வெள்ளி, 7 ஜனவரி, 2022

சட்டப்பேரவை ஆளுநர் உரையின்போது விடுதலை சிறுத்தைகள் வெளியேறியது! உண்மையில் ஒன்றிய அரசுக்கு எதிராகவா மாநில அரசுக்கு எதிராகவா?

tamil.samayam.com  : தமிழகத்தில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் நேற்று கலைவாணர் அரங்கத்தில் நடந்தது. தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற பின் நடக்கும் சட்டப்பேரவை கூட்டம் என்பதால் முதன் முதலாக அவர் உரையாற்றினார்.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், தமிழக ஆளுநரின் உரைக்கு திடீரென எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக கூட்டணியில் பிரதான கட்சியாக உள்ள விசிக கட்சி வெளிநடப்பு செய்தது.
இதை பார்த்து ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகள் வாயடைத்து போனாலும் திருமாவளவன் வெளியிட்டு இருக்கும் விளக்கம் பல்வேறு தரப்பினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இருந்தாலும் கூட திமுக கூட்டணியில் இருந்து கொண்டே தமிழ்நாடு அரசை தர்ம சங்கடத்தில் ஆழ்த்துவது போன்ற செயலில் விசிக ஈடுபடுவதை முதல்வர் ஸ்டாலின் ரசிக்கவில்லை என்கிற பேச்சும் அடிபடுகிறது.
ஆனால் இதை ஒருபொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் சிந்தனைச்செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்திருக்கும் பேட்டி திமுக கோட்டையை கதிகலங்க செய்யும் விதமாகவே அமைந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ கூறியது என்னவென்றால்:

சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்பு, பட்டியல் வகுப்பு மக்களுக்கு எதிரான வெறுப்பு என வெறுப்பின் அடிப்படையில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் பாஜக மாநிலங்களின் உரிமையை அழிப்பதில் குறியாக இருக்கிறது.


ஆளுநர் என்ற அடையாளத்திற்கு பின்னால் இருந்து இயங்குகின்ற அரசியலை அம்பலப்படுத்த, கண்டிக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் சட்டப்பேரவையை வெளிநடப்பு செய்தோம்.

இன்று, மாண்புமிகு முதல்வர் 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். எதிர் வருகின்ற 8ம் தேதி அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து, நீட் தேர்வு விலக்கு கோரும். தமிழ்நாடு முதல்வர் எடுக்கும் முயற்சி வெற்றி பெறும். தமிழக முதலமைச்சருக்கு பின்னால் நாங்கள் அணி திரண்டு நிற்போம்.

பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர் நியமனம் என்பது, சில மாநிலங்களில் மாநில அரசின் உரிமையாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை ஆளுநர் அந்த உரிமையை தக்க வைத்து இருக்கும் சூழல் உள்ளது.

இந்த உரிமையை பயன்படுத்தி தமிழகத்தில் மீண்டும் பாஜ தனது அரசியலை இங்குள்ள உயர் கல்வி நிறுவனங்களில் திணிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆகவே துணைவேந்தர் நியமனங்களை சுதந்திரமாக மாநில அரசு தீர்மானிக்கக் கூடிய சட்ட முன் வடிவு, கொண்டு வரப்பட வேண்டும் என்ற விவாதம் சட்டப்பேரவையில் முன்னெடுக்கப்பட்டது.

எதிர் வரும் நிதிநிலை கூட்டத்தொடரில் அத்தகைய மசோதா கொண்டுவரப்படும் என்ற உறுதி மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டில் நடந்த பல்வேறு சீர்கேடுகள் குறித்து பல்வேறு விதமான விசாரணைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக பட்டியல் மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கு ஆண்டொன்றுக்கு வழங்கப்படுகிற 14,000 கோடி எவ்வாறு கடந்த 10 ஆண்டுகளில் செலவழிக்கப்பட்டு உள்ளது? என்கிற வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வேண்டுகோள் வைத்துள்ளோம்.

சடங்கு தனமாக, சமூக நீதி திட்டங்களை தமிழக அரசு பின்பற்றாது. உயிரோட்டமாக அதனை நடைமுறைப்படுத்தும் என நம்புகிறோம். வருகிற ஜனவரி 30ம் தேதி காந்தியடிகளின் நினைவு நாளில் அரசு சார்பில் சமபந்தி போஜனம் நடைபெறுகிறது.

இத்தகைய சடங்கு தனமான நிகழ்ச்சிகளை தவிர்த்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி மாணவர்களோடு ஒரு நாளாவது தங்கி இருக்க வேண்டும். ஒருவேளை உணவாவது அந்த மாணவர்களோடு சேர்ந்து அருந்த வேண்டும்.

அந்த அடிப்படையில் அந்த மாணவர்களின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று, மாண்புமிகு முதல்வருக்கு கோரிக்கை விடுக்கின்றோம். இவ்வாறு வி.சி.க எம்.எல்.ஏ சிந்தனைச்செல்வன் கூறினார்.

விசிக எம்.எல்.ஏவின் இந்த பேட்டிதான், தற்போது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திமுகவுக்குள் சாதி பிரதான ஒன்றாக உள்ளதாக சமீப காலமாக பேசப்பட்டு வரும் சூழலில் விசிகவின் கோரிக்கையை, திமுக அரசு நிறைவேற்றுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும், தமிழகத்தில் சடங்கு தனமாக பின்பற்றப்படுகிற சமூக நீதி திட்டங்கள், பட்டியல் இன மக்களின் நிதி குறித்து வெள்ளை அறிக்கை என்று, விசிக இறங்கி அடிக்க தொடங்கி இருப்பது அரசியல் ரீதியாக ஆரோக்கியமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

அத்தோடு நிற்காமல் ஒரு படி மேலே ஏறி, அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்களுடன் ஒரு நாளாவது தங்க வேண்டும். அவர்களோடு சேர்ந்து ஒரு வேளை உணவாவது அருந்த வேண்டும் என்று திமுகவுக்கு தடாலடி செக் வைத்து இருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கருத்துகள் இல்லை: