சனி, 15 பிப்ரவரி, 2020

பாசிச அரசு வீழ்வது உறுதி ... ஆனால் எத்தனை உரிமைகளையும் உயிர்களையும் ....

சுமதி விஜயகுமார் : டெல்லி தேர்தலில் பாஜக தோல்வியில் பெரிதாக
மகிழ்ச்சி அடைய ஒன்றுமில்லை. மத்தியபிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட், மகாராஷ்டிரா தேர்தலில் தோல்வி அடைந்த பின்பு தான் caa, npr, nrc யை பாஜக அரசு சட்டம் ஆக்கி இருக்கிறது. டெல்லி தேர்தலில் தோல்வி அடைத்ததினால் தங்கள் மதவாத அரசியலையோ மாட்டு அரசியலையோ நிறுத்தப்போவதில்லை. மக்களின் எந்தவித நல திட்டங்களையும் கொண்டு வரப்போவதில்லை.
பாஜக என்று மட்டுமில்லை. நம்மை ஆண்ட எந்த அரசிற்கு எதிராகவும் நம்மில் ஏதோ ஒரு பிரிவினர் போராடிக்கொண்டு தான் இருந்திருக்கிறோம். ஆளும் வர்க்கம் அத்தி பூத்தாற்போல் எப்போதாவதுதான் மக்களுக்கானதாய் அமையும். அப்படி அமைந்த அரசு கொண்டு வரும், அல்லது மக்கள் போராடி பெரும் ஒரு சில உரிமைகளையும், சட்டங்களையும் தவிடு பொடியாய் ஆக்கிவிடும் அடுத்து வரும் அரசு.
முகநூலில் நண்பர்கள் பட்டியலில் 90% பாஜக எதிர்ப்பாளர்கள் தான் இருக்கிறார்கள். கிணற்று தவளை போல் இந்தியா முழுவதும் அப்படிதான் என்று நம்பிக்கொண்டிருந்தேன். ஒருவரை காணும் வரை.
கணவரின் நண்பர். அழகான குடும்பம். 2 அழகான குழந்தைகள். அவர் தொழில் பற்றி பேச்சு வர, முன்பு போல் இல்லை கொஞ்சம் தொழில் முடங்கி விட்டது என்றார். Gst யாலா என்று கேட்ட பொழுது. ஆமாம், ஆனால் அது மிக அருமையான திட்டம். அந்த திட்டம் வந்த பிறகு யாராலும் வரி ஏய்க்க முடியவில்லை என்று பிஜேபி புகழ் பாடினார். நண்பர்களிடம், உறவினர்களிடம் வழிய சென்று அரசியல் பேசுவதில்லை என்ற முடிவில் இருந்ததினால் எதுவும் சொல்லாமல் கேட்டு கொண்டிருந்தேன். இணையரோ ' இவங்க பிஜேபி supporter தான்' என்று கோத்துவிட அப்படியா என்று நண்பருக்கு மகிழ்ச்சி.

விளையாட்டிற்கு கூட பிஜேபி ஆதரவாளர் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாததினால் 'இல்லைங்க எனக்கு பிடிக்காது ' என்று சொல்ல கொஞ்சம் வாக்குவாதம் வந்தது. பேச்சு அங்கு இங்கு என்று செல்ல, முடிவில் குஜராத் படுகொலைகள் பற்றி கேட்டேன். அவர் சொன்ன பதிலில் வாயடைத்து போய் விட்டேன். அவர் சொன்ன பதில் ' ஆமா அப்டித்தான் பண்ணனும். அவனுங்க என்னென்ன பண்ணினாங்க தெரியுமா' என்றார். அதற்கு மேல் அவரிடம் வாதிட்டு எதை புரியவைப்பது என்று தெரியாமல் மலைத்து நிற்கையில் அருகில் இருந்தவர்கள் போதும் அரசியல் பேச்சு என்று திசை மாற்றி விட்டார்கள்.
தன் தொழில் பாதித்தாலும் பரவாயில்லை மோடி அரசு செய்வது அனைத்தும் நல்லதற்கே என்று நம்புவர்களில் அநேகம் பேர் நன்கு படித்தவர்கள் தான். இப்போது நாட்டை பிஜேபியிடம் இருந்து மட்டுமில்லை, இது போன்ற துக்ளக் அறிவாளிகளிடம் இருந்தும் தான் காப்பாற்ற வேண்டும்.
டெல்லி தேர்தலில் பெரும்பான்மையான மக்கள் பிஜேபியை நிராகரித்து இருக்கிறார்கள் என்பதே தற்பொழுதைய மகிழ்ச்சி. மற்ற அரசுகளாவது மக்கள் குரலுக்கு கேட்பது போல் நடிப்பார்கள். இந்த பாசிச அரசோ பெரும் சுவரை எழுப்பி மக்கள் குரலை நசுக்குவதிலேயே குறியாய் இருக்கிறார்கள்.
இடதுசாரி சிந்தனையோ வலதுசாரி சிந்தனையோ, எதுவாக இருந்தாலும் மாற்றி மாற்றி எழுச்சியும் வீழ்ச்சியும் அடைந்துகொண்டே தான் இருக்கும். இப்போதிருக்கும் பாசிச அரசு கூடிய விரைவில் வீழ்வது உறுதி என்றாலும், அதற்குள்ளாக எத்தனை உரிமைகளையும் உயிர்களையும் விலையாய் கொடுக்க போகிறோம் என்பதே பெரும் அச்சம் தரக்கூடிய கேள்வியாய் இருக்கிறது

கருத்துகள் இல்லை: