ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

சாலை ஓரத்தில் பசியும் பட்டினியுமாக குடுகுடுப்பை குடும்பங்கள்!

 corona virus - lockdown - Cuddaloreநக்கீரன் : கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பிச்சாவரம் செல்லும் சாலையில் உள்ள கீழ்அனுவம் பட்டு கிராமத்தின் சாலையோரமாக 13 குடுகுடுப்பையை ஆட்டி ஜோதிடம் சொல்லும் குடும்பங்கள் ஊரடங்கு உத்தரவையொட்டி சாப்பாட்டுக்கு எந்த வழியும் இன்றி குழந்தை குட்டிகளுடன் தவித்து வருகிறார்கள். சாலையில் செல்பவர்கள் இவர்களது நிலைமையைப் பார்த்து ஏதாவது ஒரு உதவி செய்வதால் ஒரு வேளை அல்லது இரு வேளை சாப்பிடுகிறார்கள். அதனைத்தொடர்ந்து நாளை யார் கொடுப்பார் என அந்த மக்கள் ஏங்கி வருகிறார்கள்.

இதுகுறித்து அவர்களுடன் உள்ள முருகன் என்பவர் கூறுகையில், "நாங்கள் பண்ருட்டி அருகே உள்ள புதுப்பேட்டையை சேர்ந்தவர்கள். கடந்த மாதம் இந்த பகுதியில் ஜோதிடம் சொல்லி சம்பாதிப்பதற்காக வந்தோம். அதேபோல் மன்னார்குடி பகுதியில் இருந்து மூன்று குடும்பமும், திருச்சி அருகே மணப்பாறையில் இருந்து ஒரு குடும்பமும் மொத்தம் 13 குடும்பம் இங்கு உள்ளது. பஸ் போக்குவரத்து இல்லாததால் இங்கேயே இருக்கிறோம். எங்களுக்கு மக்களிடம் சென்று குடுகுடுப்பை அடித்து ஜோதிடம் சொன்னா ஒரு நாளைக்கு 200 அல்லது 300 கிடைக்கும். தற்போது ஊரடங்கு உத்தரவால் எங்கேயும் செல்ல முடியவில்லை. அதனால் குழந்தைகள் பெண்கள் என அனைவரும் யாராவது உணவு கொடுத்தால் வாங்கி சாப்பிட்டுக்கொண்டு இருந்து வருகிறோம். எங்களுக்கு சாப்பாட்டுக்கு நாளைக்கு யார் கொடுப்பார்கள் என்று தினம் தினம் கவலையாக உள்ளது" என்கிறார்

கருத்துகள் இல்லை: