செவ்வாய், 9 மார்ச், 2021

தமிழகத்தில் 1322 நிறுவனங்கள் மூடல்!

தமிழகத்தில் 1322 நிறுவனங்கள் மூடல்!

மின்னம்பலம் : தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட 1322 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.   
கடந்தாண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரங்கடால், சிறு , குறு தொழில் முதல் பெரிய கார்ப்பரேட் நிறுவனம் வரை பாதிக்கப்பட்டன. அனைத்து தொழில்களும் முடங்கின.
இதனால், இந்தியா உள்பட பல நாடுகளில் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டது.     
இதுகுறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் பதிலளித்துள்ளார்.
அதில், கடந்த 2020 ஏப்ரல் முதல் 2021 பிப்ரவரி வரையிலான காலத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பதிவு செய்யப்பட்ட பல நிறுவனங்கள் வர்த்தக பாதிப்பால் மூடப்பட்டு, வணிகத்திலிருந்து வெளியேறியன. 10,113 நிறுவனங்கள் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளன.
அதிகபட்சமாக டெல்லியில் 2,394 நிறுவனங்களும், உத்தரபிரதேசத்தில் 1,936 நிறுவனங்களும், தமிழகத்தில் 1,322 நிறுவனங்களும், மகாராஷ்டிராவில் 1279 நிறுவனங்கள் மூடப்பட்டு, வணிகத்திலிருந்து வெளியேறிவிட்டன.
மேலும், கர்நாடகாவில்( 836) சண்டிகரில்(501), ராஜஸ்தானில் (479), தெலங்கானாவில் (404),கேரளாவில் (307), ஜார்கண்டில் (137),மத்திய பிரதேசத்தில்(111) மற்றும் பீகாரில் (104) நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.

இந்த மாநிலங்களில் அதிகமாக உற்பத்தி பணிதான் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அந்தமான், நிகோபார் தீவுகள் மற்றும் மேற்குவங்கத்தில் இரண்டு முதல் நான்கு நிறுவனங்கள் மட்டுமே வணிகத்திலிருந்து வெளியேறியுள்ளன என தெரிவித்துள்ளார்.

2020 ஜனவரி 31 ஆம் தேதி வரை இந்தியாவில் 19,79,469 பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: