சனி, 31 மே, 2014

ரஜினிக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி? தமிழக பா.ஜ.,வை வலுப்படுத்தும் முயற்சி ?

சட்டசபை தேர்தலுக்கு முன், தமிழக பா.ஜ.,வை வலுப்படுத்த, நடிகர் ரஜினிக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி கொடுத்து, அவரை பா.ஜ., பக்கம் இழுக்க, அக்கட்சி தலைமை திட்டமிட்டு உள்ளதாக, அரசியல் வட்டாரங்களில் கூறுகின்றனர்.திராவிட கட்சிகளை எதிர்த்து, தமிழகத்தில் கட்சி அமைப்பை பா.ஜ.,வால் கட்டமைக்க முடியவில்லை. கட்சி நிர்வாகிகளை மாற்றுவதாலும், பலன் கிடைக்கவில்லை. லோக்சபா தேர்தலில், மோடி அலை வீசினாலும், தமிழகத்தில் வெற்றி பெறும் அளவுக்கான ஓட்டுகளாக, அதை மாற்ற முடியவில்லை.  ரஜினி ஒரு பக்கா சுயநலவாதி. விஜய் மற்றும் விஜய காந்த் இன் தில் கூட ரஜினியிடம் கிடையாது. தனது அண்ணனுக்கு, அவர் வாழ்க்கைக்கு என்று சில கோடிகளை ஒதுக்க நினைக்கும் அளவிற்கு நல்ல மனம் கொண்ட ரஜினி, ஆனால் லதாவின் இடையுறு இருந்து அதை செய்யாமல் விடும் அளவிற்கு, சுயநலவாதி, ரஜினி. லதா, ரவி ராகவேந்திரா இமசைகளுக்குள் சிக்கி, நசுங்கியாச்சு. இப்போது கோச்சடையான் ஃப்லாபுக்கு நஷ்டஈடு அடுத்த படத்தின் சம்பளத்தில் இருந்து கொடுப்பாராம். இவர் கையில் பணம் இல்லையா என்ன. இப்படி ஒரு சுயநலம், தனியாக முடிவெடுக்க முடியாத நிலைமை. BJP என்னமோ இவரை சேர்த்தால், பல சீட்டு தமிழ் நாட்டில் பெறும் என்ற நினைப்பு. அதெல்லாம், ரஜினிக்கு பாட்ஷா பட சமயத்தோடு காலி. காலத்தின் கட்டளை என்பது, அவர் தமிழ் நாட்டோடு ஒட்டலை என்பது தான். இன்னுமும் ரஜினி ரஜினி என்று வாழ்கையை வீணாக்காதீர்கள். ஜீரணிக்க முடிஞ்சா பாருங்க, இல்ல அவர் போஸ்டருக்கு பால் ஊத்தி, அதற்கு மேல டிக்காஷன் ஊத்தி, காபி போட்டு குடிங்க
இத்தனைக்கும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, தே.மு.தி.க., - பா.ம.க., - ம.தி.மு.க., போன்ற கட்சிகளை, கூட்டணியில் இணைத்தும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. மக்களை கவரும் தலைமை, தமிழக பா.ஜ.,வில் இல்லை என்பதே இதற்குக் காரணமாக கூறுகின்றனர். லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில், 2016 சட்டசபை தேர்தலுக்கும், இக்கூட்டணி தொடரும் என, பா.ஜ., தரப்பில் கூறினாலும், திராவிட கட்சிகளை எதிர்த்து, ஓட்டுகளைப் பெறும் வகையில், கட்சியைத் தயார்படுத்த வேண்டும் என்பது, கட்சியின் அகில இந்திய தலைமையின் எண்ணமாக உள்ளது என, பா.ஜ., வட்டாரங்களில் கூறுகின்றனர்.இதற்கிடையே, பா.ஜ.,வுடன் தே.மு.தி.க.,வை இணைப்பது பற்றிய தீவிரமான கருத்துக்களும் எழுந்துள்ளன. ஆனால், விஜயகாந்த் இதற்கு சம்மதிப்பாரா என்பது கேள்விகுறியே என்கின்றனர். தே.மு.தி.க.,வை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகளுக்கு இடையே, ரஜினிக்கு எம்.பி., பதவி கொடுத்து, பா.ஜ.,வுக்கு இழுக்கும் முயற்சியையும், பா.ஜ., மேற்கொண்டுள்ளதாக, அக்கட்சி வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.

ஈர்ப்புமிக்க தலைவர்



இதுகுறித்து தமிழக பா.ஜ., மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது: சட்டசபை தேர்தலுக்கு முன், கட்சிக்கு வலுவான, மக்கள் ஈர்ப்பு மிக்க தலைவர் ஒருவர் தேவைப்படுகிறார். அதற்கு சரியான நபர் என நாங்கள் தேர்ந்தெடுத்திருப்பது நடிகர் ரஜினியை. அவர், இந்தியாவின் புதிய பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர். ஒருவர் மீது மற்றவர் கூடுதல் நம்பிக்கை வைத்து செயல்படுகிறவர்கள். அதனால், எங்களின் இந்த எண்ணத்தை, மோடியிடம் ஏற்கனவே கொண்டு சென்று விட்டோம்.அவரும், ரஜினி விரும்பினால் எனக்கு ஒன்றும், ஆட்சேபனை இல்லை என்று சொல்லிவிட்டார்.லோக்சபா தேர்தலுக்கே, பா.ஜ.,வுக்கு ஆதரவாக ரஜினியை களம் இறங்க வைக்க வேண்டும் என, நாங்கள் விரும்பினோம்.குறைந்தபட்சம் அவர் வாய்ஸ் கொடுத்தால் போதும் என, நினைத்தோம். இதை மோடியிடம் நாங்கள் சொன்னதும், 'யாரையும் நாம் நிர்ப்பந்திக்க வேண்டாம். தேவையானால், அவரை நான் வீடு தேடிச் சென்று, பார்க்கத் தயார்' என்று சொன்னார்.

சம்மதிக்கும் பட்சத்தில்...



அந்த அடிப்படையில் தான், ரஜினியின் நலம் விசாரிப்பதற்காக, அவர் வீடு தேடி சென்றார், மோடி.அப்போது நிருபர்களிடம் பேசிய ரஜினி, 'மோடி என் நண்பர். நான் உடல்நிலை சரியில்லாதபோது, தொடர்ந்து நலம் விசாரித்தார். தேர்தலில், அவரது எண்ணங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்' என, கூறி, தன்னுடைய ஆதரவு பா.ஜ.,வுக்கு தான் என்பதை, மறைமுகமாக எல்லோருக்கும் உணர்த்தினார்.ரஜினியின் வாழ்த்து பலித்து, மோடி பிரதமராகி விட்டார். இப்போது, தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்த, ரஜினியை கொண்டு வர பா.ஜ., தலைமை விரும்புகிறது. அதற்கு ஏதுவாக, ரஜினிக்கு ராஜ்யசபா எம்.பி., பதவியைக் கொடுக்கவும் தயாராக இருக்கின்றனர்.இது தொடர்பாக, விரைவில் ரஜினியிடம் மூத்த தலைவர்கள் பேசுவர். அதற்கு ரஜினி சம்மதிக்கும் பட்சத்தில், 2016 சட்டசபை தேர்தலுக்கான பணிகளை தமிழக பா.ஜ., உடனடியாகத் துவக்கும்.இவ்வாறு, அந்த நிர்வாகி கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: