புதன், 22 ஏப்ரல், 2020

அம்மா உணவகங்களில் அனைவருக்கும் இலவச உணவு வழங்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ... வீடியோ


தினத்தந்தி : அம்மா உணவகங்கள் வரும் அனைவருக்கும் இலவச உணவு வழங்க வேண்டும்” என்று தமிழக அரசை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை, தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தொடர் ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் வாழ்வாதாரத்தையும், வாழ்க்கையையும் இழந்து நிற்கும் ஏழை-எளிய மக்களும், அமைப்புசாரா தொழிலாளர்களும் தங்களின் ஒருவேளை உணவிற்குக்கூட நாள்தோறும் போராடி, அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.
தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிவாரண உதவிகளை ஆங்காங்கே அளித்து வந்தாலும், வறுமையின் கோரப்பிடியில் சிக்கியுள்ள மக்களுக்கு மேலும் தேவையான நிவாரணத்தை வழங்கிட வேண்டிய மிக முக்கியமான கடமையும், பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது.
இந்த சூழ்நிலையில், மலிவு விலையில் உணவு வழங்கும் அம்மா உணவகங்களை ஆளுங்கட்சியினருக்கு மட்டும் குத்தகைக்கு விட்டதை போல் தாரைவார்ப்பது நிச்சயமாக ஏற்புடையதல்ல.
அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்யாமல், தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களுக்கு வருவோர் அனைவருக்கும் அரசே இலவச உணவு வழங்கிடுவதே இந்த நேரத்தில் இன்னலுக்கு உள்ளாகியிருப்போருக்கு இதயபூர்வமாக ஆற்றும் பணியாகும்.

கொரோனா நோய் தொற்றை தடுப்பதிலும் சுகாதாரப் பணிகளிலும் சுற்றுப்புறச்சூழலை நோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து தூய்மையாக வைத்திருப்பதிலும் முக்கியப் பங்காற்றுபவர்கள் தூய்மைப் பணியாளர்கள். “ஒருமாத சம்பளம் கொடுக்கவில்லை” என்று கரூர் அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது பரிதாபத்திற்குரியது.

ஊதியம் கொடுப்பதைத் தாமதம் செய்வது, உயிரை பணயம் வைத்து பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களின் உழைப்பை மதித்து போற்றுவதாகாது. கரூரில் மட்டும் இந்த நிலைமையா? அல்லது மாநிலம் முழுவதுமே இந்த அவல நிலைமையா? என்பதை அரசு உடனடியாக கவனித்து, கொரோனா தடுப்பு பணி உள்ளிட்ட அனைத்து பணியிலும் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்குவது, அவர்கள் ஆற்றிவரும் மகத்தான பணிக்கு நன்றி கடன் செலுத்துவதாக அமையும்.

மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் பத்திரிகையாளர்கள் பலருக்கும் கொரோனா நோய் வந்திருக்கிறது என்று வெளிவந்துள்ள தகவல் வேதனையை தருகிறது.

அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் கொரோனா தொற்று நோய் பரிசோதனைகளை செய்வதும், அனைவருமே செய்திகளை மின்னஞ்சல் மூலம் பத்திரிகைகளுக்கு அனுப்புவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளாகும்.

ஊரடங்கில் சிக்கி, குறைந்தபட்ச வருமானமே இல்லாமல் வீட்டிற்குள் முடங்கி கிடப்பவர்கள் மின்சார கட்டணத்தை செலுத்த இயலாது. ஆகவே அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் மின்சார கட்டணத்தை தள்ளுபடி செய்வதே அவர்களுக்கு அரசு நீட்டும் நேசக்கரமாக இருக்கும். ஆகவே, அம்மா உணவகங்களில் இலவச உணவு, தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம், பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை, மின்சார கட்டணம் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வரவும், அவசரகால தேவைகளுக்காகவும் மட்டுமே போக்குவரத்து அனுமதிக்கப்படுகின்ற இந்த நெருக்கடியில், சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணத்தை உயர்த்தி வசூல் செய்வது மனித நேயமற்ற, இதயத்தில் ஈரமில்லாத செயலாகும்.

இந்த கெடுபிடிகள், மளிகை சாமான்கள் மற்றும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு வித்திடும். ஆகவே சுங்க கட்டண வசூலை உடனடியாக மத்திய அரசு நிறுத்திவைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை: