புதன், 11 ஏப்ரல், 2018

சேப்பாக்கம் மைதானத்தில் களை இழந்த கிரிகெட்டு .. .

மின்னமலம்: இரண்டு வருடங்களுக்குப் பிறகு சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் வெற்றியுடன் ரசிகர்களை மகிழ்வித்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். ஆனால், மைதானத்துக்குள் நடைபெற்ற போட்டி ரசிகர்களுக்குக் கொடுத்த அளவுக்கு மகிழ்ச்சியை, அதற்கு வெளியே நடைபெற்ற சம்பவங்கள் கொடுக்கவில்லை. வெற்றியைக் கொண்டாடும் முழு மனதுடன் அவர்கள் வெளியேறவில்லை.
போட்டி முடிந்த சில நிமிடங்களுக்குள்ளாகவே மைதானமும், அதற்கு வெளியே இருந்த இடமும் ஆள் நடமாட்டமின்று காட்சியளித்தது. பொதுவாக சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகள் முடிந்ததும், உள்ளே கொண்டு சென்ற பேண்டு வாத்தியங்கள் முழங்க விருப்ப அணிக்காக பாடல்களைப் பாடிக்கொண்டும், நடனமாடிக்கொண்டும் வெளியேறும் ரசிகத்தனம் நேற்றைய போட்டியில் இல்லாமல் போனது. இதற்கேற்றாற்போல வழக்கமாகச் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிகளின்போது நடைபெறும் நட்சத்திர கவனமும் இந்த முறை இல்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவாக மைதானத்துக்கு வந்து ஆதரவு தருவதாக ஒப்புக்கொண்டிருந்த பல தமிழ்த் திரையுலக நடிகர்/நடிகைகள் வரவில்லை. இதனால் போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது.
அவர்களை வைத்துத் திட்டமிடப்பட்டிருந்த விளம்பர யுக்திகளும் கிடப்பில் போடப்பட்டதாக விழா ஏற்பாட்டாளர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் வர்ணனையாளராகப் பணிபுரியும் ஆர்.ஜே.பாலாஜி இந்தப் போட்டிக்கு செல்லவில்லை என்று அறிவித்ததில் தொடங்கி, அங்கு வருவதாகக் கூறியிருந்த பல நடிகர்கள்/நடிகைகளும் தங்களது வரவைத் தவிர்த்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.

கருத்துகள் இல்லை: