திங்கள், 20 ஏப்ரல், 2020

சோவின் குடும்பம் .. சத்தம் போடாமல் சாராய தொழில் பாரம்பரியம்

சோவுக்கும் தமிழக மது வணிகத்துக்கும் உள்ள தொடர்பு. சோவின் தந்தையும் காங்கிரஸ்காரருமான ஆத்தூர் சீனிவாச அய்யர், செங்கற்பட்டு பாலாற்றங்கரையில் இருக்கும் ராமசாமி உடையாரின் ஓரியன் கெமிகல்ஸ் டிஸ்ட்டிலரீஸ் நிறுவனத்தின் தலைவராகத் தான் இறக்கும்வரை இருந்தவர். அவர் மரணத்துக்கு உடையார் மிகப் பெரிய இரங்கல் விளம்பரம் வெளியிட்டார். பின்னர் உடையார் கோல்டன் ஈகிள்ஸ் சேனல் எனப்படும் டிவி நிறுவனத்தைத் தொடங்கியபோது அதன் நிர்வாகியாக நியமிக்கப்பட்டவர் சோ.
Rebel Ravi : சோ எனும் பொய்யர்; நாணயமற்ற நபர்; சாராய ஆலை புரோக்கர்: மறைந்த எழுத்தாளர் ஞாநி தினமலரில் எழுதிய கட்டுரை.
மறைந்த 'சோ' ராமசாமி சில வட்டங்களில் பத்திரிகையாளராகவும் அரசியல் விமர்சக ராகவும் அறியப்பட்டிருந்தபோதும் அவரைப் பற்றிச் செய்திகள் வெளியிட்டபோதெல்லாம் வெகுஜன தினசரியான 'தினத்தந்தி' சிரிப்பு நடிகர் சோ என்றே குறிப்பிட்டு வந்திருக்கிறது.
வெகுஜன ஊடகமான சினிமாவில் அவர் அப்படித் தான் மக்களிடம் அறிமுகமானார். 1962ல் 'பார் மகளே பார்' படத்தின் மூலம் தன் 28வது வயதில் அவர் சினிமாவுக்குள் நுழைவதற்கு முன்னர் சட்டம் படித்துவிட்டுச் சில தனியார் நிறுவனங்களுக்குச் சட்ட ஆலோசகராக இருந்தார். தான் படித்த விவேகானந்தா கல்லூரியின் சக தோழர்களுடன் உருவாக்கிய விவேகா ஃபைன் ஆர்ட்சின் சார்பில் சென்னையில் நகைச்சுவை நாடகங்களை நடத்தி வந்தார். சமூகத்தைக் கிண்டல் செய்யும் கதைகளிலிருந்து மெல்ல மெல்ல அன்றைய நடப்பு அரசியலை, அரசியல்வாதிகளைக் கிண்டல் செய்யும் நாடகங்களை உருவாக்கத் தொடங்கினார்.

அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் யதேச்சாதிகார அரசியலை நையாண்டி செய்யும் 'முகமது பின் துக்ளக்' நாடகம்தான் அவரது அரசியல் கிண்டல் படைப்புகளில் உச்சமானது. அதே பெயரில் அவர் 1970ல் தொடங்கிய பத்திரிகைதான் இன்றும் அவருடைய அரசியல் சமூக விமர்சனங்களின் முக்கிய அடையாளமாகத் திகழ்கிறது. 'சோ' ஊழல் அரசியல்வாதிகளால் நசுக்கப்பட்ட சாதாரண மக்களின் நையாண்டிக் குரலாக ஒலித்தார் என்று இப்போது அவருக்குப் பலரும் அஞ்சலி செலுத்துகிறார்கள். பொது வாழ்வில் நேர்மையும் கருத்து வெளிப்பாட்டில் துணிச்சலும் அவருடைய சிறப்புகளாகச் சொல்லப்படுகின்றன.
உண்மையில் 'சோ' யாருடைய குரல் என்பதைப் புரிந்துகொள்ள, அவர் தீவிரமாக நாடகத்திலும் இதழியலிலும் இயங்கத் தொடங்கிய காலத்தின் அரசியலைப் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழகத்தில் இருபதாண்டுக் காலம் நடந்த காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்திவிட்டு அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடித்த ஆண்டு 1967. அப்போது சோவுக்கு வயது 33. அதுவரை சோவின் நாடகங்களில் பொதுவான கிண்டலும் நையாண்டியும் நகைச்சுவையுமே இருந்தன. அடுத்த இரண்டாண்டுகளில் அண்ணா மறைந்து கலைஞர் கருணாநிதி முதலமைச்சரானார். மத்தியில் இருந்த இந்திரா காந்தியின் ஆட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டார்.
மத்தியிலும் மாநிலத்திலும் சோ ஏற்க விரும்பாத அரசியலின் பிரதிநிதிகளாக அவர்கள் இருந்தார்கள். அந்தச் சூழலில்தான் 'துக்ளக்' நாடகம் உருவாக்கப்பட்டது. தோளில் நீளமான துண்டும் கரை வேட்டியும் அணியும் திராவிட இயக்கப் பிரமுகர்களின் தோற்றமே சோவின் நாடகங்களில் ஊழல் அரசியல்வாதியின் பிம்பமாகச் சித்திரிக்கப்பட்டது. கலைஞர் கருணாநிதி ஆட்சிக்கு வந்த ஒரே வருடத்தில் துக்ளக் பத்திரிகை தொடங்கப்பட்டது. திராவிட இயக்கம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதை விரும்பாத சனாதன சக்திகளின் பிரதிநிதியாக சோ விளங்கினார். 1967இல் தான் தி.மு.கவை ஆதரித்து தவறு செய்துவிட்டதாக, தானே 1971இல் ஒப்புக்கொண்டு, அன்றைக்கு சோஷலிசக் கொள்கையை முன்னிறுத்திய திமுக - இந்திரா எதிர்ப்பில் இறங்கிய ராஜாஜியின் வலதுசாரிப் பொருளாதாரப் பார்வையின் ஆதரவாளர்களின் குரலாக சோ விளங்கினார்.
துக்ளக் பல விதங்களில் தமிழின் முன்னோடிப் பத்திரிகையாக அன்று விளங்கியது. அப்போது இருந்த வெகுஜன இதழ்களில் எல்லாம் அரசியல் என்பது தலையங்கத்திலும் கார்ட்டூனிலும் மட்டுமே இடம்பெற்றது. அரசியல் கருத்துகளோ அரசியல் பற்றிய கருத்துகளோ விரிவாக இடம்பெற்றதில்லை. சிறுகதை, தொடர்கதை, சினிமா, துணுக்குகள், மருத்துவம், ஜோசியம் முதலிய பகுதிகளே பெரிதும் இருந்தன. பாபுராவ் படேல் ஆங்கிலத்தில் நடத்திய 'மதர் இந்தியா'வைப் பின்பற்றி, நையாண்டி வடிவத்தை எடுத்துக்கொண்ட துக்ளக், முழுக்க முழுக்க அரசியல் பற்றிய பத்திரிகையாக விளங்கியது. புலனாய்வு இதழியல் எனப்படும் இன்வெஸ்ட்டிகேட்டிவ் ஜர்னலிசம், நடப்பு நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்களைத் தாண்டி ஆழமாக, விசாரித்து எழுதுதல் ஆகியவற்றை எழுபதுகளில் துக்ளக்தான் முன்னெடுத்தது. அடுத்த பத்தாண்டுகளில் ஜூனியர் விகடன், தராசு, நக்கீரன் முதலிய இதழ்கள் வரும்வரை போட்டிகள் இல்லாத சமூக விமர்சன இதழாக அது விளங்கியதால், சோவின் துணிச்சலான விமர்சகர் பிம்பம் வலுப்பட்டது.
கலைஞர் கருணாநிதியின் ஆட்சியில் நடந்த பல அராஜகங்களை அப்போது துக்ளக்தான் விரிவாக எழுதியது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கலைஞருக்கு டாக்டர் பட்டம் அளித்தபோது நடந்த போலீஸ் வன்முறை, திருச்சி கிளைவ் ஹாஸ்டலுக்குள் நுழைந்து மாணவர்களைத் தாக்கியது, சேலம் திராவிடர் கழக ஊர்வலத்தில் ராமர் படம் இழிவுபடுத்தப்பட்டது, வீராணம் குழாய் - சர்க்கரைக் கொள்முதல், பூச்சி -
மருந்து ஊழல்கள் எனப் பல விஷயங்கள் பற்றிய கட்டுரைகள் வாசகரிடம் செல்வாக்கு அதிகரிக்கச் செய்தன. பதிலுக்கு துக்ளக் அலுவலகம் தாக்கப்பட்டதும் இதழ் பறிமுதல் செய்யப்பட்டதும் 'துக்ளக்' நாடகத்துக்கு எதிர் நாடகத்தைச் சில திமுகவினர் அரங்கேற்றியதும் சோவுக்கு மேலும் செல்வாக்கைக் கூட்டின. அடுத்துவந்த நெருக்கடி நிலையின்போது சோ காட்டிய துணிச்சலும் விமர்சனமும் நடுத்தர வகுப்பு வாசகர்களிடையே பெரும் பிரமிப்பை ஏற்படுத்தின.
எண்பதுகளில் குறிப்பாக எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் துக்ளக்கை விட இதர செய்தி இதழ்களின் தாக்கமே சமூகத்தில் அதிகமாக இருந்தது. சோவின் கவனமும் சென்னையைவிட டெல்லி அரசியல் மீதே அதிகம் குவிந்தது. பாரதிய ஜனதா கட்சியின் உருவாக்கம், முன்பை விட பகிரங்கமாக சோவை அதன் ஆதரவுக் குரலாக ஒலிக்கச் செய்தது. 1999இல் அவரை மாநிலங்களவை உறுப்பினராக நியமித்தது பாரதிய ஜனதா.
எம்ஜிஆரின் மறைவையடுத்து திமுகவை பலவீனப்படுத்த சரியான தருணம் அதுதான் என்று சோ நினைத்தார். அதற்குச் சரியான நபர் ஆர்.எம். வீரப்பன்தான் என்று (தவறாகக்) கணித்தார். ஆர்.எம்.வீ. முன்னிறுத்திய ஜானகிக்கு ஆதரவு பெருகும் என்று தப்புக் கணக்கு போட்டார். ஆனால் 1991இல் அவர்கள் எல்லாம் காணாமல் போய் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், திமுகவோடு ஒப்பிடும்போது ஜெயலலிதா பரவாயில்லை என்று முதலில் கருதினார். அந்தக் கருத்தை 1996இல் மாற்றிக்கொண்டார். தானே அரசியல் தூதராக (தரகராக?) மாறி திமுக, தமிழ் மாநிலக் காங்கிரஸ் உறவை ஏற்படுத்தி அதிமுகவை வீழ்த்த உதவினார். டெல்லியிலும் தமிழகத்திலும் காங்கிரஸ் பலவீனமடைந்தபோது, ரஜினிகாந்த்தை அரசியலுக்குக் கொண்டு வந்து அடுத்த கட்டமாக பாரதிய ஜனதாவை ஆதரிக்கச் செய்யலாம் என்று கணக்கு போட்டார். ரஜினியைத் தங்கள் பக்கம் இழுக்க காங்கிரசும் முயற்சி செய்தது. ரஜினி கழுவிய மீனில் நழுவிய மீனானார்.
சோவின் பொதுப் பிம்பமும் துக்ளக் இதழின் செல்வாக்கும் தொண்ணூறுகளுக்குப் பின் மங்கத் தொடங்கிவிட்ட காலத்தில் அவர் பகிரங்கமாகவே நரேந்திர மோடி, பாரதிய ஜனதா சக்திகளின் ஆதரவுக் குரலாக ஒலிக்கத் தொடங்கினார். முதலில், திமுகவைப் பலவீனப்படுத்தினால் போதும் அடுத்து அதிமுகவைச் சமாளிக்கலாம் என்ற உத்தியை அவர் ஆதரித்தார். கடைசிவரை அதுவே அவர் கருத்தாக இருந்தது.
நெருக்கடி நிலை எதிர்ப்பில் தொடங்கி, யாரைப் பற்றியும் எதற்கும் அஞ்சாமல் கருத்து சொல்லும் துணிச்சல்காரரான சோவை நேர்மையானவர் என்று பலரும் கருதுகிறார்கள். மூன்று விஷயங்கள் என்னை அவ்வாறு கருதவிடவில்லை.
1983 இல் நானும் மறைந்த சின்னக் குத்தூசியும் திமுக பிரமுகர் ஆற்காடு வீராசாமி நடத்திவந்த எதிரொலி மாலைத் தினசரியில் பணியாற்றி வந்தோம். காஞ்சி சங்கராச்சாரி ஜயேந்திர சரஸ்வதியைச் சின்னக் குத்தூசி கடுமையாக விமர்சித்து எழுதி வந்தார். இதை யடுத்து ஜயேந்திரரைச் சந்திக்க வருமாறு காஞ்சி மடத் தின் பிரதிநிதிகள் பத்திரிகை நிர்வாகத்தின்மீது கடும் நிர்ப் பந்தம் கொடுத்தனர். நானும் உடன் வரவேண்டுமென்று சின்னக் குத்தூசி விரும்பினார்; சென்றோம். அந்தச் சந்திப்பில், ஜயேந்திரர் உளறிய உளறல்களையெல்லாம் நாங்கள் பின்னர் கட்டுரையாக விமர்சித்து எழுதினோம்.
அதில் ஒன்று, திராவிடர் கழகச் செயலாளர் வீரமணியிடம் சோ துக்ளக் இதழுக்காக எடுத்த பேட்டி பற்றியது. வீரமணியிடம் என்ன கேள்விகள் கேட்கவேண்டுமென்று சோவைத் தான்தான் தயார்ப்படுத்தி அனுப்பியதாக ஜயேந்திரர் சொன்னார். இதை எங்களால் நம்பமுடிய வில்லை என்று அவரிடமே சொன்னோம். அவரோ திரும்பவும் வலியுறுத்திச் சொன்னார். இதுவும் எங்கள் கட்டுரையில் இடம்பெற்றது.
கட்டுரை வெளிவந்த உடனே சோ தொலைபேசியில் என்னுடனும் சின்னக் குத்தூசியுடனும் பேசினார். “வேறு யாராவது எழுதியிருந்தால் பொருட்படுத்தியிருக்க மாட்டேன். நீங்கள் பொய்யாக எழுதமாட்டீர்கள் என்பது தெரியும்” என்றார். தான் ஜயேந்திரரிடம் எந்த ஆலோசனையும் பெறவில்லை என்றார். நாங்களும் ஜயேந்திரர் சொன்னதை நம்பவில்லை என்றும் இப்போது சோ அதை மறுக்க வேண்டுமென்றும் சொன்னோம். என்ன செய்வது என்று தெரியவில்லை என்றார் சோ. “ மி லீணீஸ்மீ க்ஷீமீsஜீமீநீt யீஷீக்ஷீ tலீமீ னீutt” என்றார். “ஹ்ஷீuக்ஷீ க்ஷீமீsஜீமீநீt யீஷீக்ஷீ tக்ஷீutலீ sலீஷீuறீபீ ஜீக்ஷீமீஸ்ணீவீறீ ஷீஸ்மீக்ஷீ tலீணீt யீஷீக்ஷீ tலீமீ னீutt” என்றேன். ஆனால் அடுத்த துக்ளக் இதழில், ஜயேந்திரரிடம் தான் விசாரித்ததாகவும் தான் அப்படிப் பேசவில்லை என்று அவர் சொல்லிவிட்டதாகவும் நானும் சின்னக் குத்தூசியும் தான் பொய் எழுதியிருக்கிறோம் என்றும் கூறியிருந்தார். இதையடுத்து சோ எங்களுடன் நடத்திய தொலைபேசி உரையாடலை நினைவுபடுத்தி துக்ளக் இதழுக்கு நான் விரிவாக எழுதினேன். அவர் என் கடிதத்தை வெளியிடவே இல்லை. நாங்கள் வெளியிட்டோம்.
இரண்டாவது நிகழ்ச்சி, தொண்ணூறுகளில் நடந்தது. அப்போது நான் ஜூனியர் விகடனில் உதவி ஆசிரியராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். 98 மகளிர் அமைப்புகள் சேர்ந்து ஒரு மாநாட்டைச் சென்னையில் நடத்தின. அதன் அமர்வுகள் ஒன்றில் சோ பேசினார். அவர் கருத்துகளை மறுத்துப் பல பெண்கள் உடனே கேள்வி கேட்டார்கள். அவர் ஓரிரு பதில்களுடன் வெளியேறிவிட்டார். இதுபற்றி அந்த நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த ஜூ.வி.நிருபர் ஒரு கட்டுரை எழுதினார். அடுத்த துக்ளக் இதழில் ஜூ.வி கட்டுரை பொய் என்பது போன்ற விளக்கத்தை சோ எழுதியிருந்தார்.
அப்போது ஜூ.வியும் துக்ளக்கும் ஒரே முதலாளியுடையவை. தன் இதழைப் பற்றித் தன்னிடம் முன்கூட்டிச் சொல்லாமல் சோ கடுமையாக எழுதியது ஆசிரியரும் உரிமையாளருமான எஸ். பாலசுப்பிரமணியனுக்கு வருத்தமாக இருந்தது. அந்த மாநாட்டுக்கு நானும் சென்றது அவருக்குத் தெரியும். என்ன நடந்தது என்று என்னை ஒரு கட்டுரை எழுதச் சொன்னார். நான் சோ நடந்துகொண்ட முறைபற்றி ஜூ.வி.நிருபர் எழுதியதை உறுதி செய்தேன். தவிர சோ வெளியேறும்போது ஒரு பெண் கவிஞர் அவரை மறித்து, “நீங்கள் நெருக்கடி நிலையை எதிர்த்ததால் எனக்கு உங்கள்மீது மதிப்பு உண்டு. ஆனால் இன்று பெண்களைப் பற்றிப் பேசியதெல்லாம் தவறான கருத்து,” என்று சொன்னார். அதை சோ தன் இதழில் எழுதும்போது சாமர்த்தியமாக முதல் வாக்கியத்தை இரண்டாவதாக்கிவிட்டார். இதையும் எழுதினேன். என் கட்டுரையைப் படித்துவிட்டு பாலசுப்பிரமணியன், “அவன்(ர்) செய்யத் தவறியதை நான் செய்ய விரும்புகிறேன். அச்சிடுவதற்கு முன்னால் ஒரு பிரதி அனுப்பப் போகிறேன்,” என்றார். “அப்படியானால் இது நிச்சயம் வெளியாகாது. அவர் தடுத்துவிடுவார்,” என்றேன்.
பிரதி கிடைத்த மறுநிமிடம் சோ வந்து பாலசுப்பிரமணியனைச் சந்தித்தார். “எனக்கும் என் பத்திரிகைக்கும் இருக்கும் மிகப் பெரிய வலிமையே எங்கள்மீது இருக்கும் நம்பிக்கைதான். ஞாநியின் கட்டுரையை நீங்கள் வெளியிட்டால் அந்த க்ரெடிபிலிட்டியே தகர்ந்துவிடும். தயவுசெய்து போட வேண்டாம்” என்று மன்றாடினார். கட்டுரை வெளியிடப்படவில்லை.

மூன்றாவது விஷயம் சோவுக்கும் தமிழக மது வணிகத்துக்கும் உள்ள தொடர்பு. சோவின் தந்தையும் காங்கிரஸ்காரருமான ஆத்தூர் சீனிவாச அய்யர், செங்கற்பட்டு பாலாற்றங்கரையில் இருக்கும் ராமசாமி உடையாரின் ஓரியன் கெமிகல்ஸ் டிஸ்ட்டிலரீஸ் நிறுவனத்தின் தலைவராகத் தான் இறக்கும்வரை இருந்தவர். அவர் மரணத்துக்கு உடையார் மிகப் பெரிய இரங்கல் விளம்பரம் வெளியிட்டார். பின்னர் உடையார் கோல்டன் ஈகிள்ஸ் சேனல் எனப்படும் டிவி நிறுவனத்தைத் தொடங்கியபோது அதன் நிர்வாகியாக நியமிக்கப்பட்டவர் சோ.
ஒரு காலத்தில் சோவின் நண்பராக இருந்த பிரபல வழக்கறிஞர் பிரஷாந்த்பூஷன் 2014 தேர்தல் சமயத்தில் 'ஆம் ஆத்மி கட்சி' சார்பில் சென்னையில் சில ஆவணங்களை வெளியிட்டார். அவற்றின்படி சொத்துக் குவிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட சில நிறுவனங்கள் உட்பட, ஜெயலலிதா நடத்திய பல நிறுவனங்களிலும் இயக்குநராக இருந்தவர் சோ. 2011இல் சசிகலாவை வீட்டைவிட்டு வெளியேற்றியபோது அந்த நிறுவனங்களின் இயக்குநர் பதவியிலிருந்தும் அவரை நீக்கிவிட்டு சோ நியமிக்கப்பட்டிருக்கிறார். மறுபடியும் சில மாதங்கள் கழித்து சசிகலா திரும்ப ஏற்கப்பட்டதும் சோவுக்குப் பதிலாக அவர் இயக்குநராகியிருக்கிறார். இந்த நிறுவனங்களில் மிடாஸ் டிஸ்ட்டிலரீசும் ஒன்று.
இவ்வாறு சோவின் நேர்மையைக் கேள்விக்குரியதாக்கும் சில விஷயங்கள் உண்டு. இவை தொடர்பாக அவருடைய பதில்கள் மிகவும் மழுப்பலானவை. சிலவற்றுக்கு நோ கமெண்ட்ஸ். சிலவற்றுக்கு 'அதெல்லாம் பழைய விஷயம்.' அவர் பெரும்பாலான சமயங்களில் தன் கருத்தை மழுப்பியதுண்டே தவிர மறைத்ததில்லை. அவர் அரசு என்ற அமைப்பின் ஆதரவாளர். காவல்துறை, ராணுவம் ஆகியவற்றின் மீது மனித உரிமை மீறல் என்ற பெயரில் விமர்சனங்கள் வைப்பதை விரும்பாதவர். 'பெண்களுடைய பிரதான வேலை குடும்பத்தைப் பராமரிப்பதுதான். நர்ஸ், டீச்சர் வேலைகளுக்கு வேண்டுமானால் போகலாம். குடும்பத்தின் பொருளாதார நிலை கருதி அதுவும் அனுமதிக்கப்படலாம்' என்பார். அவருடைய இளவயது முதல் நண்பராக விளங்கிய ஜெயலலிதா, 'அவருக்குப் பெண்களைப் பிடிக்காது' என்று பலமுறை சொல்லியிருக்கிறார்.
தம் தனிப்பட்ட உறவாடலில் சோ யாரிடமும் சாதி, மத அடிப்படையில் பாரபட்சங்கள் காட்டியதில்லை. தம்முடன் வேலை செய்தவர்கள் அனைவரிடமும் மிகுந்த மனிதாபிமானத்துடனே நடந்துகொண்டிருக்கிறார். தனக்குப் பின் துக்ளக் நடந்தால், அது தன்னுடன் நீண்டகாலம் உழைத்த ஆசிரியர் குழுவின் நலனுக்காகவே நடக்க வேண்டும் என்று கருதினார். மாநிலங்களவை எம்.பியாக இருந்தபோது தொகுதி நிதியிலிருந்து உதவிகள் செய்வதிலும் அவர் சாதி, மத வட்டார பேதங்கள் பார்க்கவில்லை.
சோவிடமிருந்து நாம் கற்க ஏதும் உண்டா? நம் கருத்துகளை அதிகம் பேரிடம் கொண்டுசேர்க்க நிச்சயம் நகைச்சுவையும் நையாண்டியும் உதவும். ஒரு சீரியசான விஷயத்தை நீர்க்கச் செய்யவும் அது உதவும். மாறுபட்ட கருத்துகளைப் பகிரங்கமாக சொல்லத் தயங்கவேண்டியதில்லை. நம்முடன் கருத்து மாறுபடுபவர்களுடன் விரோதமோ குரோதமோ காட்டத் தேவையில்லை. அவர்களுடன் நட்பாக இருந்துகொண்டே முரண்படலாம். இவையெல்லாம்தான் சோவிடம் எனக்குத் தெரியும் பயனுள்ள பண்புகள்.
ஞாநி;

கருத்துகள் இல்லை: