திங்கள், 15 ஏப்ரல், 2019

நூற்றுக்கணக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு: கடப்பா பூத்திற்கு பூட்டு; ஆந்திர வாக்குப்பதிவு நிலவரம்

THE HINDU TAMIL: ஆந்திரா மாநிலத்தில் 175 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் 25 லோக்சபா தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.  தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி புதிய கட்சியாகக் களமிறங்கியுள்ளன.  பாஜக, காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் களமிறங்கியுள்ளது.
வாக்காளர்களுக்குப் பணம் கடப்பா பூத்திற்கு பூட்டு:
பிரகாசம் மாவட்டம் பல்லிக்குருவா மண்டலில் உள்ள வேமாவரம் கிராமத்தின் வாக்குச்சாவடி ஏஜெண்ட்கள் இருவர் கைது செய்யப்பட்டனர், இவர்கள் இருவரும் வாக்காளர்களுக்கு பணம் அளித்ததாக கையும் களவுமாகப் பிடிபட்டனர்.

கடப்பாவில் 126வது பூத்தில் ஜெகன் மோகன் ரெட்டி கட்சியினர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அடித்து நொறுக்கினர். கடும் வன்முறை ஏற்படும் அச்சத்தில் போலீசார் கும்பலைக் கலைக்க பலவந்தம் பிரயோகம் செய்தனர். கடப்பாவில் இந்த பூத்திற்கு இப்போதைக்கு பூட்டுப் போடப்பட்டு, வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நர்ஸராவ்பேட்டையில் தெலுங்கு தேசம் வேட்பாளர் அரவிந்த பாபு மீது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.  கும்பலைக் கலைக்க போலீஸார் சிறு அளவில் லத்தி சார்ஜ் நடத்தினர்.
100க்கும் மேற்பட்ட ஈவிஎம் எந்திரங்களில் கோளாறு:
குண்டூர் மாவட்டத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சிக்கல்களைச் சந்தித்தார். ஈவிஎம் வேலை செய்யாததால் அங்கு சிறு பரபரப்பு ஏற்பட்டு பிறகு எந்திரம் மாற்றப்பட்டது.

விசாகப்பட்டிணத்தில் ஆந்திர அமைச்சர் வாக்களிக்க வந்தார்.
 பிரகாசம் மாவட்டத்தில் 3260 பூத்களில் வாக்குப்பதிவு தொடங்கியது, ஆனால் நூற்றுக்கணக்கான ஈவிஎம் எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. எந்திரங்களை மாற்றி வைத்தவுடன் வாக்குப்பதிவு தொடங்கியது.
அதே போல் குப்பம் பகுதியிலும் பூத்களில் ஈவிஎம் எந்திரங்கள் பல கோளாறு அடைந்துள்ளன. குப்பம் சந்திரபாபு நாயுடுவின் சொந்தத் தொகுதியாகும்.
கடப்பா நகரில் 163வது வாக்குச்சாவடியில் ‘விசிறி’ சின்னத்திற்கு எதிராக உள்ள பொத்தான் வேலை செய்யவில்லை என்று பிரச்சினை ஏற்பட்டது. அதே போல் இன்னொரு பூத்தில் சைக்கிள் சின்னத்துக்கு வாக்களிக்க முடியவில்லை. இதனையடுத்து ஈவிஎம்கள் மாற்றப்பட்டன.
இதே போல் அனந்தபூர், மங்களகிரி உட்பட பல பூத்களில் ஈவிஎம் எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு சிறு தகராறுகள் ஏற்பட்டது, பிறகு எந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன, சில எந்திரங்களில் கட்சியின் சின்னங்கள் சரியாகவே தெரியவில்லை என்ற புகார்களும் எழுந்துள்ளன

கருத்துகள் இல்லை: