ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

எனக்கு இதுதான் பெண்ணியம்... பாலியல் சுதந்திரம் ... ஷாலின் மரியா லாரன்ஸ்

Shalin Maria Lawrence : பாலியல் சுதந்திரம் என்று இந்த சமுதாயம் எதை
கட்டமைக்கிறது என்று தெரியவில்லை. ஒருவருக்கான பாலியல் சுதந்திரம் இன்னொருவருக்கு வேறு வகையில் வேறு மாதிரி இருக்கலாம்.
அதையெல்லாம் மீறி செக்ஸ் கிடைப்பதுதான் பாலியல் சுதந்திரம் என்றால் அப்படிப்பட்ட சுதந்திரம் பெண்களுக்கு எப்பொழுதோ வாய்த்து விட்டது. அதற்கான சமூக அங்கீகாரங்கள் வேண்டுமானால் கிடைக்காமல் இருக்கலாம் ஆனால் முடிந்தவரை பெண்கள் அவர்களுக்கான தனிப்பட்ட பாலியல் தேவைகளை சமூக சட்டங்களையும் மீறியும் இல்லை யாருக்கும் தெரியாமலும் கையகப்படுத்திக் கொண்டேதான் இருந்திருக்கிறார்கள். பெரும்பாலோனோருக்கு அது மிக எளிதான விஷயம்.
ஆனால் பாருங்கள் இந்தியாவின் பெரும்பாலான பெண்களுக்கு முக்கிய தேவையாக இருக்கும் அரசியல் சம பங்கீடு, பொருளாதார சுதந்திரம், சமூக சமத்துவம், தலைமை வாய்ப்புகள் போன்றவை மிகவும் சவாலான விஷயங்களாக இருக்கின்றனhh
ஒரு பெண்ணுக்கு பாலியல் தேவை இருக்கும் என்றால் அதற்கு துணை போகும் ஒரு ஆண் அதே பெண்ணுக்கு பொருளாதார சுதந்திரம் சமூக சமத்துவம் அரசியல் சமத்துவம் போன்றவைகளை அந்த பெண் கேட்கும் பொழுது அவளுக்கு கொடுப்பதில்லை.
கட்டற்ற பாலியல் சுதந்திரம் வேண்டும் என்று பெண் கேட்டால் அதை யாருக்கும் தெரியாமல் கொடுப்பதற்கு ஆண்கள் தயாராக இருப்பார்கள் ஏனென்றால் ஆண்கள் தான் அதில் Direct beneficiary.
ஆனால் வேறு சில உரிமைகளை கேட்கும் பொழுது மறைத்தோ இல்லை வெளிப்படையாகவோ ஆண் அதை கொடுப்பதில்லை. அவர்களின் ஈகோவும் அதற்கு ஒத்துழைக்காது.

ஆகவே எது கிடைக்க கஷ்டமாக இருக்கிறதோ , எது பெண்களுக்கு எல்லா இடத்திலும் மறுக்கப்படுகிறதோ எந்த வாய்ப்புகள் திட்டவட்டமாக மறுக்கப்படுகின்றன அதை நோக்கிப் பயணிப்பது தான் முதன்மையான மற்றும் மைய குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
பாலியல் சுதந்திரம் வேண்டும் என்று யாரும் ரோட்டுக்கு சென்று போராடவில்லை ஆனால் ஓட்டுரிமை வேண்டும் என்றுதான் போராடி இருக்கிறார்கள். இதிலிருந்து பெண்களுக்கு எது முக்கியம் என்று நாம் உணர்ந்து கொள்ளலாம்.
கள்ளக்காதல் கிரிமினல் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுக்க முடிந்த இந்தியாவில்தான் இன்னும் அரசியலில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு பெண்களுக்கு கிடைக்காத நிலை உள்ளது. இதிலிருந்தே வேறுபாட்டை புரிந்து கொள்ளலாம்.
பாலியல் சுதந்திரத்தை ஒரு பெண்ணால் தன்னிச்சையாக அடைந்துவிட முடியும் ஆனால் பொருளாதார சுதந்திரமும், அரசியல் சுதந்திரமும் சமூக சமநிலையும், தலைமை ,வாய்ப்புகளையும் அடைய சமூக ஒத்துழைப்பு மிக அவசியம்.
அதற்குதான் புரட்சிகள் அதிகம் தேவைப்படுகிறது. அதற்குதான் இங்கே ரத்தம் சிந்த படுகிறது.
எனக்கு இதுதான் பெண்ணியம்.

கருத்துகள் இல்லை: