புதன், 22 ஏப்ரல், 2020

கரோனா இல்லாத ஈரோடு... வெற்றியின் விளிம்பில் சாதனை!!

Erode without corona ... Achievement on the verge of successErode without corona ... Achievement on the verge of successஜீவாதங்கவேல் - நக்கீரன் : உலகின் கொடிய நோயான கரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பரவிய நிலையில், மார்ச் மூன்றாம் வார தொடக்கத்தில் இந்திய அரசு அறிவிப்பு ஒன்றை கொடுத்தது. அது, நாடு முழுக்க 72 மாவட்டங்கள் கரோனா வைரஸ் தொற்று வீரியமாக கால் பதித்து விட்டது என்பதுதான். இந்த 72 மாவட்டங்களும் உடனே துண்டிக்கப்பட்டு தனிமைபடுத்தப்படுவதாக அறித்தது. அந்த 72ல் தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம் அடுத்து ஈரோடு என்று கூறப்பட்டது. ஈரோட்டில் தொடர்ந்து வைரஸ் தொற்று ஏற்பட்ட நபர்கள் நாளுக்கு நாள் அதிகமாகி ஒரு கட்டத்தில் மொத்தம் 70 பேர் என்று உட்ச கணக்கில் இருந்தது. இதனால் ஈரோடு மாவட்ட மக்கள் மத்தியில் அளவுக்கு மீறிய அச்சமும் உயிர் பயமும் இந்தது. இது ஒருபுறம் இருக்க, இந்த வைரஸ் தொற்று ஈரோட்டில் ஊடுருவிய வழியை மாவட்ட நிர்வாகம், காவல்துறை, சுகாதார துறை என இந்த மூன்று துறைகளும் துல்லிய ஆய்வு நடத்தி, வைரஸ் தொற்று வந்த அந்த வழியை கண்டுபிடித்து தீவிர நடவடிக்கையில் இறங்கியது. ஈரோட்டுக்கு வைரஸ் தொற்று வந்த வழி என்பது ஏற்கனவே நமது நக்கீரன் இதழிலும், இணையத்திலும் வெளிப்படுத்திய தகவல்தான்.

டெல்லி மாநாட்டில் கலந்து கொள்ள, ஈரோட்டிலிருந்து சுமார் 40 பேர் சென்றதும் அந்த டெல்லி நிகழ்விலிருந்து தாய்லாந்து நபர்கள் 7 பேர் ஈரோடு வந்து இரு மசூதிகளில் தங்கியதும்தான். ஆக இவர்கள் மற்றும் இவர்கள் மூலமாகதான் 69 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. ஒரு நபர் வெளிநாட்டிலிருந்து வந்த திருச்சியை சேர்ந்தவர். இந்த 70 பேரில் வயதான பெருந்துறையை சேர்ந்த முதியவர் மட்டும் இறந்து விட்டார். மீதி 69 பேரில் கோவை மருத்துவர் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர், திருச்சியை சேர்ந்த ஒருவர் என ஐவர் தொடக்கத்திலேயே சிகிச்சை முடித்து அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். பிறகு 13 பேர், அடுத்து 9 பேர், தொடர்ந்து 10 பேர் என மொத்தம் 32 பேர் அவரவர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். மீதி 32 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வர, இதில் 22 ந் தேதி புதன் மாலை மேலும் 28 பேர் சிகிச்சை முடித்து வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன், பொது சுகாதார துறை துணை இயக்குனர் சவுண்டம்மாள் ஆகியோர் கலந்து கொண்டு வீடு செல்வோருக்கு பூங்கொத்து, பழங்கள் கொடுத்து அனுப்பி வைத்தனர்.


அப்போது பேசிய ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன், ஈரோட்டில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சிசிச்சை பெற்றவர்களில், இப்போது மருத்துவமனையில் நான்கு பேர் மட்டுமே உள்ளார்கள். மீதி எல்லோரும் நலம் பெற்று வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். இந்த நால்வரும் நலமாக உள்ளார்கள். இவர்களும் ஓரிரு நாளில் சிகிச்சை முடிந்து வீடு செல்வார்கள். இதன் மூலம் ஈரோடு மாவட்டம் கரோனா வைரஸ் முற்றிலுமாக துடைக்கப்பட்டு, துரத்தப்பட்ட மாவட்டமாக மாற உள்ளது. இதற்கு காரணம் மாவட்டத்தில் உள்ள அலுவலர்கள், மருத்துவர்கள், மருத்துவத்துறை பணியாளர்கள், காவல்துறை அதிகாரி மற்றும் காவலர்கள், தூய்மை பணியாளர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் என எல்லோருடைய ஒத்துழைப்பும் உழைப்பும்தான் காரணம் என்றார்.

புதிதாக 210 பேருக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. இதன் ரிசல்ட்தான் வர வேண்டியுள்ளது. ஒன்றா, இரண்டா, சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேரை தனிமைபடுத்தப்பட்டு, தீவிரமாக கவனித்த எல்லோரது உழைப்பாலும் ஈரோடு கரானாவை எதிர்த்து போராடி வெற்றியின் விளிம்பில் உள்ளது

கருத்துகள் இல்லை: