புதன், 22 ஏப்ரல், 2020

மத்திய அரசின் நிதி உதவி முழு தென்னிந்தியாவை விட உத்தர பிரதேசத்துக்கு நிதி அதிகம்!

உத்தர பிரதேசம் - 8,255.19 கோடி ரூபாய். 
பீகாருக்கு 4,631.96 கோடியும்,
மத்திய பிரதேசத்துக்கு 3,630.6 கோடி ரூபாயும்
மே .மேற்கு வங்கத்திற்கு 3,461.65 கோடி ரூபாய்
தமிழகத்துக்கு வெறும்1928.56 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. .
மின்னம்பலம் :மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள நிதியில் உத்தர பிரதேசத்தை விட தென்னிந்திய மாநிலங்களுக்கான நிதி மிகவும் குறைவாக உள்ளது.
கொரோனாவால் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதனை கட்டுப்படுத்த நிதி அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு மாநில அரசுகள் கோரிக்கை விடுத்தன.
இந்த நிலையில் 15ஆவது நிதிக் குழு பரிந்துரையின் பேரில் மாநிலங்களுக்கான ஏப்ரல் மாத நிதிப் பங்கீடு 46,038.10 கோடி ரூபாயை மத்திய நிதித் துறை அமைச்சகம் விடுவித்தது. என்.கே.சிங் தலைமையிலான நிதி ஆணையம் வரி வருவாயில் 41 சதவிகிதத்தை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்துக்கும், 1 சதவிகிதத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களுக்கும் அளிக்க பரிந்துரை செய்ததன் அடிப்படையில் இந்த நிதி விடுவிக்கப்பட்டது.

அதன்படி, பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெறும் உத்தர பிரதேசத்திற்கு அதிக பட்சமாக 8,255.19 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக பீகாருக்கு 4,631.96 கோடியும், மத்திய பிரதேசத்துக்கு 3,630.6 கோடி ரூபாயும் ஒதுக்கியுள்ளது. இதுபோலவே மேற்கு வங்கத்திற்கு 3,461.65 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழகத்துக்கு 1928.56 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோலவே மற்ற தென் மாநிலங்களான ஆந்திராவுக்கு 1892.64, கர்நாடகாவுக்கு 1678.57, கேரளாவுக்கு 894.53, தெலங்கானாவுக்கு 982 கோடி ரூபாயும் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது தென்மாநிலங்களுக்கு ஒட்டுமொத்தமாக 7376.3 கோடி நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது உத்தர பிரதேசம் என்னும் ஒரு மாநிலத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகையை விட மிகவும் குறைவு.

கொரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள தமிழ்நாடு, அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள கேரளா ஆகிய மாநிலங்களுக்குத்தான் தற்போது நிதி அதிகமாகத் தேவைப்படுகிறது. இந்த நிலையில் உத்தர பிரதேசத்துக்கு அளிக்கப்பட்ட நிதியை விட தென்னிந்திய மாநிலங்களுக்கு குறைவான நிதி அளிக்கப்பட்டுள்ளது விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது.
ஏற்கனவே கொரோனா தடுப்புப் பணிகளுக்காக தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து மாநில அரசுகளுக்கு 3,000 கோடி ஒதுக்கப்பட்டது. அதில், உத்தரப்பிரதேசத்துக்கு 966 கோடி, மத்தியப் பிரதேசத்துக்கு 910 கோடி, ஒடிசாவுக்கு 802 கோடி ரூபாயும் அளிக்கப்பட்டது. தமிழகத்திற்கு 510 கோடி ரூபாய் மட்டுமே அளிக்கப்பட்டது. இதுபற்றி தனது அதிருப்தியை பதிவு செய்த முதல்வர், தமிழகத்தில் 1,000 கோடியை முதல்கட்டமாக ஒதுக்க வேண்டுமெனவும் கோரியிருந்தார்.
தற்போது கொரோனா தடுப்புப் பணிகளுக்காக 9,000 கோடியைக் கேட்ட நிலையில், வெறும் 1928.56 கோடியை மட்டுமே ஒதுக்கியுள்ளது மத்திய அரசு.
எழில்

கருத்துகள் இல்லை: