சனி, 20 ஏப்ரல், 2019

பா.ம.க., இந்து முன்னணியினர் நடத்திய வன்முறை வெட்கப்படத்தக்கதாகும்... ஆசிரியர் வீரமணி

17 ஆவது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று (18.4.2019) தமிழ்நாட்டில் நடந்து
முடிந்திருக்கிறது. இந்தத் தேர்தலில் இரு கசப்பான சம்பவங்கள்
சுட்டிக்காட்டப்பட வேண்டியவையாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வாக்குச் சாவடிக்குள் புகுந்து ரகளை!
ஆற்காடு அடுத்து கீழ்விசாரம் என்ற ஊரில் வாக்குச் சாவடியில் நடந்த அந்த நிகழ்வு தலைகுனியத்தக்கதாகும்.
இதுகுறித்து இன்று ‘இந்து தமிழ்’ நாளிதழில் (பக்கம் 7) வெளிவந்த செய்தி வருமாறு:
‘‘ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் வாக்குச் சாவடியில் பாமகவினர் கூட்டமாக நுழைய முயன்றனர். இதனால், பாமகவினரை எச்சரிக்கும் வகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட துணை ராணுவப் படை வீரர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதால் சலசலப்பு ஏற்பட்டது.

அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆற்காடு அடுத்த கீழ்விஷாரத்தில் உள்ள அரசினர் நடுநிலைப்பள்ளியில் நேற்று வாக்குப் பதிவு அமைதியான முறையில் நடந்தது. அந்த மையம் பதற்றமான வாக்குச்சாவடி என்பதால் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மாலை 5.45 மணி அளவில் பாமகவைச் சேர்ந்த முன்னாள் ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு, ஆற்காடு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.எல்.இளவழகன் மற்றும் நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் கூட்டமாக வாக்குச் சாவடிக்குள் செல்ல முயன்றுள்ளனர்.
அங்கிருந்த காவல் ஆய்வாளர் சுப்புலட்சுமி என்பவர், தேர்தல் விதிப்படி கூட்டமாக வாக்குச் சாவடிக்குள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது எனக் கூறி அவர்களை தடுத்துள்ளார். ஆனால், அதையும் மீறி அவர்கள் உள்ளே செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவப் படை வீரர் நவ்ரஜ்சிங் என்பவர் பாமகவினரை எச்சரிக்கும் வகையில் வானத்தை நோக்கி தனது துப்பாக்கியால் ஒருமுறை சுட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதும் அதிர்ச்சியடைந்த பாமகவினர் சிதறி ஓடினர். வாக்குச் சாவடிக்குள் இருந்த அலுவலர்களும் அதிர்ச்சியடைந்தனர். பதற்றமான சூழலில் சிறிது நேரம் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.’’
மேனாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு அழகா இது?
இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது - மேனாள் மத்திய அமைச்சர், ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி இதற்கு உடந்தையாக இருந்திருப்பது அதிர்ச்சிக்குரியதாகும். நல்ல மனிதர் என்பவருக்கு இப்படி ஒரு அவப்பெயர் வரலாமா?
பா.ம.க.வின் இளைஞரணி தலைவராகவும், மேனாள் மத்திய அமைச்சராகவும் இருந்தவர் சில நாள்களுக்குமுன் பேசியதை இந்த நிகழ்ச்சியோடு தொடர்புப்படுத்திப் பார்க்கவேண்டியுள்ளது.
வாக்குச் சாவடியைக் கைப்பற்ற சொன்ன  பா.ம.க. இளைஞரணி தலைவர்
ஏடுகளில் வெளிவந்த அந்த செய்தி இதோ:
‘‘காஞ்சிபுரம் திருப்போரூரில் (6.4.2019) பேசிய அன்புமணி ராமதாஸ்,  ‘‘நம்மதான் இருப்போம் பூத்துல.... சொல்றது புரியுதா இல்லையா? இந்தப் பகுதியில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்கு வங்கி கிடையாது. தி.மு.க.வுக்கு மட்டும் கொஞ்சம் வாக்கு வங்கி உள்ளது. சரி, அப்ப தேர்தல்ல என்ன நடக்கும்? பூத்துல என்ன நடக்கும்? நம்மதான் இருப்போம் பூத்துல... சொல்றது புரியுதா இல்லையா? (தொண்டர்கள் கைதட்டல்). நம்மதான் இருப்போம்... நம்மதான் இருப்போம். அப்புறம் என்ன? சொல்லணுமா வெளியில... புரிஞ்சிக்கிட்டீங்கள்ல....’’ என அன்புமணி ராமதாசு பேசினார்.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றும் நோக்கத்தில் அன்புமணி ராமதாசு இந்தக் கருத்தைத் தெரிவித்ததாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அன்புமணி ராமதாசுமீது வழக்குப் பதிவு செய்ய திருப்போரூர் தேர்தல்  அதிகாரிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டார்’’ என்பதுதான் அந்தச் செய்தி.
இதற்கு என்ன மேல் நடவடிக்கை என்பது புரியாத புதிராகவே உள்ளது. தேர்தல் ஆணையத்திற்கே வெளிச்சம்!
பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர்மீது  ஏவப்பட்ட வன்முறை
இன்னொரு கொடுமையான நிகழ்ச்சி - அரியலூர் மாவட்டம் செந்துறையை யடுத்த பொன்பரப்பி கிராமத்தில் நேற்று கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையாகும். தருமபுரியில் நடந்ததின் நீட்சியாக இது கருதப்படவேண்டும்.
(பாவம், ஹிந்து முன்னணியினர் நம்பும் ஈமச் சடங்கு பானை உடைப்பில்தான் நடக்கும், அதுதானோ?)
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் வாழும் பகுதிக்குள் நுழைந்த பா.ம.க., இந்து முன்னணியினர் நடத்திய வன்முறை வெட்கப்படத்தக்கதாகும். 20-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் இடித்து நொறுக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் கொளுத்தப்பட்டுள்ளன. கோடரியால் தாக்கப்பட்ட ஒரு தோழர் மண்டை உடைக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
அன்று முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் சொன்னதென்ன?
இந்த 21 ஆம் நூற்றாண்டில் தாழ்த்தப்பட்ட மக்களின் கதி இதுதானா? அவர்களுக்கு வாழ்வுரிமை கிடையாதா?
மேனாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சட்டப்பேரவையில் சொன்னதுபோல, ‘‘வன்முறை என்றால், பா.ம.க.’’ என்பதை உறுதிபடுத்துவதுபோல் அல்லவா இந்த இரு நிகழ்வுகளும் அமைந்துள்ளன.  மருத்துவர் இராமதாசு அவர்கள் தலித் அல்லாத கூட்டமைப்பை ஏற்படுத்தியதன் பலன் இதுதானா?
கீழமாளிகையில் நடந்த கொடுமை!
இந்த நேரத்தில் இன்னொரு முக்கிய தகவல் நினைவூட்டப்பட வேண்டியதாகும்.
இதே பொன்பரப்பியை அடுத்த கீழமாளிகை என்ற ஊரில் நந்தினி என்னும் தாழ்த்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்த ஒரு பெண் அப்பகுதியில் பேட்டை ரவுடி போல சுற்றித் திரியும் இந்து முன்னணியைச் சேர்ந்த ஒருவர் முக்கியமாக இருந்து, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டு, பிணத்தைக் கிணற்றில் வீசிச் சென்றாரே -அந்த வழக்கில் அவர் பெயர் சேர்க்கப்படவேண்டும் என்று கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர்கள் அனைவரும் வலியுறுத்திய நிலையிலும், (திராவிடர் கழகம் ஜாதி ஒழிப்பு மாநாட்டை நடத்தியது) பா.ஜ.க.வின் தொங்கு சதையாக இருக்கும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி - அந்த ஆள்மீது சிறு துரும்பும் படாமல் பாதுகாத்ததுதான் - தொடர்ச்சிதான் எந்த எல்லைக்கும் சென்று தாழ்த்தப்பட்டவர்களை - அவர்களின் வீடுகளைத் தாக்கலாம் என்ற துணிச்சலைத் தந்திருக்கிறது!
அந்த ஆசாமிக்கு ஒரு பிரபல தொழில் நிறுவனத்தில் சம்பளம் கொடுத்து வைக்கப்பட்டு, இந்து முன்னணியை பிரபலப்படுத்தும் ஏற்பாடு நடந்து வருகிறது.
பா.ம.க. நிறுவனரின் கவனத்துக்கு...
பா.ம.க.வும், இந்து முன்னணியும் கைகோர்த்துக் கொண்டு விட்டதா? இதுதான் மருத்துவர் இராமதாசு அவர்கள் பெரியாரை இடை இடையே போற்றும் பேச்சுக்கான இலட்சணமா?
தேர்தல் வரும், போகும் - வெற்றி வரும் - போகும் - அதற்காக அனைத்தையும் பறிகொடுத்து பரிதாப நிலைக்கு ஆளாக வேண்டுமா?
தேர்தலைப்பற்றி கவலைப்படாத, அரசியலை வெறுப்பதுபோல் காட்டிக் கொண்ட ஒரு காலகட்டத்தில்  பா.ம.க. நிறுவனர் பேசிய அந்தப் பேச்சு - தந்தை பெரியார் அவர்களைச் சுற்றிச் சுற்றி வந்ததுண்டு. தேர்தல் அரசியலில், பதவி அரசியலில் அடங்கா ஆர்வம் கொண்ட நிலையில், அதற்கு நேர்மாறாக நடந்துகொண்டு வருவது - எதிர்காலத்தில் அவரும், அவர் சார்ந்த கட்சியும் தனிமைப்படுத்திவிடும் என்று தெரிவித்துக் கெள்வது நமது கடமை.
கீழ்விசாரம், பொன்பரப்பி வன்முறைகளுக்குக் காரணமானவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வரவேண்டும்; இன்றேல் நீதிமன்றம்மூலம் நடவடிக்கைகள் தொடரவேண்டும். மனித உரிமை ஆணையமும், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையமும் உடனடியாக தலையிட்டு உரியது செய்யப்படவேண்டும். அனைத்துக் கட்சித் தலைவர்களும் தங்கள் கண்டனத்தைத் தெரிவிக்கவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு கூறியுள்ளார் கி.வீரமணி. tamilthehindu

கருத்துகள் இல்லை: