
; கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் துணிக்கடை உரிமையாளர் சிவசுப்பிரமணியம் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து தலித் குடும்பங்களை சேர்ந்த 17 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் துணிக்கடை உரிமையாளர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் கைது செய்யப்பட்ட சிவசுப்பிரமணியம் மீது சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. உயிரிழந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராட்டம் நடத்திய தமிழ்புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளுவன் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
நாகை திருவள்ளுவன் மீது அடுத்தடுத்து பல ஊர்களில் வழக்குகள் போடப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாக அவரை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தலித் மக்களுக்கு உரிய சுயமரியாதை இந்து மதத்தில் கிடைக்காததால், தமிழ் புலிகள் அமைப்பினர் 3000 தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துக்கொண்டு இஸ்லாம் மதத்திற்கு மாறப் போவதாக அறிவித்திருந்தனர்.
கடந்த ஜனவரி 5-ம் தேதி முதல் இந்த இஸ்லாம் மதத்தினை தழுவும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தற்போது வரை 430 பேர் இஸ்லாம் மதத்திற்கு மாறி இருப்பதாகவும், சட்டப்பூர்வமாக நோட்டரி வழக்கறிஞரிடம் அபிடவிட் பெற்று தாங்கள் இஸ்லாம் மதத்தினை தழுவி இருப்பதாக தமிழ்புலிகள் அமைப்பின் பொதுச்செயலாளர் இளவேனில் என்கிற இப்ராகிம் தெரிவித்தார்.
இளவேனில் என்கிற இப்ராகிம் மற்றும் மார்க்ஸ் என்கிற முகமது அபுபக்கர்
இந்து மதத்தில் இருந்து விடுதலை பெற்றால் மட்டுமே சாதி ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமையை ஒழிக்க முடியும் என்பதால் இஸ்லாத்தை தழுவி இருக்கின்றோம் என தெரிவிக்கும் அவர்கள், இஸ்லாம் மட்டுமே தங்களை வேறுபாடுகள் இல்லாமல் சக மனிதராக தங்களை அரவணைத்து கொள்கின்றது எனவும் இஸ்லாம் மதத்தினை தழுவியவர்கள் தெரிவிக்கின்றனர்.
சம உரிமையும், சுயமரியாதையும் இஸ்லாம் மதம் கொடுப்பதால், அதை எதிர்நோக்கி கிடந்த தலித் சமூக மக்கள் தொடர்ந்து இஸ்லாம் மதத்தினை தழுவுவது தொடரும் எனவும் இஸ்லாம் மதத்தினை தழுவிய தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக