வெள்ளி, 19 ஏப்ரல், 2019

சுஷ்மா சுவராஜ் :பால்கோட் தாக்குதலில் பாகிஸ்தானியர் யாரும் கொல்லப்படவில்லை

இதைத்தானேடா அந்த டெயிலரும் சொன்னான்...
பால்கோட் தாக்குதலில் பாகிஸ்தானியர் யாரும் கொல்லப்படவில்லை: சுஷ்மாமின்னம்பலம் : இந்திய விமானப் படை கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானிய ராணுவ வீரர்களோ, குடிமகன்களோ யாரும் கொல்லப்படவில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று தெரிவித்திருக்கிறார். இந்தத் தகவல் அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்களிடத்திலும், சர்வதேச வட்டாரத்திலும் கூட பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பிப்ரவரி 14 ஆம் தேதி காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சி.ஆர்.பி.எஃப் படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தியதில் 40 க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிப்ரவரி 26 ஆம் தேதி அதிகாலை இந்திய விமானப் படை பாகிஸ்தானின் பால்காட் பகுதி மீது தாக்குதல் நடத்தியது.
இதில் பயங்கரவாதிகளின் முகாம் அழிக்கப்பட்டதாக தகவல்கள் பரவின. பாஜக தலைவர் அமித் ஷா, தனக்கு கிடைத்த தகவல்களின்படி 250க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று கூறினார். பிரதமர் மோடி பல மேடைகளில், நமது விமானப் படை பயங்கரவாதிகளை அழித்துவிட்டது என்று கூறினார். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கையில் குழப்பம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டபோது, ‘நம் நாட்டின் எதிர்க்கட்சிகள் நம் நாட்டு பாதுகாப்புப் படைகளையே நம்பவில்லை’ என்று கேள்வி கேட்டு, இதை பெரிய அளவில் தேர்தல் பரப்புரையாகவும் செய்தார் மோடி.

இந்த பின்னணியில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று (ஏப்ரல் 19) பாஜகவின் பெண் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்,
“புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக நாம் பாகிஸ்தான் மீது விமானப் படை தாக்குதல் நடத்தும்போது சர்வதேச நாடுகளுக்கு, ’இது நமது தற்காப்புக்கான தாக்குதல்தான்’ என்பதை முன்கூட்டியே தெளிவாக எடுத்துச் சொல்லிவிட்டோம். தாக்குதலுக்கு முன்பாக விமானப் படைக்கு நாம் கொடுத்த அறிவுரை என்னவென்றால், ‘ஜெய்ஷி இ முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்படவேண்டும். பாகிஸ்தான் குடிமக்களுக்கோ, பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கோ எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதுதான். நமது விமானப் படையும் அதன்படியே தாக்குதல் நடத்தி முடித்தது” என்று கூறியிருக்கிறார் சுஷ்மா சுவராஜ்.
பாஜகவின் மூத்த தலைவராக மட்டுமல்ல இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இருக்கும் சுஷ்மா சுவராஜின் இந்த கருத்து வெகு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அப்படியெனில் 400 பயங்கரவாதிகளை ஒழித்தோம், 300 பயங்கரவாதிகளை ஒழித்தோம் என்று பாஜகவினர் பேசியதையும், அதை உறுதிப்படுத்தச் சொல்லிக் கேட்ட எதிர்க்கட்சிகளை தேச விரோதிகள் என்று வசைபாடியதையும் தன் பேச்சால் தகர்த்திருக்கிறார் சுஷ்மா சுவராஜ்.
பாகிஸ்தான் குடிமக்கள் என்றால் அதில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகளும்தானே அடக்கம், எனவே, இந்திய தாக்குதலில் பயங்கரவாதிகள் எவரும் உயிரிழக்கவில்லை என்பதையே சுஷ்மா சுவராஜின் பேச்சு காட்டுகிறது என்கிறார்கள் அரசியல் வட்டாரங்களில்.
இதுகுறித்து உடனடியாக பாகிஸ்தான் தனது கருத்தை வெளியிட்டிருக்கிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளரான் ஆசிஃப் கஃபூர் “கள நிலவரத்தின் அழுத்தத்தால் உண்மைகள் வெளிவந்துள்ளன. இதுபோலவே 2016 சர்ஜிகல் ஸ்ட்ரைக், எஃப் 16 ரக விமானம் வீழ்த்தப்பட்டது போன்ற விஷயங்களிலும் இந்தியாவின் தவறான பிரசாரம் வெளிவரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் இதுவரை இரண்டு கட்டமாக நடந்ததில் மொத்தம் 160 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்னும் சுமார் 380 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் பால்கோட் தாக்குதல் பற்றி சுஷ்மா சுவராஜ் ஏன் இவ்வாறு பேச வேண்டும் என்ற விவாதமும் பாஜகவுக்குள் ஏற்பட்டுள்ளது. பாஜக நிறுவன தலைவரான அத்வானியின் தீவிர விசுவாசியான சுஷ்மா சுவராஜ் தகுந்த நேரத்தில் மோடியை பழிவாங்குகிறார் என்றும் பாஜகவுக்குள் விமர்சனங்கள் கிளம்பி வருகின்றன.

கருத்துகள் இல்லை: