வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

குறைந்த முதலீட்டு படத் தயாரிப்பாளர்களுக்கு ரூ 18 லட்சம் மானியம்!

தமிழில் குறைந்த முதலீட்டில் படங்கள் தயாரித்த 9 தயாரிப்பாளர்களுக்கு ரூ 18 லட்சத்தை மானியமாக வழங்கியது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்.

இதுகுறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:

"தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது.

அதில், குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்படும் நேரடி தமிழ் படங்களுக்கு, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து ரூ.2 லட்சம் மானிய தொகை வழங்குவது பற்றி விவாதிக்கப்பட்டது. சங்க விதிகளுக்கு உட்பட்டு வந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன.

நாள் நட்சத்திரம், இரு நதிகள், வேடப்பன், பூச்சி, கரகம், வைதேகி, ஆடாத ஆட்டமெல்லாம், தமிழகம், உன்னை கண் தேடுதே ஆகிய 9 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அந்தப் படங்களை தயாரித்த பட அதிபர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் ரூ.18 லட்சத்தை சங்க தலைவர் ராம.நாராயணன் வழங்கினார்.

மேலும், பொதுக்குழுவில் எடுத்த தீர்மானத்தின்படி கியூப், யூ.எப்.ஓ. விலை நிர்ணயம் குறித்து வருகிற 18-ந் தேதி காலை 10 மணிக்கு, பிலிம்சேம்பர் வளாகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற இருக்கிறது. கூட்டத்தில், அனைத்து தயாரிப்பாளர்களும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்..."

-இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.

நிதி வழங்கும் நிகழ்ச்சியில் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன், துணைத்தலைவர் அன்பாலயா கே.பிரபாகரன், பெப்சி தலைவர் வி.சி.குகநாதன், நடிகர் சங்க செயலாளர் ராதாரவி, பிலிம்சேம்பர் பொருளாளர் கே.எஸ்.சீனிவாசன், தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர்கள் கே.பாலு, ஏ.என்.பவித்ரன், ஆனந்தி வி.நடராஜன், விஜயமுரளி ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

கருத்துகள் இல்லை: