செவ்வாய், 10 ஏப்ரல், 2018

மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி ,,,, வலுக்கும் குரல்கள் ... !

tamilthehindu : மேத்யூ இடிகுல்லா: இந்திய அரசியல் அரங்கில் ‘கூட்டாட்சி’
தத்துவம் குறித்து மீண்டும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்திருக்கிறது. கர்நாடக முதல்வர் சித்தராமையா சமீபத்தில் இதைத் தொடங்கிவைத்தார். கர்நாடகத்துக்கென்று தனி மாநிலக் கொடியை அறிமுகப்படுத்திய அவர், இதை மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் என்று கோரினார். எல்லா மாநிலங்களும் இதைப் பின்பற்ற வேண்டும் என்ற யோசனையுடன், மாநிலங்களுக்கு நிதி மற்றும் கலாச்சார சுயாட்சி அவசியம் என்று ‘ஃபேஸ்பு’க்கில் அவர் எழுதியது பரபரப்பாகப் பேசப்பட்டது.< தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகிய தெலுங்கு தேசக் கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடுவும் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துவருகிறார்.15-வது நிதிக் குழுவுக்கு வழங்கியுள்ள ஆய்வு வரம்புகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கும் காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகளைச் சேர்ந்த 10 மாநில முதல்வர்களுக்கும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். 1971-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில் அல்லாமல் 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொள்ளுமாறு நிதிக் குழுவுக்கு வரம்பு நிர்ணயித்திருப்பதால் தென்னிந்திய மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறையும் என்று அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார். தென்னிந்திய மாநிலங்கள் மக்கள்தொகைக் கட்டுப்பாடு திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தி மக்கள்தொகை பெருகாமல் கட்டுப்படுத்தியிருக்கும் நிலையில், ஊக்குவிக்கப்படுவதற்குப் பதிலாக, குறைந்த நிதி ஒதுக்கீடு மூலம் தண்டிக்கப்படும் நிலையிருப்பதை அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஒன்றியமா, கூட்டாட்சியா?
கூட்டாட்சி என்ற கொள்கை தொடர்பான இந்த நிகழ்வுகளின் பின்னணியில் மூன்று அம்சங்கள் இருக்கின்றன. முதலாவது, அரசியல் சட்டம் வழங்கியுள்ள மாநிலங்களுக்கான அதிகாரம், இரண்டாவது, அரசின் வரி வருவாயை மாநிலங்களுக்கு நியாயமாகவும் நடுநிலையாகவும் பிரித்தளிப்பதற்கான உத்தி, மூன்றாவது மாநில மக்களின் காக்கப்பட வேண்டிய மொழி – கலாச்சார உரிமைகள்.
“1947-ல் வலுவான மத்திய அரசுடன் மாநிலங்கள் சேர்ந்த ‘ஒன்றியமாக’ இந்தியா உருவானது, இப்போது மாநிலங்களின் ‘கூட்டாட்சி’யாக வடிவெடுத்துவருகிறோம்” என்று சித்தராமையா தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்திய அரசியல் சட்டத்தின் முதல் கூறு, இந்தியாவை ‘மாநிலங்களின் ஒன்றியம்’ என்றே கூறுகிறது. 1948 நவம்பர் 4-ல் அரசியல் சட்டத்தை வகுப்பதற்கான நிர்ணய சபையில் இதற்கான தீர்மானத்தை அவைத் தலைவர் அம்பேத்கர் கொண்டுவந்தார். இந்தியாவை ஏன் ‘ஒன்றியம்’ என்று அழைக்க வேண்டும், ‘மாநிலங்களின் கூட்டாட்சி’ என்று ஏன் அழைக்கக் கூடாது என்று சிலர் கேட்டனர். “இந்தியா ஒரு கூட்டாட்சி நாடாகவே இருக்க விரும்பினாலும் மாநிலங்களெல்லாம் கூடி உருவானதல்ல இந்த நாடு; இந்த நாட்டிலிருந்து பிரிந்துபோக எந்த மாநிலத்துக்கும் உரிமை இல்லை என்பது ஏற்கப்பட்டே இது நாடாக ஏற்கப்பட்டிருக்கிறது. இந்தக் ‘கூட்டாட்சி’ ஏன் ‘ஒன்றிய’மாக இருக்கிறது என்றால் இதை யாராலும் அழிக்கவோ உடைக்கவோ முடியாது” என்று அம்பேத்கர் பதிலளித்தார்.
பொறுப்பும் கடமையும்
நாடு சுதந்திரம் அடைந்தது முதல் பல்வேறு மாறுதல்களைச் சந்தித்திருக்கிறது. பெரிய மாநிலங்கள் சிறு சிறு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அரசியல் சட்டத்தின் 3-வது கூறு, புதிய மாநிலங்களைப் பிரிக்க நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் அளித்திருக்கிறது. இதன் மூலம் மத்திய அரசுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மாநிலங்கள் சிதறிவிடாமல் இணைத்து வைத்துக்கொள்ளும் பொறுப்பும் மாநிலங்களின் ‘துணை தேசிய’ உணர்வுகளை மதித்து நடக்கும் கடமையும் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
அவ்வப்போது மாநிலங்கள் பிரிந்தும் இணைந்தும் வேறு வடிவம் எடுத்தாலும், மத்திய அரசுடனான உறவில் எந்த மாற்றமும் கிடையாது. எனவே, இந்தியா ‘ஒன்றியம்’ என்ற அமைப்பிலிருந்து ‘கூட்டாட்சி’ என்ற சுயாதிகார அமைப்புக்கு மாறிக்கொண்டிருப்பதாகக் கூறிவிட முடியாது. எனினும், 70 ஆண்டுகளாக மாநிலங்களை இழுத்து வைத்துக்கொண்டிருக்கும் மத்திய அரசின் சாதனையைப் பாராட்டினாலும், மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் இப்படியே தொடர வேண்டுமா அல்லது அவற்றை மாற்றலாமா என்றும் பரிசீலிக்க வேண்டும்.
மத்திய, மாநில உறவுகள் சீராக இருந்தாலும் அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவைப் பயன்படுத்தி மாநில அரசுகளை மத்திய அரசு கலைக்கலாம்; குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தலாம் என்பதெல்லாம் கூட்டாட்சி தர்மத்துக்கு விரோதமானவை. கூட்டாட்சிக் கொள்கையை வலியுறுத்தும் தீவிர அரசியல் இயக்கங்கள், ஜனநாயக நாட்டில் இந்த காலனியாதிக்க ஆட்சியின் எச்சம் எதற்காக என்று கேள்வியெழுப்ப வேண்டும். இது கூட்டாட்சி உணர்வுக்கே எதிரானது என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும்.
வெற்றிகரமான கூட்டாட்சிக்கு…
கடந்த இரு பத்தாண்டுகளில் அரசியல், பொருளாதார அதிகாரங்கள் மத்திய அரசிடமிருந்து மாநிலங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. 25 ஆண்டுகளுக்குப் பிறகு மத்தியில் வலுவான, தனிப்பெரும்பான்மையுள்ள அரசு அமைந்திருப்பதால் இனி இந்த அதிகாரங்கள் மத்திய அரசு வசம் சென்றுவிடும் என்று சிலர் கருதினார்கள். மத்திய ஆளும் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை வலுவும், கூட்டணிக்கு அதைவிட அதிக இடங்களும் கிடைத்திருந்தாலும் ‘கூட்டுறவுக் கூட்டாட்சி’ என்ற கொள்கையே பின்பற்றப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி தந்து அந்த அச்சங்களைப் போக்கினார். 14-வது நிதிக் குழு 2015-ல் வழங்கிய பரிந்துரையில் மத்திய அரசின் வரி வருவாயிலிருந்து மாநிலங்களுக்குப் பிரித்துத் தரக்கூடிய பங்கை 32%-லிருந்து 42% ஆக உயர்த்த வேண்டும் என்று கூறியிருந்தது. அதை அப்படியே மத்திய அரசு ஏற்றது. ஆனால், அதன் பிறகு மாநிலங்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இந்தியை ஆட்சிமொழியாக்க மத்திய அரசு தீவிரம் காட்டியதால் கர்நாடக மாநிலம் தன்னுடைய மொழி, கலாச்சார உரிமைகளை வலியுறுத்தும் செயல்களில் இறங்கியது. வட இந்திய மாநிலங்களுக்கு அதிக நிதி கிடைக்கும் வகையில் பரிந்துரைப்பதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள விசாரணை வரம்புக்கு எதிராக இப்போது தென் மாநிலங்கள் ஒன்றுதிரண்டு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயல்பட்ட தென் மாநிலங்களுக்குப் பாதிப்பு நேர்ந்துவிடாமலிருக்க 1971-ம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது. மக்கள்தொகை அடிப்படையில்தான் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படுகிறது. தென் மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகள் குறைக்கப்படாமலிருக்க அரசியல் சட்டத்துக்கு 42-வது திருத்தம் கொண்டுவரப்பட்டு, இப்போதுள்ள எண்ணிக்கை இன்னும் 25 ஆண்டுகளுக்கு இப்படியே தொடருமாறு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2001-ல் இது மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. இம்மாதிரியான அரசியல் சமரசங்கள் இப்போது சோதனைக்குள்ளாக்கப் படுகின்றன.
கூட்டாட்சி என்பது பல்வேறு மாநிலங்களுக்கு இடையில் நிலவும் நம்பிக்கையையும், மத்திய அரசின் மீதான நம்பிக்கையையும்தான் பெரிதும் சார்ந்திருக்கிறது. தங்களுடைய வளர்ச்சியை சகித்துக்கொள்ள முடியாமல் மத்திய அரசு வேறு சில மாநிலங்களுக்குச் சாதகமாகச் செயல்படுகிறது என்ற எண்ணம் ஒரு பிரிவு மாநிலங்களுக்கு ஏற்பட்டுவிட்டால் கூட்டாட்சி என்ற தன்மையே அங்கு சேதப்பட்டுவிடுகிறது. நாட்டின் பொருளாதாரத்துக்குத் தென் மாநிலங்கள் கணிசமாக உதவினாலும் அரசியல்ரீதியாக அவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை; கலாச்சார ரீதியாகவும் அவை தாழ்த்தப்படுகின்றன. அரசியல் சட்டப்படியும் நிதியாதாரம் தொடர்பாகவும் கலாச்சார தளங்களிலும் மாநிலங்களுக்கு ஏற்படும் கவலைகளை மத்திய அரசு உடனடியாகக் கவனித்து சரிசெய்யாவிட்டால் கூட்டாட்சியில் உள்ள மாநிலங்களுக்கு இடையிலான பிளவுகள் மேலும் வலுத்துக்கொண்டே செல்லும்!
– மேத்யூ இடிகுல்லா, சட்டம்-
அரசின் கொள்கை ஆய்வு மைய
ஆராய்ச்சி ஆலோசகர்.
தமிழில்: சாரி, © தி இந்து ஆங்கிலம்.

கருத்துகள் இல்லை: