வியாழன், 12 ஆகஸ்ட், 2010

இந்தியாவில் இருந்து `சூப்பர் பக்' நோய்க்கிருமி ஐரோப்பாவுக்கும் வேறுபல நாடுகளுக்கும் பரவி

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பரவும்
ஆபத்தான நோய்க்கிருமி:விஞ்ஞானிகள் அதிர்ச்சி


நம் உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு கிருமிகளே காரணமாகும். இந்த கிருமிகளை கொன்று நோயை குணப்படுத்துவதற்கு பலவகை நோய் எதிர்ப்பு மருந்துகளை அவ்வப்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்து விற்பனைக்கு அனுப்புகிறார்கள்.
குறிப்பிட்ட நோய்க்கிருமிகளை அழிப்பதற்கு குறிப்பிட்ட மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால் எந்த மருந்துக்கும் கட்டுப்படாத `சூப்பர் பக்' என பெயர் சூட்டப்பட்டுள்ள ஒரு வகை ஆபத்தான நோய்க்கிருமி இந்தியாவில் உருவாகி இருப்பதாகவும் 

அது வெளிநாடுகளுக்கு பரவி வருவதாகவும் விரைவில் இந்த கிருமியால் மிகப்பெரிய நெருக்கடியை உலகம் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிக்கொண்டு இருப்பதாகவும் இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான சென்னையிலும், அரியானா மாநிலத்தில் இருந்தும் நோயாளிகளிடம் ரத்த மாதிரிகளை பெற்று சோதனை செய்ததில் சென்னையில் 44 பேரிடமும் அரியானாவில் 26 பேரிடமும் இந்த நோய்க்கிருமி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம் ஆகிய நாடுகளில் உள்ள நோயாளிகளிடம்தான் முதலில் இந்த கிருமிகள் உற்பத்தி ஆகி உள்ளன.

இந்த நாடுகளில் குறைந்த செலவில் மருத்துவ சிகிச்சை பெற வாய்ப்பு இருப்பதால் சமீப காலமாக அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, நெதர்லாந்து, சுவீடன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து ஏராளமான நோயாளிகள் அங்கு சென்று வருகிறார்கள். குறிப்பாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதற்காக பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு சென்று வரும் ஐரோப்பியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 சுற்றுலாபயணிகளும் கணிசமான அளவு அந்த நாடுகளுக்கு செல்கிறார்கள். இவர்கள் மூலமாகத்தான் `சூப்பர் பக்' நோய்க்கிருமி ஐரோப்பாவுக்கும் வேறுபல நாடுகளுக்கும் பரவி இருக்கிறது.

கருத்துகள் இல்லை: