ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

கொரோனா வைரஸைக் கண்டறிந்த சீன மருத்துவர் லீ உயிரிழப்பு


`ராம் பிரசாத்  - விகடன் : லீ... நீங்கள்தான் எங்கள் ஹீரோ!’ -கொரோனா வைரஸைக் கண்டறிந்த
சீன மருத்துவருக்கு நேர்ந்த கதி
கொரோனா வைரஸ் நோய் தாக்கத்தை முதலில் கண்டறிந்த சீன மருத்துவர், நோயின் தாக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து சீன மருத்துவரான லீ வெண்லியாங் (Li Wenliang) கடந்த டிசம்பர் மாதமே எச்சரித்துள்ளார். சீனாவின் வுஹான் மாகாணத்தில் தான் லீ வெண்லியாங் பணியாற்றிவந்துள்ளார். அவரிடம் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள், தீராத காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் கடல் உணவுப் பொருள்களை விற்பனை செய்யும் சந்தையில் பணியாற்றியவர்கள் என்பது தெரியவந்துள்ளது. முதலில், இது கொரோனா வைரஸ் தாக்குதல் என்பது அவருக்குத் தெரியவில்லை. புதிய வகையான காய்ச்சல் என்பதை மட்டும் உறுதிசெய்துகொண்டார்.
2003-ம் ஆண்டு, உலக நாடுகளை அச்சுறுத்திய சார்ஸ் (SARS) வைரஸ் போன்றது என நினைத்துள்ளார். இதுதொடர்பாக, அவரது நட்பு வட்டத்தில் இருக்கும் மருத்துவர்களுக்கு, டிசம்பர் 30-ம் தேதி WECHAT மூலம் இதுகுறித்த தகவல்களை அனுப்பியுள்ளார். நோயாளிகளைக் கையாளும்போது பாதுகாப்புக்காக மாஸ்க் அணிந்துகொள்ளுங்கள் என நண்பர்களை அறிவுறுத்தியுள்ளார்.

இதையடுத்து, அவரது குறுந்தகவல்கள் வெகுவிரைவாக பரவத்தொடங்கியது. அவரது பெயர் அழிக்கப்பட்டு, அவர் அனுப்பிய தகவல்கள் மட்டும் பரவத்தொடங்கியது. இது, லீ வெண்லியாங்-குக்கு ஆபத்தில் முடிந்தது.
இந்தத் தகவல் இணையத்தில் வேகமாகப் பரவியதால், தான் கைது செய்யப்படலாம் என லீ வெண்லீயாங் அறிந்திருந்தார். ஏனென்றால், லீ வெண்லியாங்குக்கு காய்ச்சல் குறித்து சரியாகத் தகவல் தெரியவில்லை. இது, தொற்றுநோய் போல் பரவும் என்பதால், சக மருத்துவ நண்பர்களை எச்சரிக்கும் விதமாகத்தான் wechat-ல் பதிவுசெய்துள்ளார்.
ஆனால், இவை சமூகவலைதளத்தில் வேகமாகப் பரவும் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. அவர் நினைத்தது போலவே நான்கு நாள்கள் கடந்த நிலையில், சீனாவைச் சேர்ந்த பொது சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவர் லீ வெண்லியாங்கைக் கண்டித்துள்ளனர்.
பொது அமைதிக்கும் தீங்கு விளைவிக்கும்விதமாக, இதுபோன்ற பொய்யான தகவல்களைப் பரப்புவதை நிறுத்தும்படி எச்சரித்துள்ளனர். மேலும், இதுபோன்ற தகவல்களைப் பரப்பினால், நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், அவரிடமிருந்து இதுதொடர்பாகக் கடிதம் ஒன்றையும் பெற்றுச்சென்றுள்ளனர். இதையடுத்து, காவல்துறை அதிகாரிகளும் அவரை விசாரித்து விட்டுச் சென்றுள்ளனர்.
அடுத்து, ஜனவரி 10-ம் தேதி, கொரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளான பெண்ணுக்கு சிகிச்சையளித்துள்ளார். கொரோனா பாதிக்கப்பட்டிருக்கும் என அவர் அறிந்திருக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில், லீ வெண்லியாங் கொரோனா பிடியில் சிக்கிக்கொண்டார். காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு அவருக்கு வாயிலிருந்து ரத்தம் வந்துள்ளது. ஜனவரி 12-ம் தேதி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. தற்போது அவர், தொடர் சிகிச்சையில் இருக்கிறார்.
ஜனவரி 20-ம் தேதிதான் சீன அரசாங்கம் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து தெரிவித்தது. அதன்பின்னர், சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவர் லீ-யைத் தொடர்புகொண்டு மன்னிப்பு கோரியுள்ளனர். கருத்து சுதந்திரத்துக்கு எதிராக சீன அரசு கையாளும் நடைமுறை, அந்நாட்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. லீ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, இந்நோய் தாக்குதல் குறித்து சில தகவல்களை WECHAT-ல் பகிர்ந்துள்ளார். தன் குடும்பத்தை நினைத்தும் வருத்தம் தெரிவித்திருந்தார்.
‘லீ, நீங்கள்தான் எங்கள் ஹீரோ. உங்களைப்போன்ற மருத்துவர்கள்தான் நாட்டுக்குத் தேவை. ஆனால், சீன அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளால் எதிர்காலத்தில் இதுபோன்று நிலைமை வந்தால், மருத்துவர்கள் வெளியில் சொல்ல அச்சப்படுவார்கள். லீ எச்சரித்தபோதே இதில் கவனமாகச் செயல்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால், நாம் இத்தனை உயிர்களை இழந்திருக்க வேண்டாம்' என அவரது பதிவுகளுக்குக் கீழே சிலர் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: