சனி, 31 மே, 2014

மா.செ.,க்களை ஒடுக்க கலைஞர் திட்டம்: ஸ்டாலின் எதிர்ப்பு !

கடந்த, 1991ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு பின், இந்த தேர்தலில் தான், தி.மு.க., போட்டியிட்ட எல்லா தொகுதிகளிலும் தோற்று, பூஜ்ஜியத்தைப் பெற்றுள்ளது. இந்தளவுக்கு கட்சி பரிதாபமாக தோற்றதற்கு, மாவட்டச் செயலர்களும், வேட்பாளர் தேர்வும் தான் காரணம் என்று தெரியவந்துள்ளது.இந்த பிரச்னையை சரி செய்ய, மாவட்டச் செயலர்களின் ஆதிக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர, கருணாநிதி முடிவு செய்துள்ளார். தற்போது, கட்சியில், 32 மாவட்டங்கள் உள்ளன. மாவட்டச் செயலர்களாக இருப்பவர்கள், வெகு காலமாக அந்த பதவியில் இருந்து வருகின்றனர். அவர்களை மாற்றவோ, புதியவர்களுக்கு வாய்ப்பு தரவோ முடியாத அளவுக்கு, அவர்களது ஆதிக்கம் வலுவாக உள்ளது. இதனால், தனக்கு நிகராக, வேறு யாரையும் தங்கள் மாவட்டத்தில் அவர்கள் வளர விடுவதில்லை.அதேபோல், தங்களுக்கு பிடிக்காதவரை எம்.பி.,யாகவும் அவர்கள் விடுவதில்லை. இது போன்ற காரணத்தால், தேர்தலில் அவர்கள் தோற்றுப் போவதற்கான வேலைகளைச் செய்யவும், மாவட்டச் செயலர்கள் தயங்குவதில்லை என, குற்றம் சாட்டப்படுகிறது.


உள்ளூரில் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவர், எந்த ஜாதியினராக இருந்தாலும், அவருக்கு கட்சிப் பொறுப்பு அளிக்கலாம் என்றும் கருணாநிதி கருதுகிறார்.இதையடுத்து, தற்போதுள்ள மாவட்டங்களை இரண்டாகப் பிரித்து, வளரும் புதுமுகங்களுக்கு பொறுப்பு அளித்தால், அந்த பகுதியில் கட்சி வளரும் என்றும் கணக்கு போடுகிறார், கருணாநிதி; அதற்கு ஸ்டாலின் முட்டுக்கட்டை போடுகிறார் என்கின்றனர்.

தற்போதுள்ள மாவட்டச் செயலர்கள் எல்லாரும், ஸ்டாலின் ஆதரவாளர்களாக வலம் வருகின்றனர். அதனால், அவர்களுக்கு இடையூறு செய்யக் கூடாது என, ஸ்டாலின் நினைக்கிறார். அவர்களும், மாவட்டத்தை இரண்டாக்குவதற்கு, ஸ்டாலினிடம் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால் அதிருப்தி அடைந்த ஸ்டாலின், நேற்று காலை, அறிவாலயம் வந்துள்ளார். அப்போது, மாவட்டப் பிரிப்பு தொடர்பாக விவாதம் நடந்துள்ளது. கருணாநிதி எடுத்துள்ள முடிவு குறித்து, ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளனர். அதை கேட்டதும், வந்த வேகத்தில் வீட்டுக்கு கிளம்பி சென்று விட்டார் ஸ்டாலின் என்று, தி.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர்.எனவே, இந்த விவகாரத்தில் கருணாநிதி கை ஓங்குமா அல்லது ஸ்டாலின் எதிர்ப்பு காரணமாக, இந்த திட்டம் கிடப்பில் போடப்
படுமா என்ற விவாதம், தி.மு.க., வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- நமது சிறப்பு நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: