வியாழன், 29 மே, 2014

பிரிட்டனில் இன்று நாடு கடத்தப்படும் நிலையில் உள்ள நைஜீரிய பெண்!

நைஜீரியாவில் இருந்து பிரிட்டனுக்கு வந்து அரசியல் தஞ்சம் கோரிய 31
வயது பெண்ணும், அந்த பெண்ணின் இரு குழந்தைகளும், பிரிட்டனில் இருந்து நாடுகடத்தப்பட உள்ளனர் என தெரியவருகிறது. தாம் நைஜீரியா திரும்பினால் உயிராபத்து ஏற்படலாம் என இந்த பெண் கோர்ட்டில் கூறியிருந்தார்.
இவர்கள் வசித்துவந்த லீட்ஸ் நகரில் இருந்து நேற்று மாலை இவர்களை லண்டன் நகருக்கு அழைத்துச் சென்றுள்ளனர், அதிகாரிகள்.
“லண்டன் விமான நிலையத்தில் இருந்து இவர்களை நாடுகடத்தும் நடைமுறை இது” என்று கூறியுள்ள இந்தப் பெண்ணின் வக்கீல், “இந்த வழக்கை ஹான்டில் செய்யும் வக்கீலான எனக்கே, இவர்களை நாடுகடத்தப் போவதாக அதிகாரிகள் அறிவிக்கவில்லை” என்கிறார்.

மேலே போட்டோவில் உள்ள நைஜீரியாவை சேர்ந்த அஃபுசட் சாலியு என்ற இந்தப் பெண்ணும், பெண்ணின் குழந்தைகளான பஸீரத் (4 வயது), ரஷிதத் (4 வயது), தற்போது லண்டனில் உள்ள குடிவரவு அலுவலக தடுப்பு மையம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அந்த விபரத்தையும், அதிகாரிகள் வெளியிடவில்லை.
லண்டனில் இருந்து நேரடியாக நைஜீரியா செல்லும் விமானம் ஒன்று இன்று (வியாழக்கிழமை) மதியம் புறப்படுகிறது.
அந்த விமானத்தில் இவர்களை நாடு கடத்துவதற்கு முன், ஸ்டே ஆர்டர் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார், இந்த குடும்பத்தின் வக்கீல் பூமிகா பார்மர்.
நைஜீரியாவில் வசித்த இந்தப் பெண், கிருஸ்துவ மதத்தை சேர்ந்தவர். அங்கு தற்போது பொக்கோ ஹாரம் தீவிரவாத இயக்கத்தினர்,  பள்ளி மாணவிகளை கடத்திச் சென்று வைத்துள்ளார்கள்.
அந்த மாணவிகளில் இஸ்லாமியர்களான சிலரை மட்டும், ஷரியா சட்டப்படி இஸ்லாமிய பாணியில் ஆடை அணிவிக்கப்பட்டு வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்கள். இஸ்லாமியர் அல்லாத மாணவிகளின் கதி என்ன ஆனது என்று தெரியாது.
இதனால், கிருஸ்துவர்களான இந்த பெண்ணும், சிறுமிகளாக இரு மகள்களும் நைஜீரியாவுக்கு திருப்பி அனுப்பப்பட கூடாது என பிரிட்டிஷ் குடிவரவு அமைச்சுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அந்த மகஜரில், 1 லட்சத்து 20 ஆயிரம் பிரிட்டிஷ் பொதுமக்கள் கையெழுத்து இட்டிருந்தனர். ஆனால், அதையும் கடந்து, இவர்களை நாடு கடத்தும் முடிவை பிரிட்டன் எடுத்துள்ளது.
/viruvirupu.com/

கருத்துகள் இல்லை: