செவ்வாய், 10 ஏப்ரல், 2018

அதிமுக அரசு புறக்கணித்த தென் மாநில நிதி அமைச்சர்கள் மாநாடு: ரூ.40 ஆயிரம் கோடியை இழக்கத் தயாரா?

tamilthehindu :போதிராஜ் மத்திய அரசின் வரி வருவாயை மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிப்பதில் தென் மாநிலங்களுக்கு காட்டப்படும் பாகுபாடு குறித்து விவாதிப்பதற்காக, கேரளாவில் இன்று தென் மாநில நிதி அமைச்சர்கள் மாநாடு நடந்தது. ஆனால், அதில் பங்கேற்காமல் தமிழக அரசு புறக்கணித்துவிட்டது.
கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் மட்டுமே இதில் பங்கேற்ற நிலையில், தமிழக அரசும், தெலங்கானா அரசும் இதில் பங்கேற்கவில்லை. தமிழகத்தின் சார்பில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செல்லவில்லை
பாஜக ஆதரவு அல்லாத, ஆளாத மாநிலங்கள் நடத்திய மாநாடு என்பதால், கலந்து தமிழக அரசு கொள்ளவில்லையா? அல்லது, மத்திய அரசு சார்பில் தமிழகத்துக்கு அளிக்கப்படும் வரிவருவாய் குறைந்தாலும் பரவாயில்லை, எங்களின் உரிமைகளை கேட்டுப்பெறமாட்டோம் என்ற நினைப்பில் தமிழக அரசு பங்கேற்கவில்லையா? என்பது தெரியவில்லை.

ஏற்கெனவே தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம், உதய் மின்திட்டம், நீட் தேர்வு, காவிரி நதிநீர் உள்ளிட்டவற்றில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காட்டிய தீவிரத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு காட்டவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த சூழலில் மக்களுக்கு எதை உணர்த்துவதற்காக, தனது வரிவருவாயை, தனது உரிமைகளை நிலைநாட்டும் மாநாட்டில் தமிழக அரசு பங்கேற்காமல் புறக்கணித்து இருக்கிறது.
எதற்காக கேரளாவில் மாநாடு?
மத்திய அரசு அமைத்த 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைக்கு எதிராகவும், அதை திருத்தி அமைக்கவும் தென் மாநிலங்களைச் சேர்ந்த நிதி அமைச்சர்கள் மாநாடு நடத்தப்பட்டது.
15-வது நிதிக்குழுவின் பரிந்துரையின்படி, அதிகமான மக்கள்தொகை கொண்ட மாநிலத்துக்கு அதிகமான நிதியும், குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலத்துக்கு குறைவான நிதியும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதாகும்.
கடந்த 1976-ம் ஆண்டு முதலாம் நிதிக்குழு அமைக்கப்பட்டது. அப்போது இருந்து, தற்போது நடைமுறையில் இருக்கும் 14-வது நிதிக்குழு வரை மாநிலங்களுக்கான நிதிப்பங்கீடு என்பது, 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது. இந்த 14-வது நிதிக்குழுவின் காலம் வரும் 2020-ம் ஆண்டுடன் முடிகிறது.
அடுத்து 15-வது நிதிக்குழு தொடங்குகிறது. இந்த நிதிக்குழுவின் பரிந்துரையின் மாநிலங்களுக்கு நிதிப்பங்கீடு என்பது 2001ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று கூறுகிறது.
ஜிஎஸ்டி வரி நடைமுறைப்படுத்தப்பட்டபின்பும் சரி, அல்லது அதற்குமுன்பும் சரி மத்திய அரசுக்கு வரிவருவாயில் அதிகமான பங்களிப்பை அளிப்பது தென் மாநிலங்கள்தான். அதிலும் குறிப்பாக தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, கேரளா ஆகியவை மத்திய அரசுக்கு வரிவருவாய் வசூலித்து வழங்குவதில் பிரதானமாக இருக்கின்றன.
1971-ம் ஆண்டுக்கு பின் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகம், புதுச்சேரி ஆகியவை மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.
இப்போது 1971-ம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் நிதிப்பங்கீடு அளிக்காமல், 2001-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நிதி பங்கீடு அளித்தால், மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்திருக்கும் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கான நிதி அளவு கடுமையாகக்குறையும்.
குறிப்பாக தமிழகத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடியும், கேரளாவுக்கு ரூ.20 ஆயிரம் கோடியும் இழப்பு ஏற்படும்.
மத்திய அரசின் மக்கள் தொகை கட்டுப்படுத்தும் கொள்கையை சீரிய முறையில் செயல்படுத்தியதற்காக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு 15-வது நிதிக்குழு தண்டனை அளிக்கும் விதமாக இந்தப் பரிந்துரை அமைந்துள்ளது.
அதாவது அதிகமான மக்கள்தொகையும், நிர்வாகத்தில் மோசமாக செயல்படும் மாநிலங்களுக்கு அதிகமான நிதியும், குறைவான மக்கள்தொகையும், நிர்வாகத்தில் சிறப்பாகச் செயல்பட்ட மாநிலங்களுக்கு குறைந்த நிதியும் அளிப்பது எந்தவிதத்தில் நியாயம்.
மத்திய அரசுக்கு வரிவருவாய் வசூலித்து அளிப்பதிலும், மக்கள் தொகை கட்டுப்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தியதில் தென் மாநிலங்கள் முன்னணியில் இருந்துவிட்டு வரிவருவாயை பங்கீட்டில் பாதகமான நிலைப்பாடு எடுக்கக் கூடாது என்பதற்காகவே கேரளாவில் இன்று மாநாடு நடத்தப்பட்டது.
கேரள முதல்வர் பினராயி விஜயன் மாநாட்டை தொடங்கி வைத்தார். கேரள மாநிலத்தின் சார்பில் நிதி அமைச்சர் தாமஸ் ஐசக், ஆந்திர மாநிலத்தின் சார்பில் நிதி அமைச்சர் யணமல ராமகிருஷ்ணனுடு, கர்நாடக சார்பில் கிருஷ்ணா பைரே கவுடா, புதுச்சேரி சார்பில் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளை ஏற்கக்கூடாது 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது என்பது, அரசியலமைப்புச்சட்டத்தின் கீழ் கூட்டாச்சி தத்துவத்துக்கு விரோதமானதாகும், நிர்வாகத்தில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு வருவாயை குறைப்பது தண்டனை என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், ''15-வது நிதிக்குழு பாகுபாட்டின் பரிந்துரைகள் பாகுபாட்டின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளை மாற்றி அமைக்க வேண்டும். ஏற்கெனவே, ஜிஎஸ்டி வரியை நடைமுறைப்படுத்தி மாநிலங்களின் வரிவருவாயில் சுயாட்சி பறிக்கப்பட்டுவிட்டது. 15-வது நிதிக்குழுவின் அடிப்படையில், வளங்களையும், வருவாயையும் பகிர்ந்து அளிப்பதில் நியாமற்ற தன்மையையும் கடைபிடிப்பவதை கைவிட வேண்டும்'' என்று தெரிவித்தார்.
ஆந்திர மாநிலம் சார்பில் பங்கேற்ற நிதி அமைச்சர் யனமலா ராமகிருஷ்ணுடு பேசுகையில், ''நாங்கள் 15-வது நிதிக்குழுவுக்கு எதிராக இல்லை. நிதிக்குழுவின் பரிந்துரைகளை வகுத்து அதற்கு அனுமதியளித்த மத்தியஅரசின் செயல்பாடுகளை கண்டிக்கிறோம். மாநில அரசுகளுடன் ஆலோசிக்காமல் கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன'' என்று தெரிவித்தார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேசுகையில், ''இந்த மாநாடு மத்தியஅரசின் கண்ணைத் திறப்பதுபோல் இருக்க வேண்டும். 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளால் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்கள் தண்டிக்கப்படுகின்றன. நிர்வாகத்தில் மோசமாக இருக்கும் மாநிலங்களுக்கு வெகுமதியும், அதிக நிதிஒதுக்கீடும் தரப்படுகிறது. போதுமான நிதியை ஒதுக்காவிட்டால், வளர்ந்த மாநிலங்கள் எப்படி செயல்பட முடியும்.
அனைத்து கூட்டங்களிலும் கூட்டாச்சி தத்துவத்தைப் பற்றி பேசும் பிரதமர் மோடி, உண்மையில் ஒரு சர்வாதிகாரி. மாநிலங்கள் உரிமைக்காகவே மத்திய அரசுக்கு எதிராக போராடுகிறோம்'' என்று ஆவேசமாகப் பேசினார்.
மேலும், 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளை காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதிஅமைச்சருமான ப.சிதம்பரமும் கடுமையாகக் கண்டித்துள்ளார். 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் என்பது மிகவும் குற்றமுடையது, குறையுள்ளது. நிர்வாகத்தில் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களைப் பாதிக்கும். ஏற்கெனவே வருவாயைத் தங்களின் பங்கினை இழந்து தவிக்கும் மாநிலங்களுக்கு இது மேலும் பாதிப்பாக அமையும் என்றார்.
15-வது நிதிக்குழுவின் பரிந்துரையால், வளர்ந்த மாநிலங்களுக்கு, குறிப்பாக தென் மாநிலங்களுக்கு வரி வருவாய் பாதிக்கும் என்று கூக்குரல்கள் எழுத் தொடங்கிவிட்டன.
ஆனால், எந்தவிதமான சலனமும் இல்லாமல் தமிழக அரசு தொடர்ந்து மவுனியாக இருப்பது ஏனோ தெரியவில்லை. ரூ.40 ஆயிரம் கோடியை இழக்க தமிழக அரசு தயாராகிவிட்டதா? அல்லது தமிழகத்தின் உரிமை தாரை வார்க்கத் துணிந்துவிட்டதா.

கருத்துகள் இல்லை: