வியாழன், 11 மார்ச், 2021

மம்தா பானர்ஜி : சக்கர நாற்காலியில் வந்தாவது பிரசாரம் செய்வேன்

சக்கர நாற்காலியில் வந்தாவது பிரசாரம் செய்வேன்- மம்தா பானர்ஜி

malaimalar :நந்திகிராமில் மம்தா மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி, திரிணாமுல் காங்கிரசார் போராட்டம் நடத்திவருகின்றனர்.
மம்தா பானர்ஜி
கொல்கத்தா:மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று நந்திகிராமில் பிரசாரம் செய்தபோது, அவரது கார் அருகே ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது சிலர் மம்தா பானர்ஜியை தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதில் காலில் காயமடைந்த மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். திட்டமிட்டு தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார். மம்தா மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி, திரிணாமுல் காங்கிரசார் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்த விவகாரம் மேற்கு வங்க அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.இந்நிலையில் மருத்துவமனையில் இருந்தபடி வீடியோ வெளியிட்டுள்ள மம்தா பானர்ஜி, இன்னும் இரண்டு மூன்று தினங்களில் இயல்பு நிலைக்கு திரும்பி பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக கூறி உள்ளார். காலில் பலத்த அடிபட்டிருப்பதால், தேவைப்பட்டால் சக்கர நாற்காலியில் அமர்ந்துகூட பிரச்சாரத்திற்கு வருவேன் என்றும் அவர் கூறினார். 

மேலும், தொண்டர்கள் அனைவரும் அமைதி காக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள மம்தா பானர்ஜி, சாமானிய மக்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தும் எதையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என கூறி உள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை மம்தா பானர்ஜி இன்று வெளியிடுவதாக இருந்தது. ஆனால், அவர் மருத்துவமனையில் இருப்பதால் தேர்தல் அறிக்கை வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: