் உயர் நிலைக் குழுக் கூட்டம் மற்றும் மாவட்ட செயலர்கள் கூட்டம், வரும் 29ம் தேதி நடக்கிறது. பா.ஜ., கூட்டணியில் வேறு எந்த கட்சியும் இணைவதற்கு முன், ம.தி.மு.க., இணைந்தது. தொகுதி உடன்பாட்டில் கூட, எதிர்ப்புகள் தெரிவிக்காமல், கிடைத்த தொகுதிகளில் போட்டியிட்டது. ஏழு லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு, ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில், மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கு, இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு, மத்திய அரசு அழைப்பு விடுத்தது, ம.தி.மு.க.,வுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இம்முடிவை, மறு பரிசீலனை செய்யவேண்டும் என, பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங், பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள மோடி ஆகியோரை, டில்லியில் நேரில் சந்தித்து, வைகோ கோரிக்கை விடுத்தார். வைகோவின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. 
இதனால், ராஜபக்சேவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, டில்லியில் இன்று கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். இதற்கிடையே, கட்சியின் உயர்நிலைக் கூட்டம், வரும், 29ம் தேதி காலை 9:00 மணிக்கும், மாவட்ட செயலர்கள் மற்றும் ஆட்சி மன்றக் குழுக் கூட்டம், காலை 11:00 மணிக்கும், கட்சியின் அவைத் தலைவர் துரைசாமி தலைமையில், சென்னை, எழும்பூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நடக்கும் என, வைகோ அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில், பா.ஜ., கூட்டணியில், ம.தி.மு.க., நீடிப்பது குறித்து, முடிவெடுக்கப்படும் என, அக்கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது. dinamalar.com

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

உங்களுக்கு இன்னமும் உண்மை நிலை தெரியவில்லை என்பதை உங்கள் விமர்சனம் காட்டுகிறது. தமிழர் இன்று இவ்வளவு துயரங்களை அனுபவிக்க காரணம் நம்மிடம் ஒற்றுமை இல்லாமை. ஒற்றுமை உங்களை போன்றவர்களால் தான் சிதைக்கபடுகிறது. இதுபோன்ற ஒரு மோசமான புத்திக்கு சொந்தக்காரர்கள் நாம் மட்டுமே. நாலு பேர் மத்தியில் நான் தான் அறிவாளி என்று காட்டிக்கொள்ள உங்களைபோல் நிறையப்பேர் நாட்டில் அலைகிறார்கள்.