புதன், 11 ஏப்ரல், 2018

அமெரிக்காவில் கேரளா குடும்பம் வீதியில் ஓடிய ஆற்று வெள்ளத்தில் மூழ்கி உயிரிழப்பு..

அமெரிக்காவில் காணாமல் போன இந்தியர் குடும்பம் ஆற்று வெள்ளத்தில் மூழ்கி உயிரிழப்பு?மாலைமலர்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் காரில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்கள் காணாமல் போன நிலையில் அவர்கள் ஆற்று வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. நியூயார்க்: இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் சந்தீப் தொட்டப்பிள்ளி(42). அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள யூனியன் வங்கியில் பணியாற்றிவரும் இவர் தனது மனைவி, குழந்தைகளுடன் வலேன்சியா நகரில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், மனைவி சவுமியா(38), மகன் சித்தாந்த்(12), மகள் சாச்சி(9) ஆகியோருடன் தனது காரில் ஆரெகான் மாநிலத்தில் உள்ள போர்ட்லான்ட் நகருக்கு சென்ற சந்தீப், கடந்த வியாழக்கிழமை கலிபோர்னியா நோக்கி திரும்பி கொண்டிருந்தார். வரும் வழியில் சான் ஜோஸ் நகரில் உள்ள உறவினர்களை மறுநாள் (வெள்ளிக்கிழமை) சந்திப்பதாக அவர் தெரிவித்திருந்தார். ஆனால், ஞாயிற்றுக்கிழமை வரை சந்தீப் குடும்பத்தாரை அவரது உறவினர்கள் தொடர்பு கொள்ள இயலவில்லை. இதையடுத்து, காரில் சென்ற சந்தீப் தனது குடும்பத்தாருடன் காணாமல் போனதாக சான் ஜோஸ் நகர போலீசாரிடம் அவரது உறவினர்கள் புகார் அளித்தனர்.


கருஞ்சிவப்பு நிறம் கொண்ட ‘ஹோன்டா பைலட்’ காரில் அவர்கள் பயணித்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புகாரை வைத்து போலீசார் விசாரணை நடத்தியபோது போர்ட்லான்ட் அருகேயுள்ள யுரேகா நகரில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தேசிய பூங்கா அருகே அவர்களது கார் காணப்பட்டதற்கான தடயங்கள் கிடைத்தன.
 இதற்கிடையில், அருகாமையில் உள்ள ஈல் ஆற்றில் கடந்த வெள்ளிக்கிழமை (6-4-2018) பெருக்கெடுத்து பாய்ந்து, கரை புரண்டு ஓடிய வெள்ளத்தில் கருஞ்சிவப்பு நிறம் கொண்ட ‘ஹோன்டா பைலட்’ கார் ஆற்றில் மூழ்கியதாக அப்பகுதி போலீசார் கண்டுபிடித்தனர்.

பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தின் வேகத்தாலும், போதிய வெளிச்சம் இல்லாததாலும் அந்த காரை உடனடியாக மீட்க முடியாமல் போனதாக போலீசார் குறிப்பிடுகின்றனர்.

வெள்ளத்தில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்ட காரை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் ஒருபுறம் நடைபெற்றுவரும் நிலையில் தேடப்படும் சந்தீப் குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சென்ற காரும், வெள்ளத்தில் சிக்கிய காரும் ஒரே நிறம் மற்றும் தயாரிப்பை கொண்டதாக இருப்பதால் சந்தீப் குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் வெள்ளத்தில் மூழ்கி இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் சில அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

கருத்துகள் இல்லை: