சனி, 20 ஏப்ரல், 2019

வேலூர்: திமுக வேட்பாளராக கதிர் ஆனந்தின் மனைவி சங்கீதா?

வேலூர்: திமுக வேட்பாளராக கதிர் ஆனந்தின் மனைவி சங்கீதா?மின்னம்பலம் : வேலூர் தொகுதியில் திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்ட நிலையில், தேர்தல் ஏப்ரல் 16 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. கடந்த மார்ச் 30, ஏப்ரல் 1 தேதிகளில் துரைமுருகன் வீடு, மற்றும் சில திமுகவினரின் வீடுகளில் வருமான வரி ரெய்டு நடத்தப்பட்டது. இதில் துரைமுருகனின் நண்பரான பூஞ்சோலை சீனிவாசனின் சிமெண்ட் குடோனில் இருந்து சுமார் 11 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது.
இதுதொடர்பாக கடந்த 3ஆம் தேதி தேர்தல் ஆணையத்திடம் வருமான வரித் துறை அறிக்கை சமர்ப்பித்த நிலையில், வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனையடுத்து தேர்தல் செலவின உதவி அலுவலர் சிலுப்பன் காட்பாடி காவல் நிலையத்தில் அளித்த புகாரில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்புமனுவில் குறிப்பிட்டதைக் காட்டிலும் அதிக பணம் அவரது இல்லத்தில் நடந்த வருமான வரி சோதனையில் பிடிபட்டுள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகிய 3 பேர் மீது காட்பாடி காவல் துறையினர் ஏப்ரல் 10 ஆம் தேதியன்று வழக்குப் பதிவு செய்தனர். இதையே காரணமாக வைத்து ஏப்ரல் 16 ஆம் தேதி, ‘வேலூர் தேர்தல் ரத்து செய்யப்படுகிறது’ என்று அறிவித்தது தேர்தல் ஆணையம்.
இந்த பின்னணியில் வேலூர் தொகுதிக்கான தேர்தல் வரும் மே 19 ஆம் தேதி நடக்கும் நான்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலோடு சேர்ந்து நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு வேலூர் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இது ஒருபக்கம் என்றால் மீண்டும் தேர்தல் அறிவிக்கப்படும் பட்சத்தில் திமுகவின் வேட்பாளராக ஏற்கனவே நின்ற கதிர் ஆனந்த் நிற்பாரா, நிற்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கடைசி கட்ட தேர்தலோடு வேலூர் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருக்கிறது. அப்போது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் மீண்டும் போட்டியிடும் பட்சத்தில், கதிர் ஆனந்தை தகுதி நீக்கம் செய்யக் கோரி வற்புறுத்த அதிமுக வேட்பாளர் ஏ.சி. சண்முகம் திட்டமிட்டிருக்கிறார். கதிர் ஆனந்த் மீது வேட்பு மனு தொடர்பாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டிருப்பது, ரெய்டில் கைப்பற்றப்பட்ட பணம் அவருக்கான தேர்தல் செலவுக்காக பயன்படுத்த வைக்கப்பட்டிருந்தது ஆகியவற்றால் கதிர் ஆனந்தை தகுதி நீக்கம் செய்வதற்கான காரணங்கள் வலுவாக இருக்கின்றன என்கின்றனர் அதிமுகவினர்.
இத்தனை சட்ட சிக்கல்கள் உள்ளதால், கதிர் மீண்டும் போட்டியிட வாய்ப்பில்லை என்று தெரிகிறது. இதையடுத்து மீண்டும் வேலூர் தேர்தல் நடக்கும்போது திமுக வேட்பாளராக கதிர் ஆனந்தின் மனைவியும், துரைமுருகனின் மருமகளுமான சங்கீதாவை வேட்பாளராக நிறுத்த முயற்சிகள் தீவிரமாக நடக்கின்றன.
வீட்டில் வருமானவரித்துறை ரெய்டு நடத்தியதால் கதிர் ஆனந்த் சில நாட்கள் பிரச்சாரத்துக்கே செல்லாமல் வீட்டிலேயே இருக்க நேரிட்டது. அப்போதுதான் கதிர் ஆனந்தின் மனைவி சங்கீதா கழுத்தில் கறுப்பு -சிகப்பு நிற துண்டை போட்டுக்கொண்டு கணவருக்காக பிரச்சாரக் களத்தில் இறங்கினார். தனது கணவர் கதிர் ஆனந்துக்காக வேலூர் தொகுதியின் பல்வேறு இடங்களில் சங்கீதா தேர்தல் பரப்புரை செய்தார். மக்களிடையே துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தார். வேலூர் தொகுதிக்கு உட்பட்ட ஆந்திர, கர்நாடக எல்லையோரப் பகுதிகளில் தெலுங்கு, கன்னட மொழிகளில் சங்கீதா செய்த பிரச்சாரத்தால் ஏ.சி. சண்முகமே பிரச்சாரத்தின் இறுதி நாட்களில் கொஞ்சம் திணறித்தான் போனார்.
இந்நிலையில் மீண்டும் கதிர் ஆனந்துக்கு வாய்ப்பு இல்லையென்ற நிலையில், தன் மனைவிக்கு சீட் வேண்டும் என்று கதிர் ஆனந்த் துரைமுருகனிடம் வற்புறுத்தியுள்ளார். துரைமுருகன் இதுபற்றி இன்னும் ஸ்டாலினிடம் பேசவில்லை என்றாலும் மாவட்டம் முழுதும் துரைமுருகனின் ஆதரவாளர்கள் கதிர் ஆனந்துக்கு இல்லையென்றால் அவர் மனைவி சங்கீதாவுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கத் தொடங்கிவிட்டார்கள். ஒரு படி மேலே போய் கதிர் ஆனந்தே தன்னுடைய ஃபேஸ்புக்கில் இதுபோன்ற விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார்.
மீண்டும் ஏ.சி. சண்முகம் அதிமுக சார்பாக நிற்கும் பட்சத்தில், சங்கீதாவை திமுக சார்பாக நிறுத்தினால் டஃப் ஃபைட் கொடுப்பார் என்கிறார்கள் வேலூர் திமுகவினர். அதேநேரம் கதிர் ஆனந்த் நிற்காவிட்டால் விஐடி செல்வம், ஜோலார்பேட்டை அழகிரி, வேலூர் விஜய், ஆம்பூர் டெல்லிபாபு , குடியாத்தம் பழனி, அணைக்கட்டு வேலழகன் போன்றவர்கள் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்றும் ஒருபக்கம் முயற்சியில் இருக்கிறார்கள்.
ஆனால் வேலூர் திமுகவே துரைமுருகன் பின்னால் நிற்பதால் கதிர் ஆனந்தின் மனைவி சங்கீதா தேர்தலில் நிற்க தயாராகவே இருக்கிறார்.

கருத்துகள் இல்லை: