வெள்ளி, 19 ஏப்ரல், 2019

சீமான் : சுதீசுக்காக வேலூர் தேர்தலை தள்ளி வைத்த தேர்தல் ஆணையம்

tamil.oneindia.com  - shyamsundar.: வேலூரில் செலவு செய்த பணத்தை தேர்தல் ஆணையம் திருப்பி கொடுக்குமா?.-சீமான் கேள்வி
சென்னை: லோக்சபா தேர்தலில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்களித்தார்.
லோக்சபா தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மொத்தம் 95 தொகுதிகளில் நடைபெறுகிறது. இன்று புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 39 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடக்கிறது.
இந்த நிலையில் சென்னையில் வாக்களித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். நாம் தமிழர் கட்சிக்கு பெரிய வெற்றிவாய்ப்பு உள்ளது என்று சீமான் குறிப்பிட்டுள்ளார்.
சீமான் தனது பேட்டியில், வாக்குப்பதிவு எந்திரங்கள் பல இடங்களில் பழுதாகி இருக்கிறது. அந்த அளவிற்கு தேர்தல் ஆணையம் பொறுப்பற்று உள்ளது. இதை ஏற்கனவே சோதித்து இருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் பொறுப்பற்று செயல்படுகிறது. இதை எல்லாம் கூடவா பார்க்காமல் இருப்பார்கள். வருமானவரித்துறை எப்படி வருமானவரித்துறையை வைத்து நாடகம் ஆடுகிறார்கள்.
வேலூரில் மட்டும்தான் பணம் கொடுத்தார்களா?

மக்களுக்கு எதை காட்ட நினைக்கிறீர்கள். வேறு எங்குமே காசு கொடுக்கவில்லையா?.
மக்களை ஏன் ஏமாற்ற பார்க்கிறீர்கள். நாங்கள் செய்யவில்லை நீங்க சொன்ன செலவை கூட நாங்கள் முழுதாக செய்யவில்லை. நாங்கள் செலவு செய்த பணத்தை தேர்தல் ஆணையம் திருப்பி தருமா.

முறைகேடாக செலவு செய்த நபரை மட்டும்தான் தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். எல்லோருக்கும் தண்டனை கொடுப்பது எந்த விதத்தில் நியாயம். போட்டி இல்லை காசு கொடுத்த வேட்பாளர் 10 ஆண்டுகளுக்கு போட்டியிட கூடாது என்று தடை விதிக்க வேண்டும்.

இது அதிமுக கூட்டணியின் தேர்தல் ஆணையம். சுதீஷை துரைமுருகன் அவமதித்த கோபத்தில், தேமுதிகவை மகிழ்ச்சி படுத்துவதற்காகத்தான் தேர்தல் ஆணையம் வேலூரில் இப்படி செயல்படுகிறது, என்று சீமான் தேர்தல் ஆணையம் மீது குற்றஞ்சாட்டி இருக்கிறார்

கருத்துகள் இல்லை: