சனி, 25 ஏப்ரல், 2020

ஊரடங்கு கேலிக்கூத்து ஆனது .. அறிவற்ற அரசின் தவறான திட்டமிடல்


குழப்பும் அரசு- பொறுப்பற்ற பொதுமக்கள்-  உல்டாவான ஊரடங்கு!மின்னம்பலம் : இன்று (ஏப்ரல் 25) என்ன சித்திரைத் திருவிழாவா, தேரோட்டமா, அல்லது 144 தடை உத்தரவை மீறி ஏதேனும் முக்கிய கட்சி நடத்தும் பேரணியா.... இதெல்லாம் இல்லை அடுத்த நான்கு மூன்று நாட்களுக்கான காய்கறி, மளிகை சாமான் வாங்குவதற்காகத்தான் இத்தனை கூட்டம் சென்னை, மதுரை உள்ளிட்ட மாநகரங்களில் இன்று திரண்டது.
கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க கடந்த ஒரு மாதமாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும்போதும் மக்கள் குறிப்பாக நகரப்புறங்களில் கடைக்கு செல்வதாக கூறி கணிசமான அளவில் தெருக்களில் பயணித்த வண்ணம் இருக்கின்றனர். முதலில் பிற்பகல் 2.30 வரை இருந்த நடமாட்ட நேரம் பின் மதியம் 1 மணி வரை என குறைக்கப்பட்டது. அப்போதும் டூவிலர்களும், கார்களும் ஊர்வதை தடுக்க முடியவில்லை. ஊரடங்கின் ஆரம்ப நாட்களில் போலீஸார் லத்தியை சுழற்றத் தொடங்கியது கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில் அதன் பின் லத்தியெடுப்பதை போலீஸார் கைவிட்டுவிட்டனர். இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மீது ஊரடங்கை மீறியதாக வழக்குப் பதியப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தொற்றுப் பரவலைத் தடுக்கும் விதமாக ஊரடங்கை கடுமையாக்கத் திட்டமிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்று ஏப்ரல் 24 ஆம் தேதி புதிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, “சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சி பகுதிகளில் ஏப்ரல் 26 ஆம் தேதி காலை 6 மணி முதல் 29ஆம் தேதி இரவு 9 மணி வரை ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்படும். சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் ஊரடங்கு ஏப்ரல் 26ஆம் தேதி காலை 6 மணி முதல் ஏப்ரல் 28ஆம் தேதி இரவு 9 மணி வரை அமல்படுத்தப்படும். மேற்குறிப்பிட்ட பகுதிகளில், முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட இந்த காலகட்டத்தில், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத் துறை சார்ந்த பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் தலைமைச் செயலகம், சுகாதாரத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மின்சாரத்துறை , ஆவின், உள்ளாட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆகியவை தேவையான பணியாளர்களுடன் மட்டும் செயல்படும்.
அம்மா உணவகங்கள், மற்றும் ஏடிஎம் இயந்திரங்கள் வழக்கம்போல் செயல்படும். உணவகங்களில் தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு வழங்கப்படும் உணவுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்
முதியோர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோருக்கு உதவி புரிவோர் ஆகியோருக்கு அனுமதி வழங்கப்படும். கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டுச் செயல்படும். காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகளுக்கு அனுமதி. இதைத்தவிர மேற்கண்ட நாட்களில் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட கடைகள் எவற்றுக்கும் அனுமதி இல்லை” என்று அறிவித்த முதல்வர், “மக்கள் நடமாட்டம் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும். இந்த தடையை யாரேனும் மீறினால் அவர்கள் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன் தடையை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்தார்.
இன்னும் மூன்று நாட்களுக்கு கடை இருக்காதா என்று அறிந்த மக்கள் குறிப்பாக சென்னை, மதுரை மக்கள் நேற்று பகல் ஒரு மணியோடு கடைகள் மூடப்பட்டதால் இன்று காலை ஆறு மணியில் இருந்தே காய்கறிக் கடைகளையும், மளிகைக் கடைகளையும் நோக்கிக் குவிந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் நலச்சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டதாக ஓர் அறிவிப்பு வாட்ஸ் அப்புகளில் பரவியது. அதன்படி, ‘ஏப்ரல் 26 ஆம் தேதியில் இருந்து 29 ஆம் தேதி வரை கோயம்பேடு காய்கறிச் சந்தை திறக்கப்படாது’ என்று அறிவிக்கப்பட்டது. அதன் பிறகுதான் சென்னை தெருக்களில் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது. காய்கறிக் கடைகள், பேக்கரிகள். ஆவின் பார்லர்களில் மக்கள் கூட்டம் முண்டியடித்தது. தக்காளி ஒரு கிலோ, முட்டை கோஸ் 2 கிலோ என்பது போல சமூக இடைவெளி என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவுக்குக் கூட்டம் அதிகரித்தது.
இதைக் கண்டு அதிகாரிகள் திகைத்துப் போனார்கள். பல இடங்களில் காவல்துறையினர் கட்டுப்படுத்தியும் மக்கள் கட்டுப்படவில்லை.
கூட்டம் அதிகரிப்பதை உணர்ந்த அரசு, மாலை 3 மணி வரை கடைகள் இருக்கும் என்று ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று அறிவித்தது. ஆனால் 2 மணிக்கு முன்பாகவே பல காய்கறிக் கடைகளிலும், மளிகைக் கடைகளிலும் சரக்குகள் தீர்ந்தன. இன்று எனக்கு தக்காளி கிடைக்கவில்லை, இன்று வெங்காயம் கிடைக்கவில்லை என்று சமூக தளங்களில் பதிவிடும் அளவுக்குதான் மக்களுக்கு கொரோனா பொறுப்புணர்வு இருக்கிறது.
இந்நிலையில் இன்று மாலை சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில், ‘கோயம்பேடு காய்கறிச் சந்தை விதிகளுக்கு உட்பட்டு செயல்படும், நடமாடும் காய்கறிக் கடைகளும் செயல்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை காலையிலேயே அறிவித்திருந்தால் இன்று மக்கள் கூட்டம் மாபெரும் கூட்டமாய் திரண்டிருக்காதே என்கிறார்கள் தன்னார்வலர்கள்.
முழு ஊரடங்கு என்பதை முன்னிட்டு இன்று ஊரடங்கே இல்லை என்ற நிலையே நிலவி, உல்டா ஊரடங்காகிவிட்டது. மக்களும் மூன்று, நான்கு நாட்களுக்கு இவ்வளவு காய்கறிகளையும், மளிகைப் பொருட்களையும் வாங்கிக் குவிப்பது ஏன் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. அடுத்தடுத்த அறிவிப்புகளால் குழப்பும் அரசு ஒருபக்கம், எந்த நிலையிலும் தேவைக்கு மீறி தேக்கி வைக்க ஆசைப்படும் பொதுமக்கள் ஒருபுறம்... இது தொடர்ந்தால் கொரோனாவுக்குக் கொண்டாட்டமாகத்தான் இருக்கும்!
-ஆரா

கருத்துகள் இல்லை: