சனி, 25 ஏப்ரல், 2020

முருங்கை .. பிடல் காஸ்ட்ரோ கியுபாவில் அறிமுகம் செய்த அற்புத தாவரம்


பாண்டியன் சுந்தரம் : நம்ம ஊரில் ஒரு குடும்பத்திற்கு ஒரு மாடும் முருங்கை மரமும் இருந்தால் போதும், அந்தக் குடும்பம் வாழ்க்கையில் முன்னேறிவிடும் என்று சொல்வது வழக்கம். ‘‘முருங்கை இந்தியாவின் நாட்டுப் பயிர். இதன் இலைகளில் ஏராளமான சத்துக்களும், மருத்துவக் குணங்களும் உள்ளன. கியூபா மக்கள் முருங்கையைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என இதே அறிவுரையை சில ஆண்டுகளுக்கு முன்னால் கியூபா நாட்டின் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ தன் மக்களுக்கும் சொல்லியிருக்கிறார்.
உலக அளவில் இயற்கை விவசாயத்தில் கியூபாதான் முன்னிலை வகிக்கிறது. இன்று நாம் அமைக்கும் வீட்டுத்தோட்டத்திற்கும் அவர்கள்தான் முன்னோடி. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்னால் வீட்டுக்கு ஒரு முருங்கை மரத்தை வளர்க்க சொல்லி கியூபா அரசே அறிவித்தது.
முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ ஹவான்னாவில் உள்ள தன்னுடைய வீட்டுத்தோட்டத்தில் முருங்கை மரத்தை சாகுபடி செய்திருக்கிறார். தினமும் முருங்கை மரத்தை பராமரிக்கிற வேலையையும் காஸ்ட்ரோதான் செய்து வந்தார். அவர் நேசித்த முருங்கைக்கு பின்னால் முக்கியமான சம்பவம் காரணமாக இருகிறது.

கியூபாவிற்குப் பக்கத்து நாடான, ஹைட்டி தீவில் 2010-ஆம் வருடம் மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டார்கள். பக்கத்து நாட்டில் நடந்த, இந்தத் தகவலைக் கேட்டவுடன் ஃபிடல் காஸ்ட்ரோ கியூபாவில் உள்ள மருத்துவர்களையும், தன்னார்வத் தொண்டர்களையும் அனுப்பி உதவி செய்தார். உதவி செய்யச் சென்றவர்கள், உடனே ஒரு செய்தியை அனுப்பினார்கள்... "இங்கே பூகம்பம் ஏற்பட்டு அதிகமான மக்கள் இறந்துவிட்டனர். கூடவே காலரா நோய் வேகமாக பரவிக் கொண்டுள்ளது"
இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட ஃபிடல் காஸ்ட்ரோ கியூபாவில் உள்ள மருத்துவத்தலைவரையும், முக்கியமான அதிகாரிகளையும் அழைத்துப் பேசியுள்ளார். ஹைட்டி தீவு மக்கள், காலரா நோயிலிருந்து மீண்டு வர என்ன செய்யலாம். இந்த நோய்க்கு என்ன தீர்வு, என்ன மருந்து கொடுக்கலாம் என அந்தக் கூட்டத்தில் விவாதித்தார். அப்போது கூட்டத்தில் கலந்துகொண்ட பின்லே இன்ஸ்ட்டியூட் மருத்துவ ஆராய்ச்சி மைய டாக்டர் கெம்பா ஹெர்கோ ‘ஹைட்டி தீவு மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கக் கூடிய பொருள் இருக்கிறது' எனச் சொல்லியிருக்கிறார்.
"அந்த மருந்துப் பொருள் எங்கே இருக்கிறது, எப்படி வாங்கலாம் சொல்லுங்கள்" என கேட்டார் ஃபிடல். "இந்தியாவில் உள்ள முருங்கை இலைக்குத்தான், நோய் எதிர்ப்புச் சக்தியும், விரைவான ஆற்றல் கொடுக்கின்ற திறனும் இருக்கிறது" என்றார், டாக்டர் கெம்பா ஹெர்கோ.
இந்தியா என்ற பெயரைக் கேட்டவுடனே காஸ்ட்ரோவோட புருவங்கள் விரிய ஆரம்பித்தன. ஏனெனில் அவருக்கு இந்தியா மேல் எப்போதுமே தனிப் பாசம் உண்டு. டாக்டர் கெம்பா ஹெர்கோவுக்கும் கூட இந்திய முருங்கை மேல் ஆர்வம் ஏற்பட்டது. காரணம் பல வருஷமாக யோகா செய்து பலன் அடைந்திருந்தார்கள். இதனால், இந்தியா மேல், இவர்களுக்கு கூடுதல் அன்பு இருந்தது. ஆனால், அந்தக் காலகட்டத்தில் ஃபிடல் காஸ்ட்ரோ கியூபாவோட அதிபர் கிடையாது. அதிகாரம் இல்லாமல் இருந்தால் என்ன? உதவி செய்ய மனசு போதுமே. உடனே, டாக்டர் கெம்பா ஹெர்கோவை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார் காஸ்ட்ரோ.
இந்த டாக்டர் முதலில் வந்தது தமிழ்நாட்டிற்குத்தான். முருங்கை சாகுபடி, மருத்துவப் பயன்பாடு என அதிகமான தகவல்களை சேகரித்தார். அதற்கடுத்து ஆந்திரா, கேரளாவிற்கும் சுற்றுப்பயணம் செய்து முருங்கை பற்றிய தகவல்களைத் திரட்டினார். கியூபாவிற்குப் போகும்போது இந்திய முருங்கைச் செடிகளையும் மறக்காமல் எடுத்துக்கொண்டு சென்றார். ஹைட்டி தீவு மக்களுக்கு, நோய் தாக்கிய மக்களுக்கு முருங்கைக் கீரைகளை இறக்குமதி செய்தும் கொடுத்திருக்கிறார். காலரா நோயும் கட்டுக்குள் வந்தது. இந்தத் தீவு மக்களுக்கும் இந்திய முருங்கை மரங்களை வளர்த்து, கீரை சாப்பிடச் சொல்லியிருக்கிறார்.
அந்த டாக்டர் எடுத்துக்கொண்டு சென்ற முருங்கைச் செடிகள்தான், காஸ்ட்ரோ வீட்டுத்தோட்டம் தொடங்கி, கியூபா முழுக்க வளர்ந்து நிற்கிறது. ‘‘என்னுடைய ஆரோக்கியத்திற்கும், சுறுசுறுப்புக்கும் இந்திய முருங்கைக் கீரைதான் காரணம்’’என வாய் நிறையப் புகழ்ந்து சொல்லிக் கொண்டிருந்தவர், 90 வயது இளைஞர் ஃபிடல் காஸ்ட்ரோ.
முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் ஏன் அதன் பிசின் கூட எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவையே!
'முருங்கைக் காயை' யாரும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது, குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள். காரணம், பாக்யராஜ் ஏற்படுத்தி வைத்துள்ள இமேஜ் அப்படி. ஆனால் அதிலும் ஓரளவு உண்மை இருக்கத்தான் செய்கிறது. முருங்கைக் காயில் 'பவர்' இருக்கிறதாம். 'அது' மட்டுமல்ல, வேறு சில சக்திகளும் கூடவே உள்ளன.
வீட்டிற்கு ஒரு முருங்கை வளர்த்து வந்தால் குடும்பத்தில் ஆரோக்கியத்திற்கு குறைவு இருக்காது. இதனால் முருங்கையை கற்பகத் தரு என்றே சித்தர்கள் அழைத்தனர்.
முருங்கையில் வைட்டமின்கள், அமினோ அமிலங்கள் மற்றும் தாது உப்புக்கள் உள்ளன. காய் மற்றும் இலைகள் வைட்டமின் சி மிகுதியாகக் கொண்டவை. மொரிங்கஜின், மொரிங்ஜின்னைன், பேரேனால், இண்டோல் அசிடிக் அமிலம், டெர்கோஸ், பெர்மைன், கரோட்டின், குர்சிடின் ஆகியவை காணப்படுகின்றன.
முருங்கை இலையில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இரத்த சோகை நீங்கும். முருங்கைக் கீரையை சமைத்து உண்டு வந்தால் உடல் வலுப்பெறும். இரத்தம் சுத்தமடையும். மெலிந்த உடல் உள்ளவர்கள் வாரம் இருமுறை முருங்கைக் கீரை உண்டு வந்தால் உடல் தேறும்.
இலையின் சாறு விக்கல் போக்கும். சமைத்த இலைகள் சத்துள்ளவை. ஃபுளு காய்ச்சல் மற்றும் சளி போக்கும். கண் நோய்களுக்கு சாறுடன் தேன் கலந்து இமையில் தடவப்படுகிறது. கழலை வீக்கங்களுக்கு இலைப்பசை பற்றாகக் கட்டப்படுகிறது.
பெண்களுக்கு உண்டாகும் உதிர இழப்பைப் போக்க முருங்கைக்கீரை சிறந்த நிவாரணி. தாய்ப்பாலை ஊறவைக்கும். வாரம் இரு முறையாவது பெண்கள் கண்டிப்பாக முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வயிற்றுப்புண்ணை ஆற்றும். அஜீரணக் கோளாறுகளை நீக்கி மலச்சிக்கலைப் போக்கும். இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களைப் பிரித்து வெளியேற்றும். நீர்ச்சுருக்கு, நீர்க்கடுப்பு போன்றவற்றைப் போக்கும்.
உடல்சூட்டைத் தணிக்கும் இதனால் கண்சூடு குறைந்து, பார்வை நரம்புகள் வலுப்பெறும். பித்தத்தைக் குறைக்கும். இளநரையைப் போக்கும். சருமத்தைப் பளபளக்கச் செய்யும்.
நாவின் சுவையின்மையை மாற்றும் தன்மை கொண்டது. முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து அந்தப் பாலை வடிகட்டி அருந்தி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும். பித்த நீர் குறையும். வாத, பித்த, கபத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.
முருங்கைப் பூவை நிழலில் உலர்த்திப் பொடி செய்து காலையில் மூலிகைத் தேனீர் செய்து அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் வலுவடைவதுடன், நரம்புகள் புத்துணர்வு பெறும்.
முருங்கைப் பூவை அரைத்துப் பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும். முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும். முருங்கைப் பூவை அரைத்துப் பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும். இதை இயற்கையின் வயகரா எனக்கூறலாம். அதுபோல் முருங்கைப் பூவின் பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும்.
பெண்களுக்கு வெள்ளைப் படுதல் குணமாகி கர்ப்பப் பை வலுப்பெறும். மலர்கள் சிறுநீர்ப் போக்கினைத் தூண்டுபவை. பித்தநீர் சுரப்பினை அதிகரிக்கும்.
முருங்கைப் பிஞ்சை எடுத்து சிறிதாக நறுக்கி நெய்யில் வதக்கி அதனை உண்டு வந்தால் இரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும். இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதில் அதிக கால்சியம் சத்து இருப்பதால் எலும்புகளுக்கு ஊட்டம் கிடைக்கும். எலும்பு மஜ்ஜைகளை பலப் படுத்தி இரத்தத்தை அதிகம் உற்பத்தி செய்யும். ஆண்மை சக்தியைத் தூண்டும்.
அனைவரும் விரும்பிச் சாப்பிடும் முருங்கைக்காய் அதிக சத்துக்களைத் தன்னகத்தே கொண்டது. உணவில் சுவையை அதிகரிக்கக் கூடியது. மலச்சிக்கலைப் போக்கும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். மூல நோய்க்கு சிறந்த மருந்தாகும். சளியைப் போக்கும். காய்கள் காய்ச்சலுக்கும் வயிற்றுப் புழுக்களுக்கும் எதிராக வேலை செய்யும்.
முருங்கை ஆஸ்துமா, கல்லீரல் மற்றும் கணையங்களின் வீக்கம் ஆகியவற்றைப் போக்க வல்லது. வேரின் கசாயம் தொண்டைக் கரகரப்பு மற்றும் தொண்டைப் புண் ஆற்றுகிறது.
முருங்கை விதை எண்ணெயுடன் சமஅளவில் வேர்க்கடலை எண்ணெய் சேர்த்தால் மூட்டு வலிக்கு மருந்தாகிறது. நல்ல எண்ணெயுடன், சேர்த்து காதுவலிக்குத் தரப்படுகிறது.
முற்றிய முருங்கை விதைகளை எடுத்து காய வைத்து லேசாக நெய்யில் வதக்கி பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், ஆண்மை பெருகும். விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நரம்புகள் பலப்படும், உடல் வலுப்பெறும். உடல் சூடு தணியும்.
சிலர் முருங்கைக்கீரை சமைக்கும் போது அதன் காம்புகளை குப்பையில் போட்டு விடுவார்கள். ஆனால் இந்தக் காம்பிலும் அதிக மருத்துவக் குணம் உள்ளது. முருங்கை இலைக்காம்புகளை சிறிதாக நறுக்கி அவற்றுடன் கறிவேப்பிலை, சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு, சோம்பு, மிளகு இவற்றைச் சேர்த்து சூப் செய்து அருந்தினால், நரம்புகள் வலுப் பெறும். தலையில் கோர்த்துள்ள நீர்கள் வெளியேறும். வறட்டு இருமல் நீங்கும். இரு பாலாருக்கும் நல்ல உடல் வலிமையைத் தரக்கூடியது.
முருங்கைப் பட்டையைச் சிதைத்து சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது வைத்துக் கட்டினால் வீக்கம் குறையும். பட்டையின் சாறுடன் வெல்லப்பாகு கலந்து தலைவலிக்கு மருந்தாக உட்கொள்ளப்படுகிறது.
வேரின் சாற்றுடன் பால் சேர்த்து கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் விக்கல், இரைப்பு, முதுகுவலி நீங்கும். முருங்கைப் பிசின் விந்துவைப் பெருக்கும். சிறுநீரைத் தெளிய வைக்கும்.
ஆரஞ்சைப் போல் 7 மடங்கு வைட்டமின் சி அடங்கியது.பாலில் இருப்பதைப் போல் 4 மடங்கு சுண்ணாம்புச் சத்து அடங்கியது. கேரட்டில் இருப்பதைப் போல் 4 மடங்கு வைட்டமின் ஏ அடங்கியது. வாழைப் பழத்தைப் போல் 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது. தயிரில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் அடங்கியது. இரும்புச் சத்து அபரிமிதமாக உள்ளது. எந்தக் கீரையையும் விட 75 மடங்கு இரும்புச் சத்து அதிகம்.
முருங்கைக்கீரையை வாரத்தில் இரண்டு நாட்கள் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் வாழ்க்கை முழுக்க மருத்துவமனைக்குப் போக வேண்டிய அவசியமே வராது.
கொரானா காலமான இப்போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த வாரத்தில் இரண்டு நாட்களாவது முருங்கையை சேர்த்துக்கொள்ளலாம்!
மிகக் குறைந்த செலவில் நிறைந்த பயன் தரக்கூடியது நம்ம முருங்கை!
சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் மட்டும் மருத்துவர்களின் அறிவுரை இல்லாமல் இக்கீரையை எடுத்துக்கொள்ளக்கூடாது!

1 கருத்து:

Unknown சொன்னது…

உண்மையான கருத்துக்கள் சார். இதனால் பலன் கோடி என்பது நம் முன்ணோர்கள் அறிந்த உண்மை. நான் தினமும் முறுங்கைஇலை சாற்றில் ஒரு ஸ்பூன் எலுமிச்சம் பழசாறு கலந்து அருந்தி வருகிறேன். அதனால் நிறைய பலனை கண்ணால் காண்கிறேன்.
தங்களின் தன்னலமற்ற இந்த பதிவிற்க்கு நன்றி ஐயா.