புதன், 17 ஏப்ரல், 2019

பண விநியோகக் குழு: வீடியோவில் சிக்கிய வேலூர் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கோவி சம்பத்


minnambalam : ஏ.சி.சண்முகத்துக்கு வாக்களிக்க பணப்பட்டுவாடா செய்வது குறித்து கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுக்கு அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ அறிவுறுத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை குறிவைத்து வருமான வரித் துறை சோதனை நடத்தி, பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான சிமெண்ட் குடோனில் 11.48 கோடி ரூபாயை கைப்பற்றினர். இதனைக் காரணம் காட்டி வேலூர் தேர்தல் நேற்று தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.
இந்த நிலையில் அந்தத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு வாக்களிக்கப் பணப் பட்டுவாடா செய்ய, கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுக்கு அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கோவி சம்பத் அறிவுரை வழங்கும் வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் ஒரு மரத்தடியின் கீழ் கூடியிருக்கும் நிர்வாகிகள் மத்தியில், “உங்கள் இஷ்டத்துக்கு ஒரு ஓட்டுக்குக் கூட நீங்க பணம் கொடுக்கக் கூடாது. தேமுதிகவில் இரண்டு பேர், பாமகவில் நான்கு பேர் செல்லுங்கள், அதிமுகவினர் மூன்று பேர் வரட்டும். 10 பேர் ஒரே டீமாக போங்க. இரண்டு, மூன்று பேரை கண்காணிப்பதற்காக அழைத்துச் செல்லுங்கள். ஊர் முனையில் ஆள் வருகிறார்கள், போலீஸ் வருகிறது என்று தகவல் சொல்ல ஒருவரை நிற்கச் சொல்லுங்கள். ஏ.சி.எஸ் ஆட்கள் இல்லாமல் ஒரு ஓட்டுக்குக் கூட பணம் கொடுக்கக் கூடாது. பணத்தை ஒரே இடத்தில் வைத்துக்கொள்ளாதீங்க. எண்ண வேண்டியதாய் இருந்தால் ஒரு ஓரமாய் எண்ணிக்கொள்ளுங்கள்” என்று கூறுகிறார்.
அதனை ஆமோதிக்கும் நிர்வாகிகள், பணத்தை இரவில்தான் கொடுக்கப் போகிறோம் என்று கூறுகிறார்கள்.தொடர்ந்து, “ஒரு ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுக்க வேண்டும்” என்றும் சம்பத் அறிவுறுத்துகிறார்.
நேற்று முன்தினம் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், இதனை கோவி சம்பத் மறுத்துள்ளார். இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள சம்பத், “எனக்கு முத்துக்குத்தண்டுவட அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதனால் தேர்தல் வேலைகளுக்கே சரிவர செல்லவில்லை. வீட்டில் இருந்துவருகிறேன். பணப்பட்டுவாடா சம்பந்தமாக நான் பேசும் சம்பவமே நடக்கவில்லை. பழைய வீடியோவில் திட்டமிட்டு என்னுடைய குரலை மிமிக்ரி செய்து திரித்து வெளியிட்டுள்ளனர். திமுகவினர்தான் இதனை செய்திருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: