சனி, 20 ஏப்ரல், 2019

பொன்னமராவதியில் கலவரம்... 1,000 பேர் மீது வழக்குப்பதிவு... பதற்றம் நீடிப்பு, போலீஸ் குவிப்பு

tamil.oneindia.com : புதுக்கோட்டை: பொன்னமராவதியில் கலவரத்தில் ஈடுபட்டதாக சுமார் 1000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கலவரம், மற்ற மாவட்டங்களுக்கு பரவாமல் தடுக்க 1,500 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஒரு சமூகத்தினர் பற்றிய அவதூறு வாட்ஸ்அப் ஆடியோவால் பொன்னமராவதியில் கலவரம் ஏற்பட்டது.அவதூறு வாட்ஸ்அப் ஆடியோ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று போராட்டம் வெடித்தது. 
மேலும், பொன்னமராவதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின் போது, போலீசார் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. போராட்டத்தின்போது பொன்னமராவதி காவல்நிலையம், போலீஸ் வாகனங்களும் தாக்கப்பட்டன. கற்கள் வீசி தாக்கப்பட்டதை தொடர்ந்து, பொன்னமராவதி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 75 சதவிகித நகரப்பேருந்துகள் இயக்கப்படவில்லை. 
பிரச்னை தொடராமல் தடுக்க மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கலவரத்தில் ஈடுபட்டதாக, வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் சுமார் 1000 பேர் மீது பொன்னமராவதி போலீசார், வழக்குப்பதிவு செய்துள்ளனர். பதற்றம் நீடிப்பதால், காவல்துறையினர் குவிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

கருத்துகள் இல்லை: