சனி, 14 ஏப்ரல், 2018

ஆண் காவலர்களை வைத்து எங்களை சோதிப்பதா?- மனவேதனையில் வலிப்பு வந்து விழுந்த பெண் உதவி இயக்குநர்

நேற்று பிரதமருக்கு கருப்புக் கொடி காட்ட வந்த உதவி இயக்குநர்களில் பெண்
உதவி இயக்குநர்களின் உடைகளை ஆண் காவலர்களை வைத்து சோதிக்கச் சொன்னதாக மனவேதனையில் பேட்டி அளித்த பெண் உதவி இயக்குநர் வலிப்பு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மோடியின் சென்னை வருகையைக் கண்டித்தும் நேற்று தமிழகம் முழுவதும் கருப்புக் கொடி காட்டப்பட்டது. அனைத்து அரசியல் கட்சிகள், வியாபாரிகள் சங்கத்தினர், இளைஞர்கள், மாணவர்கள், விவசாயிகள், திரைத்துறையினர் என பலதரப்பட்டவர்களும் கருப்பு உடை அணிந்து தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் விமான நிலையம் வரும் பிரதமருக்கு கருப்புக் கொடி காட்ட திரைத்துறை உதவி இயக்குநர்கள் சிலர் வடபழனியிலிருந்து மெட்ரோ ரயில் ஏறி ஆலந்தூர் செல்ல ரயில் நிலையத்துக்கு வந்தனர். அப்போது இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீஸார் அவர்களை சந்தேகப்பட்டு கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
அங்கு அடைபட்டிருந்தவர்களிடம் சோதனை நடத்த ஆய்வாளர் உத்தரவிட்டுள்ளார். இதில் பெண் உதவி இயக்குநர்களையும் ஆண் காவலர்களை வைத்தே சோதித்துள்ளார். இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது அந்த பெண் உதவி இயக்குநரை இன்ஸ்பெக்டர் சந்துரு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. பின்னர் சோதனையால் அவமானத்தால் குறுகிப்போன அந்தப் பெண் உதவி இயக்குநர் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.
பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டதும், வடபழனியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த உதவி இயக்குநர்கள் விடுவிக்கப்பட்டனர். அப்போது, வெளியே வந்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர்கள் பேட்டி அளித்தனர். அதில் ஒரு பெண் உதவி இயக்குநர் கதறி அழுதபடி பேட்டி அளித்தார். ''நாங்கள் என்ன செய்தோம் எங்களை பெண் என்றும் பாராமல் மிரட்டி ஆண் காவலர்களை வைத்து சோதிக்க இன்ஸ்பெக்டர் உத்தரவிட்டார்'' என்று அழுதபடியே கூறினார்.
''நான் என்ன பாவம்செய்தேன்? என்னை மட்டும் இன்ஸ்பெக்டர் மிரட்டினார். இவளைப் பிடித்து புழல் ஜெயிலில் போடுங்கள் என்று மிரட்டினார்'' என்று கதறி அழுதபடி கூறியவர் அப்படியே வலிப்பு வந்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பெண் உதவி இயக்குநர்களின் குற்றச்சாட்டை‌‌ வடபழனி போலீஸார் மறுத்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஆயுதம் ஏதேனும் வைத்துள்ளனரா என பெண் போலீஸாரை வைத்தே சோதனையிட்டதாகவும், அத்துமீறி எதுவும் நடக்கவில்லை என்றும் போலீஸார் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: